முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பெயரளவுக்குத்தான் பிரதமராக இருந்தாரே தவிர, மேலதிகமான நிர்வாக முடிவுகளை அமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜியும், ப. சிதம்பரமும்தான் எடுத்தார்கள். மத்திய அமைச்சர்களின் குழுக்கள், உயரதிகார அமைச்சர்களின் குழுக்கள் இரண்டிலுமே அவர்கள்தான் இடம் பெற்றிருந்தனர். துறைக்குப் பொறுப்பேற்ற அமைச்சரும், பிரதமரும் எடுக்க வேண்டிய முடிவுகளை, இந்தக் குழுக்களிடம் ஒப்படைத்து பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் உபாயம் கையாளப்பட்டது. சில வேளைகளில் கட்சி அமைச்சர்களை அடக்கி வைப்பதற்கும், மணிசங்கர் அய்யர், ஜெயராம் ரமேஷ், ஜெயந்தி நடராஜன் போன்று தன்னிச்சையாக செயல்பட விழைத்த காங்கிரஸ் அமைச்சர்களின் கைகளைக் கட்டிப் போடவும்கூட இந்தக் குழுக்கள் பயன்பட்டன.