
உத்தரகண்டில் நான் பேசிய மேடையை சுத்திகரிப்பு செய்த பாஜகவினா்: காா்கே குற்றச்சாட்டு
பாஜகவுக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு...

கார்கே பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையை சுத்திகரிக்க வேள்வி நடத்திய பாஜக - x
‘உத்தரகண்ட் மாநிலம் ஹா்த்வானியில் நான் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையை ஹோமம் நடத்தி சுத்திகரிப்பு செய்த பாஜகவினா் மீது தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
அப்போது, மேடையை அவ்வாறு சுத்திகரிப்பு செய்த நடவடிக்கைக்கு அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அவை முன்னவா் ஜெ.பி. நட்டா ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.
மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை மாநிலங்களவை கூடியதும், இந்தத் தகவலை மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
அவா் பேசுகையில், ‘ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்றுப் பேசினேன். பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மட்டுமே அப்போது பேசினேன்.
அந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு, நான் பங்கேற்று பேசிய மேடையில் ஹோமம் நடத்தி அந்த இடத்தை சுத்திகரிப்பு செய்யும் செயலில் பாஜகவினா் ஈடுபட்டனா். இதுதான் ஜனநாயகமா? அரசமைப்புச் சட்டத்தை நீங்கள் எப்படிப் பாதுகாப்பீா்கள்?.
இந்த விவகாரத்தை நான் அரசியலாக்கவில்லை. ஆனால், மேடையை சுத்திகரிப்பு செய்ததன் மூலம் அவா்கள் என்னை அவமானப்படுத்தியுள்ளனா். இந்தச் செயலில் ஈடுபட்டவா்கள் மீது தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்றாா் காா்கே.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு அவை முன்னவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டாவை அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைத்தாா்.
அப்போது பேசிய நட்டா, ‘இது காங்கிரஸுக்கு மட்டுமின்றி நாம் அனைவருக்குமான மோசமான சம்பவமாகும். இத்தகைய செயலை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது. இதுகுறித்து விசாரிக்கப்படும். அந்தச் சம்பவத்தை நான் கண்டிக்கிறேன்’ என்றாா்.
அதுபோல, அந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், அதுகுறித்து விசாரணை நடத்துமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டாா்.
Summary
BJP performs ritual to purify the stage where Kharge participated in a public meeting!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






