/

5 புலிகள் மர்ம மரணம்? பழிதீர்க்க விஷம் வைத்து கொலையா?

கர்நாடகத்தில் சரணாலயத்தில் 5 புலிகள் உயிரிழந்த விவகாரத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்டது உறுதியானது.

News image

கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2025, 5:49 am

கர்நாடகா மாநிலத்தில் மாதேஸ்வரன் மலையில் 5 புலிகள் உயிரிழந்த சம்பவத்தில், அவற்றுக்கு விஷம் வைக்கப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

அப்பகுதியில் அமைந்துள்ள கால்நடை வளர்ப்பகத்தில் ஒரு பசுவை புலி கொன்றதால், அதற்கு பழிதீர்ப்பதற்காகவே, கொல்லப்பட்ட பசுவின் உடலில் விஷத்தை பசுவின் உரிமையாளரின் மகன் செலுத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது.

முன்னதாகவே, புலிகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது குற்றவியல் சட்டத்தில் வழக்குப்பதிவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18-ஆவது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடகத்தின் மாதேஸ்வரன் மலை காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயமானது பாலாறு, மாதேஸ்வரன் மலை, ஹூக்கியம், ராமாபுரம், கொள்ளேகால், அனூர், பி.ஜி. பாளையம் ஆகிய வனச் சரகங்களை உள்ளடக்கியது.

இந்த நிலையில், ஹூக்கியம் வனச் சரகத்தில் உள்ள மின்னியம் காட்டுப் பகுதியில் மாரி அணை கேம்ப் என்ற இடத்தில் 5 புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், புலிகளின் உடல்களைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்து கிடந்த தாய்ப் புலி மற்றும் அதன் 4 குட்டிகளின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை. அப்படியென்றால், அவை விஷம் வைத்துத்தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, காட்டின் எல்லையோரப் பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பவர்கள், தங்கள் மாடுகளை காட்டு விலங்குகள் கொல்வதால், கொல்லப்படும் கால்நடையின் உடலில் விஷத்தைக் கலந்து விடுவதாக காட்டுயிர் மேம்பாட்டு அமைப்பு கூறுகிறது. அவர்கள் கூறியதுபோலவே, இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.