சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

குடும்ப வன்முறையும் நிர்பயா நிதியும்!

மகளிர் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியைப் பயன்படுத்துவது எவ்வாறு என்று மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:08 am

ஆசிரியர்

மகளிர் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியைப் பயன்படுத்துவது எவ்வாறு என்று மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. இதன்படி, நிர்பயா நிதிக்கு முகமை அமைப்பாக (நோடல் ஏஜென்ஸி) மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படும். மகளிர் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை இந்த அமைச்சகத்திடம் அளித்து, அவர்கள் பரிந்துரைக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சகம் அதைப் பரிசீலித்து நிதி ஒதுக்கீடு செய்யும்.

2012 டிசம்பர் 16-ஆம் தேதி புது தில்லியில் துணை மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவில் கொலை செய்யப்பட்ட பின்னர் ஆண்டொன்றுக்கு ரூ.1,000 கோடி நிர்பயா நிதி என்ற பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை ரூ.3,000 கோடி குவிந்துள்ள இந்த நிதி பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சாலைப் பயணங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான, சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டத்துக்கு ரூ.50 கோடியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்டத்துக்கு ரூ.150 கோடியும் 2014-15ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அண்மைக்காலமாக நடைபெற்ற பாலியல் வன்முறைகள் சம்பவங்களில் பெரும்பாலானவை உழைக்கும் மகளிர் மீதானவை. ஆகவே, அது தொடர்பான திட்டங்களும் அவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இதனால், நாட்டில் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைத் தடுக்கவோ, அவர்களுக்குப் பாதுகாப்பு பெறவோ இயலாமல் போகும். பாலியல் வல்லுறவுக் கொலைக்குப் பிறகு உருவாக்கப்பட்ட நிதி என்பதால், இதை அரசும் மற்ற அமைப்புகளும் பாலுறவு சார்ந்த குற்றங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதாகக் கருதுவதும், அவை சார்ந்த திட்டங்களை மட்டுமே முன்வைப்பதும் பெண்களின் பாதுகாப்புக்குப் பெருந்துணையாக அமையாது.

மகளிர் மீதான வன்முறை என்கின்றபோது பாலியல் சார்ந்த வன்முறைகளோடு, ஒரு பெண் தனது வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து துன்பங்களும் அதில் இடம் பெறுகின்றன. இளவயதுத் திருமணம், கட்டாயத் திருமணம், கணவனால் தாக்கப்படுதல், கணவனால், புகுந்த வீட்டினரால் தரக்குறைவாக ஏசப்படுதல், கண்ணியக் குறைவாக நடத்தப்படுதல், மானபங்கம், வரதட்சிணைக் கொடுமை, கட்டாயக் கருக்கலைப்பு, களவுகால வாக்குறுதி மீறல் (டேட்டிங் அப்யூஸ்), அமில வீச்சு, கெüரவக் கொலை, மகளிர் மற்றும் குழந்தைகள் கடத்தல் எனப் பலவிதமான வன்முறைகள் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகின்றன. இந்த வன்முறைகளில் 90 சதவீதம் வீட்டில்தான் நடக்கின்றன.

பாலியல் வன்முறைகளில் 90 சதவீதம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்த நபர்களால் நடத்தப்படும் சம்பவங்களே. குடும்பத்துக்குள்ளே இருப்பவர்கள் 1.6%, உறவினர்கள் 6.4%, அண்டைவீட்டார் 34.7%, பெண்ணுக்கு அறிமுகமான நபர்கள் 57% என்பதாக இவை அமைகின்றன. ஆகவே, பெண்ணின் வீட்டுக்கு வெளியே ஏற்படும் வன்முறைகளிலிருந்து பாதுகாக்கும் திட்டங்கள் அவசியம் என்றாலும், அதே வேளையில் வீட்டுக்குள் துன்புறும் பெண்களைப் பாதுகாக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.

இத்தகைய குடும்ப வன்முறைகள் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்வதே மிகமிக அரிதாகவே இருக்கிறது. இதை நியாயப்படுத்தும்விதமாக, குடும்பத்துக்குள் சமரசமாகப் போய்விடுவார்கள் என்கிற பொருந்தா வாதம் முன்வைக்கப்பட்டாலும், உண்மையான காரணம், இத்தகைய வழக்குகள் குற்ற வழக்குகள் (கிரைம்) பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதாலும், குற்ற வழக்குப் பட்டியல் பெரிதாக இருப்பின், அந்தப் பகுதியில் சட்டம் - ஒழுங்கு சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்பதாகக் கருதப்படுவதால், தங்கள் "காவல் நிலையத்தைப் பாதுகாக்கும்' பணியில் காவலர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதுதான். இதனால், மகளிர் மீதான வன்முறைப் புகார்கள் பலவும் பதிவாகாமலேயே மறைக்கப்பட்டு விடுகின்றன.

இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், மகளிர் மீதான வன்முறைகள் அனைத்தையும் தனிப் பட்டியலிடவும், அவற்றை வழக்கமான கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி, அடிதடி போன்ற புகார் பட்டியலில் சேர்க்காத நடைமுறையும் தேவை. இதை அரசு ஒரேயொரு உத்தரவில் செய்துவிட முடியும்.

குடும்ப வன்முறை குறித்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம், பாதுகாப்பு தேடலாம் என்கிற நம்பிக்கையை பெண்களிடம் ஏற்படுத்தும் திட்டங்கள் இன்று இன்றியமையாதவை.

குடிகாரக் கணவனின் அடி பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவை குடிசைப் பகுதிகளிலேயே அதிகம் நடப்பதால், இத்தகைய குடும்ப வன்முறை குறித்து நடுத்தர வருவாய்ப் பிரிவினரோ அல்லது சமூகத்தின் உயர்குடியினரோ கவலைப்படுவதில்லை.

குடும்ப வன்முறைகளின்போது, உடனடியாக வெளியேறி ஓர் இரவுப் பொழுதைப் பாதுகாப்பாக கழிக்க வகை செய்யும் "அடைக்கல இல்லங்கள்' அனைத்து நகரங்களிலும் உருவாக்கப்பட்டால், ஏழை மகளிருக்கு மட்டுமன்றி, அனைத்து மகளிருக்கும் பயனுள்ளதாக அமையும். குடும்ப வன்முறை குறித்தும், பாச அணைப்பு, காம அணைப்பு குறித்தும் விழிப்புணர்வுப் படத்தை பள்ளி மாணவிகளுக்காக மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. அதை விரைவுபடுத்த வேண்டும்.

மகளிர் மீதான குடும்ப வன்முறையைத் தடுப்பது குறித்தும் அரசு திட்டமிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.