சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்திருக்கும் தீர்ப்பு, மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பான கருத்தாக்கத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களும் பல ஆண்டுகளுக்குப் பிறகே நிராகரிக்கப்பட்டுள்ளதால், அவர்களும் தூக்கிலிடப்படுவதிலிருந்து தப்புவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.