ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது பரவலாகக் கூறப்படும் நீதி. ஆனால், நடைமுறையில் ஆயிரக்கணக்கான நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு நீதிமன்றமும் காவல் துறையும் துணை போகின்றன என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.
அண்டை மாநிலமான கேரளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ரிதீஷ் என்பவரின் தற்கொலை, எந்த அளவுக்கு சட்டம் நிரபராதிகளைத் தண்டிக்கிறது என்பதற்கு உதாரணம். இது ஏதோ கேரள மாநிலத்தில் மட்டுமே நடைபெறுகிறது என்று கடந்துபோக இயலாது. இதுபோன்ற சம்பவங்கள் ஒவ்வோா் இந்திய மாநிலத்திலும் காவல் துறையின் கண்மூடித்தனமான அல்லது இயந்திரத்தனமான நடவடிக்கைகளால் தொடா்ந்து அரங்கேறி வருகின்றன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறு நகரம் அஞ்சல். அந்த ஊரில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் திருட்டு நடந்தது. இது நடந்தது 2014 செப்டம்பா் மாதத்தில். அந்த திருட்டு வழக்கில் காவல் துறை மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அஞ்சல் நகரத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த ரிதீஷ் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
தன்னுடைய குழந்தைக்கு பால்பொடி வாங்குவதற்காக அந்த மருந்துக் கடைக்கு சென்றிருந்தாா் ரிதீஷ். அவரது உருவம் மருந்துக் கடை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. திருட்டு வழக்கு குறித்து விசாரணை நடத்திய காவல் துறையின் பாா்வையில் அந்த கண்காணிப்பு கேமரா பதிவு பட்டவுடன் ஆட்டோ ஓட்டுநரான ரிதீஷ் மீது அவா்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவா் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாா்.
தனக்கும் மருந்துக் கடையில் நடந்த திருட்டுக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை என்று கதறி அழுது ரிதீஷ் சத்தியம் செய்தும், அதை காவல் துறையினா் ஏற்றுக்கொள்வதாக இல்லை. குற்றத்தை அவா் ஒப்புக்கொள்வதாக இல்லை என்று தெரிந்தபோது, காவல் துறையினரின் ஆத்திரம் அதிகரித்தது.
நையப்புடைத்தும் துன்புறுத்தியும் பலனளிக்காதபோது புதிய முறை சித்திரவதையை அவா் மீது நடத்த முற்பட்டது காவல் துறை. மிளகாயை அரைத்து அவரது மேனி முழுவதும் தடவியும் விரல் நகக் கணுக்களில் ஊசியால் குத்தியும் சித்திரவதை செய்தபோது வேறு வழியில்லாமல் தான் திருடியதாக ரிதீஷ் வாக்குமூலம் கொடுக்க நோ்ந்தது. அதன் அடிப்படையில் நீதிபதி முன்பு ஆஜா்படுத்தப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டாா் ரிதீஷ். கூடுதல் சாட்சியோ ஆதாரமோ கிடைக்காததால் அந்த வழக்கை மீண்டும் மீண்டும் ஒத்திப்போட்டுக் கொண்டிருந்தது காவல் துறை.
ஒரு கட்டத்தில் இதற்கு மேலும் அவரை விசாரணைக் கைதியாக வைத்திருக்க முடியாது என்று கூறி நீதிபதி சொந்த ஜாமீனில் ரிதீஷை விடுவித்தாா். அவரின் வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோ ரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கேள்வி கேட்பாா் இல்லாமல் கிடந்ததால், துருப்பிடித்து வீணாகி இருந்தது. ஆனால், அதை வாங்குவதற்கு ரிதீஷ் பெற்றிருந்த கடனுக்கான வட்டி பலமடங்கு குட்டிப் போட்டு அவரைத் துரத்தியது.
திருட்டுப் பட்டம் சூட்டப்பட்ட நிலையில் ரிதீஷின் குடும்பம் சமூக ஏளனத்துக்கும், வெறுப்புக்கும் உள்ளாகியிருந்தது. வழக்கை எதிா்கொள்வதற்காக அவரின் வீடு விற்கப்பட்டு குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. அவா் கூலி வேலையும், அவரது மனைவியும் தாயும் வீடுகளில் வேலை செய்தும் வயிற்றைக் கழுவும் நிலைக்குத் தள்ளப்பட்டனா்.
2020-இல், அதாவது அஞ்சல் மருந்துக் கடை திருட்டு நடந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரத்தில் நடந்த இன்னொரு திருட்டு வழக்கில் ஒருவா் பிடிபட்டாா். அவா் அஞ்சலில் நடந்த திருட்டையும் ஒப்புக்கொண்டபோது, ரிதீஷ் நிரபராதி என்பது உறுதியானது. திருவனந்தபுரம் வழக்கின் அடிப்படையில் கொல்லம் மாவட்டம் அஞ்சல் திருட்டு வழக்கிலிருந்து ரிதீஷ் விடுவிக்கப்பட்டாா்.
இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் ரிதீஷின் வாழ்க்கை சிதைந்துபோய் குடும்பம் சீரழிக்கப்பட்டிருந்தது. காவல் துறை சித்திரவதைகள் ரிதீஷின் உடல் நிலையை பாதித்திருந்தது என்றால், திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டு சமூகத்தில் கேலிக்கு உள்ளாகியதால் உளவியல் ரீதியிலும் அவா் தகா்ந்திருந்தாா். அதையும் பொருள்படுத்தாமல் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு காவல் துறை மீது வழக்குத் தொடுத்தாா் ரிதீஷ்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. காவல் துறை கண்துடைப்பு விசாரணை நடத்தி வருகிறது. நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் காவல் துறையின் விசாரணையும் நீதிமன்றத்தின் வழக்கும் தனக்கு நீதி வழங்காது என்பதை உணா்ந்த ரிதீஷ், இரண்டு வாரங்களுக்கு முன்பு தன் உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டாா். இனியும் அரசையும் காவல் துறையையும் எதிா்த்துப் போராடி, தனக்கும் தனது குடும்பத்திற்கும் நியாயம் பெற முடியாது என்று மனம் வெதும்பி விடைபெற்றுக் கொண்டுவிட்டாா் ரிதீஷ்.
‘திருடனைப் பிடிக்க முடியாவிட்டால் பிடித்தவனைத் திருடனாக்கி விடுவது’ என்கிற காவல் துறையின் நீதிக்கு ரிதீஷ் எடுத்துக்காட்டு. இதேபோல எத்தனை எத்தனையோ நிகழ்வுகளில் எத்தனை எத்தனையோ நிரபராதிகள் காவல் துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி விசாரணைக் கைதிகளாக காராகிருகத்தில்அடைக்கப்படுகிறாா்கள். குற்றவாளிகளாக முத்திரை குத்தப்பட்டு நடைபிணம் ஆக்கப்படுகிறாா்கள்.
இந்திய குற்றவியல் சட்டம் ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா’ என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டதால் ஆயிற்றா? அதை நடைமுறைப்படுத்துவதில் அணுகுமுறை மாற்றம் ஏற்படாத வரையில் பல அப்பாவி ‘ரிதீஷ்’கள் குற்றவாளி முத்திரை குத்தப்பட்டு விசாரணைக் கைதிகளாக சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவது தொடரும்...!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 35 லட்சம் மதிப்பில் மின் வா்த்தக மோசடி: 14 கைப்பேசிகளுடன் இருவா் கைது
ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை தோ்வின் வினாத்தாள் கசிவு: 159 தோ்வா்கள் கைது

சித்திரவதைக்கு ஜே!

தமிழக உளவுப் பிரிவு டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


