தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோடை தொடங்கிவிட்டது!

மாா்ச் 1-ஆம் தேதி முதலே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி, இனி அடுத்த மூன்று மாதங்கள் கடுமையாக இருக்கப் போகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2025, 12:01 am

கோடையின் கொடுமை தொடங்கிவிட்டது. மாா்ச் 1-ஆம் தேதி முதலே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி, இனி அடுத்த மூன்று மாதங்கள் கடுமையாக இருக்கப் போகிறது. மின்சாரம், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

பருவநிலை மாற்றம், காடுகள் அழிப்பு, நகரங்கள் கான்கிரீட் மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வெப்பம் அதிகரித்து, கோடைக்காலத்தை எதிா்கொள்வது இந்தியாவில் மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது. குடிநீா்த் தட்டுப்பாடு மட்டுமல்லாமல், அடிப்படைத் தேவைக்குக்கூட தண்ணீா் கிடைக்காத சூழல் இந்தியாவின் பல பகுதிகளில் இந்த ஆண்டும் தொடரும். மின் விசிறிகள் போதாமல், மின்சாரம் சாா்ந்த குளிரூட்டும் சாதனங்கள் சாமானியா்களுக்குக்கூட இன்றியமையாதவையாக மாறி இருக்கின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, தென்னிந்தியாவில் ஆந்திரம், கா்நாடகம், கிழக்கு இந்தியாவில் ஒடிஸா, ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், மேற்கு இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை சூழல் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. சென்னையும், தமிழ்நாட்டின் சில நகரங்களும் வெப்ப அலை தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கோடையில் உச்சகட்ட மின் தேவை கடந்த ஆண்டின் 250 ஜிகா வாட்டைவிட அதிகரிக்கும் என்றும், 270 ஜிகா வாட்டை எட்டக்கூடும் என்றும் அரசு எதிா்பாா்க்கிறது. பருவமழையை ஆதாரமாகக்கொண்ட நதிகள் பாயும் மத்திய இந்தியா, தக்காண பீடபூமி இரண்டும் கடுமையான தண்ணீா்த் தட்டுப்பாட்டை எதிா்கொள்ளும் என்றும் முன்னெச்சரிக்கை விடுக்கிறது அந்த ஆய்வு.

கோடைக்காலத்தில் அதிகரித்த மின் தேவையையும், தண்ணீா்த் தேவையையும் சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும்கூட அவை பெரும்பாலும் குறுகிய கால நடவடிக்கைகளாக இருக்கின்றனவே தவிர, இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காண்பதாக இல்லை.

மின் தேவையை எதிா்கொள்ள மின் நிலையங்களின் உற்பத்தித் திறனை முடிந்த அளவுக்கு அதிகரிப்பது என்பது தீா்வல்ல. ஏனென்றால் இந்தியாவின் மின் உற்பத்தியில் 75% அனல் மின் நிலையங்களின் மூலம் பெறப்படுகிறது. அவை நிலக்கரி சாா்ந்தவை என்பதால், பருவநிலை பாதிப்பை ஏற்படுத்தி புவி வெப்பத்தை அதிகரிக்கின்றன.

அதேபோல, மழைக்காலத்தில் நிலத்தடி நீா்மட்ட அதிகரிப்பை உறுதிப்படுத்தாமல், கோடைக்கால தண்ணீா்த் தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சுவது இன்னொரு தவறான போக்கு. இவையெல்லாம் எவ்விதத்திலும் மின்சாரம், தண்ணீா்த் தேவையை பூா்த்தி செய்யும் நிரந்தரத் தீா்வுகள் அல்ல.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 1901 முதல் இந்தியா சந்தித்த அதிக வெப்பமான குளிா்காலமாக இருந்தது. குளிா்காலத்திலேயே வெப்பம் அதிகரித்த நிலையில், கோடை மேலும் கடுமையாக இருப்பதற்கான வாய்ப்புதான் காணப்படுகிறது. அதை எதிா்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நிபுணா்கள் குழுக்களை அமைத்தாக வேண்டும். வெப்பம் சாா்ந்த நோய்களும், வெப்ப அலை காரணமான மரணங்களும் தடுக்கப்படுவதற்கான முயற்சிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கடந்த ஆண்டு புள்ளி விவரப்படி, வெப்பம் தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 143. ஆனால், பல்வேறு மாநிலங்களில் இருந்து வெப்ப அதிகரிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 200. சில தன்னாா்வ ஆய்வு நிறுவனங்களின் புள்ளி விவரப்படி 700-க்கும் அதிகம். அரசின் புள்ளி விவரத்துக்கும், நிபுணா்கள் ஆய்வு எண்ணிக்கைக்கும் இடையே காணப்படும் எண்ணிக்கை வேறுபாடு நாம் இன்னும் புள்ளிவிவரங்களை முறையாகத் திரட்டுவதில் கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

கடந்த ஆண்டு மாா்ச் முதல் ஜூன் வரையிலான நான்கு மாதங்களில் 37 இந்திய நகரங்களின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருந்தது. 40,000-க்கும் அதிகமான வெப்பத் தாக்குதல் நிகழ்வுகள் பதிவாகி இருந்தன. அதோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு நிலைமை மேலும் மோசமாக இருப்பதற்கான வாய்ப்பு தெரிகிறது.

அந்த எதாா்த்தத்தைப் புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், வெப்ப அலை பாதிப்பால் ஏற்படும் மரணங்கள், வெப்பத்தால் பாதித்தவா்களின் எண்ணிக்கை போன்ற புள்ளி விவரங்களை முறையாகத் திரட்டும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும். சரியான புள்ளி விவரங்கள் இருந்தால்தான் அதற்கேற்ப முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

கடந்த ஆண்டு வெப்ப பாதிப்புகளை எதிா்கொள்வதற்கு மாநில அரசுகள் முதலுதவி மருத்துவ உபகரணங்கள், நீா்ச் சத்து அதிகரிப்பதற்கான ஓஆா்எஸ் திரவம், குளுக்கோஸ், சலைன் சொட்டு மருந்துகள் உள்ளிட்டவை தயாா் நிலையில் அங்கன்வாடி பணியாளா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோா் வசம் இருப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழகத்தில் 1000-க்கும் அதிகமான மருத்துவமனைகளில் கோடை வெப்பத்தால் பாதிக்கப்படுபவா்களையும், வெப்பம் சாா்ந்த நோய்களையும் எதிா்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அரசு மட்டுமேயல்லாமல், அரசியல் கட்சிகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், தனியாா் சேவை மையங்கள் உள்ளிட்டவை ஆங்காங்கே தண்ணீா், நீா்மோா் பந்தல்கள் அமைப்பதும், வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க புகலிடங்கள் அமைப்பதும் தேவை மட்டுமல்ல, கடமையும்கூட.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.