சி.பி.ஐ. விசாரணை, கைதுகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமன்றி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எனப் பலரும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் பல அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார்கள். இந்த மோசடியில் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாகப் புகார் எழுந்தநிலையில், அஸ்ஸாம் மாநிலத்தின் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சங்கர் பருவா தற்கொலை செய்து கொண்டார். தற்போது, உள்துறையின் முன்னாள் செயலர் அனில்கோஸ்வாமி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.