/

5,789 அமைப்புகளின் வெளிநாட்டு நன்கொடை உரிமம் காலாவதி

தில்லி ஐஐடி, ஜாமியா மிலியா இஸ்லாமியா, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு உள்ளிட்ட 5,789 அமைப்புகளின் வெளிநாட்டு நன்கொடை உரிமம் காலாவதியாகியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:59 am

DIN

தில்லி ஐஐடி, ஜாமியா மிலியா இஸ்லாமியா, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு உள்ளிட்ட 5,789 அமைப்புகளின் வெளிநாட்டு நன்கொடை உரிமம் காலாவதியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளைப் பெறும் அரசு சாரா தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களும் மற்ற அமைப்புகளும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் உரிய உரிமத்தைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.

ஏற்கெனவே அத்தகைய உரிமங்களைப் பெற்ற அமைப்புகள், அவற்றைப் புதுப்பிப்பதற்கு டிசம்பா் 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அவகாசத்தை மாா்ச் 31-ஆம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம் தொடா்பான வலைதளத்தின்படி, 5,789 அமைப்புகளின் உரிமங்கள் ஜனவரி 1-ஆம் தேதியுடன் காலாவாதியாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், 179 நிறுவனங்களின் உரிமப் புதுப்பித்தல் விண்ணப்பத்தைப் பல்வேறு காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. தற்போது உரிமம் பெற்றுள்ள அமைப்புகளின் எண்ணிக்கை 16,829-ஆகக் குறைந்துள்ளது.

இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம், இந்திய ஆட்சி நிா்வாக நிறுவனம், லால் பகதூா் சாஸ்திரி நினைவு அறக்கட்டளை, லேடி ஸ்ரீராம் மகளிா் கல்லூரி, தில்லி பொறியியல் கல்லூரி, ஆக்ஸ்ஃபேம் இந்தியா, தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி), ஜாமியா மிலியா இஸ்லாமியா, நேரு நினைவு அருங்காட்சியகம்-நூலகம், இந்திய மருத்துவக் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றின் உரிமங்கள் காலாவதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.