/

மாநிலங்களவையில் ப.சிதம்பரத்தின் தியானம்!

மாநிலங்களவையில் "இந்தியா' கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புகிடையே, காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரத்தின் "தியானம்' சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2023, 9:17 pm

மாநிலங்களவையில் "இந்தியா' கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புகிடையே, காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரத்தின் "தியானம்' சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
 மணிப்பூர் விவகாரத்துக்கு விதி எண் 267-இன் கீழ் (பிரதமரின் பதிலுரையுடன்) விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி "இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை அவை கூடிய போது, காலை 11.25 மணிக்கு அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடி கேள்வி நேரம் தொடங்கியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் இருந்தபடியே கோஷங்களை எழுப்பிவிட்டு பிற்பகல் 12.30 மணியளவில் வெளிநடப்பு செய்தனர்.
 பின்னர், மீண்டும் அவை பிற்பகல் 2 மணிக்கு கூடியபோதும், சுமார் அரை மணி நேரம் "இந்தியா' கூட்டணி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
 தான் தயாரித்துள்ள 9 அம்சங்களை வலியுறுத்துவதற்காக பேச அனுமதிக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கோரினார். ஆனால், அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் இதற்கு இணங்கவில்லை. எதிர்க்கட்சியினர் கோரிக்கையை நிராகரித்த அவர், மணிப்பூர் விவகாரத்துக்கு விதி 176-இன்படி இரவு வரை விவாதம் நடத்தலாம் என்றும், விதி எண் 267 விவாதத்தை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.
 பின்னர், "இந்தியா' கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பகுதி முழுமையாக காலியாக இருந்த நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் ப. சிதம்பரம் மட்டும் தனது இருக்கையில் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். இதை ஆளும் கட்சி உறுப்பினர்களும் அவைத் தலைவரும் கவனித்தனர்.
 பின்னர், அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், "இது தான் சரியான தீர்வு. நான் எனது நண்பர் சிதம்பரத்தைப் பாராட்டுகிறேன். அவர்கள் (வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள்) இதைப் பின்பற்றுவதில்லை' என்றார்.
 உடனே விழித்து எழுந்த சிதம்பரம் சமயோசிதமாக "நான் "தியான'த்தில் (மெடிடேஷன்) இருந்தேன். வெளிநடப்பு செய்தவர்களைக் குறைகூறக் கூடாது. நீங்கள் (அவைத் தலைவர்) கருத்துவேறுபாடு கொண்டுள்ள குரலுக்கும் மதிப்பளிக்க வேண்டும்' எனக் கூறி வெளியேறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.