நிர்வாகம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களும், உத்தரவுகளும் அரசியல் தலைமைக்கும், நிர்வாக இயந்திரத்திற்கும் இடையிலான பிரச்னையில் தலையிடுவதாகக் கருதுவது தவறு. உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய வழிகாட்டுதல், வாகனங்களில் சிவப்பு விளக்கு வைத்துக் கொள்வது பற்றியது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மட்டுமல்ல, ஏதாவது வாரியம் அல்லது அரசு சார்ந்த கமிட்டி, ஆய்வுக் குழு போன்றவற்றில் நியமிக்கப்பட்டவர்களும் சிவப்பு விளக்கு சுழல வாகனங்களில் வளைய வருகிறார்கள். அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளும் கூடத் தங்கள் வாகனத்தில் அரசு வாகனம் என்பதாக எழுதிக் கொள்கிறார்கள். அச்சாபீஸ் வைத்திருப்பவர்கள்கூட பத்திரிகையாளராகத் தங்களது வாகனங்களை "பிரஸ்' என அடையாளம் காட்டுகிறார்கள்.