மத்திய அரசின் நேரடித் திட்டங்கள் பல, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போதே குறைக்கப்பட்டுவிட்டன. மொத்தம் 360 திட்டங்கள் இருந்தது 66 திட்டங்களாகக் குறைக்கப்பட்டுவிட்டன. இந்த 66 திட்டங்களுக்காக மன்மோகன் சிங் அரசு கடந்த ஆண்டு ரூ.3,38,562 கோடி ஒதுக்கி இருந்தது. 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திற்காக மத்திய அரசின் திட்டங்களுக்காக மட்டும் செய்யப்பட்டிருக்கும் ஒதுக்கீடு ரூ.6.6 லட்சம் கோடி.பிரதமர் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், பிரதமர் கிராமப்புறப் பாசனத் திட்டம், பிரதமர் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் போன்ற 66 திட்டங்கள், மத்திய அரசின் நிதியுதவியுடனும், மாநில அரசின் பங்களிப்புடனும் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களுக்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், இவற்றை முழுமையாக மாநிலங்களால் பயன்படுத்தப்பட முடியவில்லை என்பது உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் குறை. இதுபோன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு 25% மட்டுமாக இருத்தல் வேண்டும் என்பது தமிழகத்தின் கருத்து.