அரசுக் கட்டடங்களிலிருந்து அலுவலகத்தை காலி செய்யும் ஏர் இந்தியா
அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வரும் ஏர் இந்தியா குழுமத்துக்குச் சொந்தமான அலுவலகங்களை காலி செய்யும் முனைப்பில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது.


புது தில்லி: அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வரும் ஏர் இந்தியா குழுமத்துக்குச் சொந்தமான அலுவலகங்களை காலி செய்யும் முனைப்பில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது.
டாடா குழுமத்துக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு ஏர் இந்தியா அலுவலகங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாற்ற திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் தேசியமயமாக்கப்பட்டு சுமார் 69 ஆண்டுகளுக்குப் பின், ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் வசம் வந்தது. இதையடுத்து, படிப்படியாக மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களை டாடா குழுமத்தின் கட்டடங்களுக்கு மாற்றும் பணி தொடங்கியிருக்கிறது.
கைமாறிய ஏர் இந்தியா
கடந்த ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சமாளிக்கும் வகையில் தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. இதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்புக்கொண்டது.
சுமார் 70 ஆயிரம் கோடி இழப்பில் ஏர் இந்தியா நிறுவனம் இயங்கி வந்ததால் விமானங்களைப் பராமரிப்பதிலும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் நிர்வாக ரீதியாக சிக்கல் ஏற்பட்டது.
இதனால் அதனை தனியாருக்கு விற்பனை செய்யும் வகையில் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் பல்வேறு பெருநிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், டாடா நிறுவனம் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 69 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமான நிலையில் தற்போது ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.
ஏர் இந்தியாவுக்கும் டாடாவுக்குமான தொடர்பு என்ன?
கடந்த 1932-ஆம் ஆண்டு ஏா் இந்தியா நிறுவனத்தை ஜேஆா்டி டாடா தொடங்கினாா். அப்போது அந்த நிறுவனம் டாடா ஏா்லைன்ஸ் பெயரில் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு 1946-ஆம் ஆண்டு இந்நிறுவனம் ஏா் இந்தியாவாக பெயா் மாற்றம் பெற்றது.
1948-ஆம் ஆண்டு சா்வதேச விமான சேவையை துவக்கிய ஏா் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 49 சதவீத பங்குகளும், டாடாவுக்கு 25 சதவீத பங்குகளும், இதர பங்குகள் பொதுமக்களிடமும் இருந்தது.
அதன் பிறகு, கடந்த 1953-இல் ஏா் இந்தியா நிறுவனம் தேசியமாக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவனத்தை தொடங்கிய டாடா நிறுவனத்துடனே ஏா் இந்தியா ஐக்கியமாகியது.
மேலும், ஏர் இந்தியா நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள விமான நிலையங்களில் 1800 இறங்குதளங்களையும், 4,400 விமான நிறுத்துமிடங்களையும் (பார்கிங் ஸ்டாட்) கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...