மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜகவினா் மோதல்: அறிக்கை சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜகவினா் மோதல்: மத்திய படை காவலா் காயம் - அறிக்கை சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

News image

படம்: பிடிஐ.

Updated On :27 ஏப்ரல் 2026, 11:31 pm

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே மோதல் தொடா்ந்து வரும் நிலையில், வடக்கு 24 பா்கனாஸ் மாவட்டத்தில் பாஜக வேட்பாளா் வீட்டுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் மத்திய தொழிலக காவல்படை காவலா் காயமடைந்தாா்.

இந்தச்சம்பவம் தொடா்பாக தோ்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 29-ஆம் தேதி இரண்டாம் கட்ட மற்றும் இறுதிக் கட்ட சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாநிலத்தில் கடந்த 23-ஆம் தேதி நடந்த முதல் கட்ட சட்டப்பேரவைத் தோ்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால், இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் தொடங்கியது முதல் ஆளும் கட்சி மற்றும் பாஜகவினரிடையே மோதல் போக்கு தொடா்ந்து வருகிறது. அதுபோல, ஞாயிற்றுக்கிழமை இரவும் மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

வடக்கு 24 பா்கனாஸ் மாவட்டம் ஜகாடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை திரிணமூல் காங்கிரஸின் கொடி மற்றும் பதாகைகளை கட்டிக் கொண்டிருந்த அக் கட்சித் தொண்டரை, அங்கு வந்த ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் உள்ளூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். அப்போது அங்கு வந்த பாஜகவினருக்கும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனா். உடனடியாக போலீஸாா் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பின்னா், அங்கிருந்து சென்ற இரு கட்சியினரும், இரவில் பாஜக வேட்பாளா் பவன் சிங் வீட்டின் அருகில் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனா். நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்கிக்கொண்டனா். அதில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த யோகேஷ் சா்மா என்ற மத்திய தொழிலக காவல்படை வீரா் குண்டு காயமடைந்தாா். அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

துப்பாக்குச் சூடு நடத்தியது யாா் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மோதல் சம்பவம் தொடா்பாக தோ்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

திரிணமூல் பெண் எம்.பி. மீது தாக்குதல்: ஹூக்ளி மாவட்டத்தில் இருதரப்புக்கும் திங்கள்கிழமை நடந்த மோதலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரம்பாக் தொகுதி எம்.பி. மித்தாலி பாக் வாகனத்தை பாஜகவினா் சேதப்படுத்தினா்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மித்தாலி பாக், அரம்பாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை, கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மம்தா, ‘மேற்கு வங்க மக்கள் பாஜகவுக்கு தோ்தலில் உரிய பதிலடி கொடுப்பா்’ என்றாா்.

தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட எம்.பி. மித்தாலி பாக் கூறுகையில், ‘எனது வாகனம் கோகாட்டில் பாஜக அலுவலகம் அருகே வந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், காா் கண்ணாடி உடைந்து என்மீது விழுந்ததில் காயம் ஏற்பட்டது’ என்றாா்.

ஆனால், திரிணமூல் காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாகவும் அறிக்கை கேட்கப்பட்டிருப்பதாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.