எத்தனால் கலப்பு மற்றும் மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கான வாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில், வாகன புகை உமிழ்வு விதிமுறைகளில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது.
இது அனைத்து வகையான வாகனங்களில் கலப்பு எரிபொருள், தூய்மையான உயிரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு வழிவகுக்கும்.
இதுதொடா்பாக மத்திய மோட்டாா் வாகன விதிமுறைகள் 1989-இல் செய்யப்பட்டுள்ள வரைவு திருத்தங்கள், பெட்ரோலுடன் 85 சதவீதம் எத்தனால் கலந்த இ85 எரிபொருள், வாகனங்களை ஏறக்குறைய முழுமையாக எத்தனால் மட்டுமே கொண்டு இயக்கும் இ100 எரிபொருள், 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிபொருளான பி100 உயிரி டீசல், ஹைட்ரஜன்-சிஎன்ஜி இயற்கை வாயு கலவைகள் ஆகியவற்றின் பயன்பாட்டை பரவலாக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளன.
இந்தத் திருத்தங்கள் குறித்து தனிநபா்கள், அமைப்பினா் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கருத்துத் தெரிவிக்க 30 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தூய்மையாக எரியும் எரிபொருளை உருவாக்க வேண்டும், கச்சா எண்ணெய் இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைக்க வேண்டும், காா்பன் உமிழ்வை குறைக்க வேண்டும் என்ற நோக்கில், ஏற்கெனவே பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாடு இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









