2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நீதிக்குள்ளுமா சாதி?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் விசாரணை நடத்தும் அறைக்குள் நுழைந்து கூச்சல் போட்டதோடு, "நீ உன் மாநிலமாகிய காஷ்மீருக்குப் போ' என்று தமிழக வழக்குரைஞர்கள் கோஷமிட்டிருக்கும் செயல் இந்திய அளவில் தமிழக நீதிமன்றங்களின் நிலையை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:44 am

ஆசிரியர்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் விசாரணை நடத்தும் அறைக்குள் நுழைந்து கூச்சல் போட்டதோடு, "நீ உன் மாநிலமாகிய காஷ்மீருக்குப் போ' என்று தமிழக வழக்குரைஞர்கள் கோஷமிட்டிருக்கும் செயல் இந்திய அளவில் தமிழக நீதிமன்றங்களின் நிலையை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் பால் வசந்தகுமார் பணியேற்றுள்ள இன்றைய சூழலில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கெளல் முன்பாக இவ்வாறு கோஷமிடுவதால் நேரிடக்கூடிய எதிர்வினை எப்படி இருக்கும் என்று சட்டம் படித்தவர்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கவில்லை? ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் பால் வசந்தகுமாரைப் பார்த்து, "நீ தமிழ்நாட்டுக்குப் போ' என்பார்கள். இது இங்குள்ள வழக்குரைஞர்களுக்குத் தெரியாதா அல்லது தெரிந்திருந்தும், வேண்டுமென்றே காஷ்மீர் வழக்குரைஞர்களை வம்புக்கிழுப்பதற்காக இதுபோன்ற விஷமங்களில் ஈடுபடுகின்றனரா?

இந்த கோஷங்களை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் எழுப்பிடக் காரணம், "காலியாக உள்ள 18 நீதிபதி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். இரு தவணைகளில் நியமிக்கக் கூடாது. ஏற்கெனவே பிரதிநிதித்துவம் பெற்ற சமூகத்தினருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது. இடஒதுக்கீடு வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்துவதும், இதில் தலைமை நீதிபதி மாறுபட்ட கருத்து கொண்டிருப்பதும்தான்.

ஏற்கெனவே 9 பேர் கொண்ட பட்டியல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக வழக்குரைஞர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியது. சில சாதியினரை நீக்கிவிட்டு, சில சாதியினரைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் அந்தப் போராட்டத்தின் கோரிக்கை.

இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மூண்ட சாதிச் சண்டை, ஒருவரை வாசலில் போட்டு அடித்ததை உலகம் முழுதும் பார்க்க வைத்தது. அதற்கு முன்பு, வழக்குரைஞர்களுக்கும் போலீசாருக்கும் நடைபெற்ற போரை, ஊடகங்கள் மூலம் உலகம் பார்த்தது. சில தினங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சங்கத் தேர்தல் முடிவைக் கொண்டாடியபோது ஒரு வழக்குரைஞர் கொலை செய்யப்பட்டார்.

இவை யாவும் வழக்குரைஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் தன்வசம் இழந்து அரசியல் சாய்வுகளுக்கு ஆட்பட்டு விட்டார்கள் என்பதையும், அரசியல் என்பது கொள்கைகளை இழந்து சாதி அடையாளங்களில் சிக்கிவிட்டது என்பதையுமே காட்டுகின்றன.

உயர்நீதிமன்றத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் பலவும் 150 ஆண்டு கால சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றை களங்கப்படுத்திவிட்டன. இதுபோதாதென, தற்போது நீதிபதியை "உன் ஊருக்குப் போ' என்று சொல்லும் அளவுக்குத் தாழ்ந்திருக்கிறது.

வழக்குரைஞர்களின் நடத்தை மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ள தலைமை நீதிபதி கெளல், "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிலரைத் தண்டிக்கிறோம். உயர்நீதிமன்றத்தை மதிக்க வேண்டிய வழக்குரைஞர்களே மதிக்காமல் செயல்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள்? பெருமை வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கேடு விளைவிக்காதீர்கள்' என்று கூறியுள்ள வார்த்தைகள், வெறும் வழக்குரைஞர்களுக்கானது மட்டுமல்ல, தமிழர் அனைவருக்கும் சொன்ன வார்த்தைகள்.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த அளவுக்கு ஆகிப்போனதன் காரணம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் அரசியல் புகுந்ததுதான். அரசியல் கட்சிகள் தங்களுக்கு வேண்டிய, சாதகமான நபர்களை நீதிபதிகளாகப் பரிந்துரைக்கவும், அழுத்தம் கொடுக்கவுமான போக்கு 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிகமானது. தகுதி இல்லாவிட்டாலும், குற்றம் குறை இருந்தாலும் காவல் துறை சான்றொப்பத்தை ஏற்றவாறு பெற்று நீதிபதிகளை பணியமர்த்தினார்கள். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட நீதிபதிகள் அரசியல்வாதிகளுக்குப் பூங்கொத்து கொடுப்பதும், அவர்களது இல்லத் திருமணத்துக்கு செல்வதும், இவர்களது இல்லத் திருமணத்துக்கு அரசியல் படை வருவதும் சர்வ சாதாரணமானது.

நாளடைவில், சாதிக் கட்சிகள் அரசியலுக்கு வந்த பின்னர், நம் கட்சியின் அனுதாபி என்ற நிலை மாறி, நம் சாதிக்காரர் என்பதாக பரிந்துரைகள் மாறத் தொடங்கின. நீதிபதி நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. எல்லா மாநிலங்களிலும் இந்த நிலைமை உண்டு என்றாலும், தமிழ்நாட்டில் மட்டுமே மிக மோசமாக இருக்கிறது.

ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தின் பெயர் கெட்டுக் கிடக்கிறது. இதில் சாதி அடையாளங்களும் சேர்ந்து கொண்டால், ஒரு நீதிபதி வழங்கும் ஒவ்வொரு தீர்ப்பும், அவரது சாதி, வழக்கில் வெற்றி பெற்ற வழக்குரைஞரின் சாதியை வைத்து பேசப்படும் இழிநிலை தமிழகத்தில் உருவாகிவிடும். அவர் திமுக அனுதாபி, காங்கிரஸ் அனுதாபி, அதிமுக அனுதாபி, அவர் கம்யூனிஸ்ட் என்கிற தற்போதைய அடையாளம் போய், அவர் இன்ன சாதி, இன்ன சமயம் என்ற அடையாளப்படுத்தப்பட்டால் அது நீதிக்கு அழகாகுமா?

சட்டத்தில் ஆழ்ந்த அறிவும், நடுநிலை கோடாத, உணர்ச்சிவசப்படாதவர்தான் நீதிபதியாக இருக்கத் தகுந்தவர். "...வழக்கு இழந்தவர்தாம் மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர் முறை உறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி ஈர்வதோர் வாள் ஆகும்மே' என்கிறாள் ஒளவை. நீதிபதி பதவி வெறும் அதிகாரம் தரும் பதவி மட்டுமல்ல. மூன்று தலைமுறைக்கு கண்ணீரையும் கொடுத்துவிடும் அபாயமுள்ள பதவி.

நீதிக்குள் சாதியையும் சாதிக்குள் நீதியையும் திணிப்பது முறையல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.