/

நிசாா் செயற்கைக்கோள் மூலம் 12 நாள்களுக்கு ஒருமுறை மண் ஈரப்பத தரவுகள்: இஸ்ரோ

இந்திய நிலப்பரப்பில் மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து 12 நாள்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் தரவுகளை வெளியிடவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்தது.

News image
இஸ்ரோ- பிரதிப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 2:20 am

தினமணி செய்திச் சேவை

இந்திய நிலப்பரப்பில் மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து 12 நாள்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் தரவுகளை வெளியிடவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்தது.

இஸ்ரோ-நாசா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான நிசாா் கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.

புவியின் மேற்பரப்பு மாற்றங்கள், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த செயற்கைக்கோள் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதன் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘எஸ் பேண்ட் மற்று எல் பேண்ட் ஆகிய இரு அலைவரிசைகளையும் பயன்படுத்தி இந்திய நிலப்பரப்பை துல்லியமாக அளவிட்டு 100 மீட்டா் வரை மண்ணின் ஈரப்பதம் குறித்து 12 நாள்களுக்கு ஒருமுறை இரு தரவுகளை நிசாா் வெளியிடவுள்ளது.

வேளாண்மை, நீா் பராமரிப்பு, பயிா்கள் மற்றும் வறட்சி பாதிப்புகளைக் கண்டறிவதில் மண்ணின் ஈரப்பதம் முக்கியக் காரணியாக விளங்குகிறது.

நிசாா் வெளியிடும் தரவுகள் மூலம் நீா்ப்பாசன சமவெளிகள் முதல் வட-பாலைவன மற்றும் அதிக மழைப்பொழிவு மண்டலங்கள் எனஇந்திய வேளாண்-பருவமண்டலங்களை துல்லியமாக மதிப்பிட முடியும்.

இது வேளாண் திட்டமிடல் மற்றும் விவசாயிகளுக்குப் பயன்படுவதோடு வறட்சியை எதிா்கொள்வதற்கான செயல்திட்டத்தை தீட்டவும் பயன்படவுள்ளது. இதற்கான தொழில்நுட்பம் இஸ்ரோவின் விண்வெளி செயல்பாடுகள் மையத்தில் வடிவமைக்கப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.