/

தண்ணீர் தேக்க உதவாத ஸ்ரீவைகுண்டம் அணை

தாமிரவருணி ஆற்றுத் தண்ணீரை கடலில் வீணாக கலக்கவிடாமல் தடுக்கும் வகையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே ஸ்ரீவைகுண்டத்தில் அணை  கட்டப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:07 am

தி. இன்பராஜ்

தாமிரவருணி ஆற்றுத் தண்ணீரை கடலில் வீணாக கலக்கவிடாமல் தடுக்கும் வகையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே ஸ்ரீவைகுண்டத்தில் அணை  கட்டப்பட்டுள்ளது. அந்த அணை மூலம் மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன. இந்த விவசாய நிலங்களை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வடகால், தென்கால் பாசன வாய்க்கால்களுடன் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அணையானது 8 அடி தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அணை கட்டப்பட்டு ஏறத்தாழ 145 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதிகளவில் மணல் சேர்ந்து மேடாகி காணப்பட்ட நிலையில் அணைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணி பெயரளவுக்கு நடைபெற்றது. தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெறாததால் அணையில் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளது.

தூர்ந்துபோன அணையால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்க வழியின்றி ஆண்டுக்கு ஏறத்தாழ 10 முதல் 15 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. வீணாகும் தண்ணீரால் கோடைக்காலங்களில் பாசனக் கால்வாய்களில் தண்ணீரின்றி பயிர்கள் கருகி, விவசாயப்பணிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது. அணையில் உள்ள தண்ணீரை முழுமையாக பயன்படுத்த முடியாத சூழலை நீடித்து வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். தண்ணீர் கிடைப்பதே அரிதாகி வரும் காலச் சூழலில் கிடைக்கும் தண்ணீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அரசின் அனைத்து நடவடிக்கையும் இருக்க வேண்டும் என உலக தண்ணீர் நாள் வேண்டுகோளாக விவசாயிகள் எதிர்பார்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.