அமெரிக்காவில் கொடுக்கப்படும் அந்தப் பாதிச் சம்பளமே, இந்தியாவில் அதே தொழில் செய்பவருக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மூன்று, நான்கு மடங்கு அதிகம் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதற்காக இந்த சம்பள மோசடியை நியாயப்படுத்த முடியாது. இதில் சம்பந்தப்பட்ட கணினி நிறுவனங்கள் மட்டுமல்ல, இடைத்தரகர்களும் அந்த ஊழியரின் உழைப்பை மூலதனமாக்கி பயனடைகிறார்கள். இத்தகைய மோசடி காரணமாகத்தான் கடந்த இரு ஆண்டுகளாக, தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த இந்திய நிறுவனங்கள் விண்ணப்பித்த எச்1பி விசாக்களில் பாதிக்குப் பாதி மறுக்கப்பட்டன.