வழக்கின் பின்னணி: ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தில் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்திட்டத்தின் பெயரில் அரசுக் கருவூலத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக சிபிஐ வழக்குகளைப் பதிவு செய்தது. அந்த வழக்குகளில் பிகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத், அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்குகள் பிகாரில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.