/

வேரறுப்பது எப்போது?

சத்தீஸ்கர் மாநிலம் பீஜாப்பூரிலும், தர்பா என்கிற இடத்திலும் கடந்த 12ஆம் தேதி நடந்த வெவ்வேறு தாக்குதல்களில், ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் என்று 14 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:09 am

ஆசிரியர்

சத்தீஸ்கர் மாநிலம் பீஜாப்பூரிலும், தர்பா என்கிற இடத்திலும் கடந்த 12ஆம் தேதி நடந்த வெவ்வேறு தாக்குதல்களில், ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் என்று 14 பேர் பலியாகி இருக்கிறார்கள். தேர்தல் குழுவினர் பயணம் செய்த பேருந்து மீதும், பாதுகாப்புப் படையினர் பயணம் செய்த ஆம்புலன்ஸ் மீதும் கண்ணி வெடித் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், படுகாயம் அடைந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தியிருப்பதை வெறித்தனம் என்றுதான் கூற முடிகிறது.

பீஜாப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை முடித்துவிட்டுத் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் திரும்பிக் கொண்டிருந்த தேர்தல் பணியாளர்களின் பேருந்து கண்ணி வெடியால் தாக்கப்பட்டது. பயங்கர ஆயுதங்களுடன் அந்த வாகனத்தைச் சூழ்ந்து கொண்ட தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள், தேர்தல் பணிகளை முடித்துக் கொண்டு ஜகதாப்பூர் மாவட்டத்திற்கு ஆம்புலன்ஸில் திரும்பிக் கொண்டிருந்த துணை ராணுவப் படையினரும் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்த முறை பொதுமக்களும் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 11 மாதங்களில் நடைபெற்றிருக்கும் மிகப்பெரிய தாக்குதல்களான இந்தச் சம்பவங்களில் மற்றொரு சோகம் - பாதுகாப்புப் படையினர் போதிய தற்காப்பு இல்லாமலும், இது போன்ற தாக்குதல்களை எதிர்பார்த்து செயல்படாமலும் இருந்ததும்தான்!

நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதிகளில் பணிபுரியும் பாதுகாப்புப் படையினர் பொதுமக்கள் பயணிக்கும் வாகனங்களில் பயணிக்கலாகாது என்று விதிமுறை இருக்கிறது. இது தெரிந்தும், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சில துணை ராணுவப் படையினர், அந்த வழியாகச் சென்ற ஆம்புலன்ûஸ நிறுத்தி அதில் ஏறி ஜகதாப்பூருக்கு செல்ல முற்பட்டிருக்கிறார்கள். ராணுவ உடையுடன் வீரர்கள் ஆம்புலன்ஸில் ஏறியதை மறைந்திருந்து கண்காணித்த தீவிரவாதிகள், அடுத்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள். தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்நோக்கி செயல்படாதது பாதுகாப்புப் படையினரின் மதியீனமும் பொறுப்பற்றத்தனமுமாகும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தனர். அப்படியே வாக்களிப்பதாக இருந்தாலும் "நோட்டா'வுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றும் பொதுமக்களை எச்சரித்திருந்தனர். அதனால்தானோ என்னவோ, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காணப்பட்ட 67 விழுக்காடு வாக்களிப்பு, இந்த முறை 52 விழுக்காடாகக் குறைந்துவிட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், வாக்களிப்பு விழுக்காடு குறைந்துவிடாமல் இருப்பதற்காக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பல கட்டமாக வாக்களிப்பைப் பிரித்து நடத்தியதும் ஓரளவுக்கு பயனளித்தன என்றுதான் கூற வேண்டும். அதையும் மீறி, எட்டு வாக்குச்சாவடிகளில் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பல இடங்களில் அவர்கள் வைத்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் அவை வெடிக்காமல் போயின.

தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல்கள் அவர்களது இயக்கத்தின் பின்னடைவையும், தவிப்பையும்தான் வெளிப்படுத்துகின்றன. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டும்கூட, அவர்களது தீவிரவாத நடவடிக்கைகளாலும், பிரசாரங்களாலும், பஸ்தர் போன்ற மலைப் பகுதிகளில் வாழும் ஆதிவாசிகளை இந்திய அரசின் மீது முழுமையாக நம்பிக்கை இழக்கச் செய்ய முடியவில்லை என்பது தெளிவு. இல்லையென்றால், மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள அந்த ஆதிவாசிகள் கடந்த தேர்தலில் 67 விழுக்காடும், இந்தத் தேர்தலில் 52 விழுக்காடும் வாக்களித்திருக்க வழியில்லை.

ஆள் பலம், பண பலம், ஆயுத பலம், அறிவுஜீவிகளின் ஆதரவு என்று எல்லா வகையிலுமே மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதரவு இழந்து வருகிறார்கள். இதை கடந்த ஆண்டு கூடிய மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் மத்தியக் குழுவே ஒப்புக் கொண்டிருக்கிறது. மக்களின் நன்மதிப்பையும், செல்வாக்கையும் பெற்ற திறமையான அதிகாரிகளை கடத்திச் சென்றது இயக்கத்தைக் கடுமையாக பாதித்திருப்பதுடன், மக்கள் செல்வாக்கையும் இழக்கச் செய்திருக்கிறது.

ஆதிவாசிகளின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நிர்வாகம் அமைந்தால் மட்டுமே தீவிரவாத இயக்கத்தின் ஆணி வேரை அறுத்தெறிய முடியும். அதை ஆட்சியில் இருப்பவர்கள் உணரப் போவது எப்போது என்பதுதான் தெரியவில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.