மத்திய அரசின் சுகாதார அமைச்சகம், மார்ச் 10-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையில், பட்டியலிட்டுள்ள கூட்டு மருந்துகளின் மூலக்கூறுகளை விவரித்துக் கொண்டே செல்கிறது. இந்த மூலக்கூறுகள் மருத்துவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடியவை; சாதாரண மக்களுக்குப் புரியாது. உதாரணமாக, நெமிசுலைட் + செட்ரிசைன் + காஃப்பைன் கூட்டு மருந்து, டைசைக்லோமைன் + டிரமட்டால் + பாராசிட்டமால் கூட்டு மருந்து உள்ளிட்டவை குறித்து சாதாரண மக்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. தடை செய்யப்பட்ட கூட்டு மருந்துகள் பட்டியலோடு, தற்போது மருந்துக் கடைகளில் புழக்கத்தில் உள்ள க்ரோசின் கோல்டு அன்டு ஃபுளு, டி-கோல்டு டோட்டல் உள்ளிட்ட மாத்திரை, மருந்துகளின் வணிகப் பெயர்களை வெளியிட்டால் மட்டுமே, சாதாரண மக்களுக்கு இது தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரியும். இல்லாவிட்டால் இது வெறும் மருத்துவ உலகம் சார்ந்த, யாருக்கும் தெரியாத ஒன்றாக முடிந்துபோகும்.