க்யூட் - யுஜி 2026 நுழைவுத்தேர்விலும் பிரச்சினை ஏற்பட்டதால் மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு 2026 (க்யூட்)’ தோ்வு தேசிய தோ்வுகள் முகமையால் (என்டிஏ) சனிக்கிழமை (மே 30) பல மையங்களில் நடைபெற்றது. கணினி முறையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்விலும் தேர்வு தொடங்கும் முன் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் நாடெங்கிலும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது?
சியூஇடி (க்யூட்) தேர்வு சனிக்கிழமை (மே 30) காலை மற்றும் மதியம் என இரு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. காலையில் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு 9 மணிக்கும் மதியம் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு 3 மணிக்கும் தேர்வு தொடங்கப்படும் என்று அந்தந்த மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்வு தொடங்கும் ஒன்றரை மணிநேரம் முன்பாகவே தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட இடங்களுக்குச் சென்று தயாராக காத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, இன்று பல தேர்வு மையங்களில் காலை 7.30 மணிக்கெல்லாம் சென்று தேர்வெழுத தயாராக இருந்த மாணவர்கள் பலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு ஆரம்பமாகாததால் அதிர்ச்சியடைந்தனர். காலை 9 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய தேர்வு காலை 10.30 மணியைக் கடந்தும் ஆரம்பிக்கப்படவில்லை.
இதைப் பற்றி மாணவர்கள் அங்குள்ள தேர்வு மைய மேற்பார்வையாளர்களை வினவினர். அவர்களோ முறையான பதிலளிக்கவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், சுமார் 2 மணிநேர தாமதத்துக்குப்பின் பகல் 12 மணியளவில் தேர்வு ஆரம்பமானது.
அதேபோல, மதியம் 1.30 மணிக்கெல்லாம் தேர்வு மையங்களுக்குச் சென்று தயாராக இருந்த தேர்வர்களும் உரிய நேரத்தில் தேர்வு ஆரம்பமாகாததால் சோர்வடைந்தனர். சுமார் ஒரு மணிநேர தாமதத்துக்குப்பின் மாலை 4 மணிக்கு தேர்வு ஆரம்பமானது.
இந்தியாவில் இரண்டாவது பெரிய தேர்வான க்யூட் - யுஜி பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட தேர்வுக்கான மையங்கள் பல, நகர்ப் பகுதிகளிலிருந்து தொலைதூரத்தில் அமைந்திருந்தன. இதனால், காலை 7.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குச் சென்றடைய வேண்டிய மாணவர்கள் தம் பெற்றோர்களுடன் அதிகாலையிலேயே வீடுகளிலிருந்து புறப்பட்டுச் சென்றடைந்தனர்.
ஆனால், தேர்வு தாமதமாகத் தொடங்கும் என்பதைப் பற்றி அவர்களிடம் முறையாக தகவல் அறிவிக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. உரிய நேரத்தில் தேர்வு தொடங்காததால், தேர்வு ரத்து செய்யப்பட்டதா என்ற சந்தேகமும் தேர்வெழுதும் மாணவர்களிடையே எழுந்தது.
என்டிஏ - டிசிஎஸ் விளக்கம் :
இந்த நிலையில், என்டிஏ தரப்பில் தேர்வு குளறுபடி ஏன் என்பதைக் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதில், கணினி முறையில் தேர்வு நடத்தும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஐஓஎன் நிறுவனத்தின் சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், உரிய நேரத்தில் தேர்வு ஆரம்பமாகாமல் போனதற்கான காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து, டிசிஎஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், ‘சிறியளவில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறால் காலையில் நடைபெறவிருந்த க்யூட் தேர்வு சுமார் 2 மணிநேரமும் மதியம் நடைபெறவிருந்த தேர்வு சுமார் ஒரு மணிநேரமும் தாமதமானது.
பிரச்சினை சரியாக அடையாளம் காணப்பட்டு, எங்களுடைய தொழில்நுட்பக் குழுக்களால் சரிசெய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தேர்வு எவ்வித தாக்கத்திற்கும் இடமின்றி நடைபெற்றது. இந்த அசௌகரியத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறோம்.
எங்களுடைய குழுக்கள் அனைத்து அமைப்புகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கணினி முறையில் நடத்தப்படும் தேர்வுகளை சுமுகமாக நடத்த என்டிஏவுடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
CUET-UG delayed at some centres due to technical glitch
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










