அன்று ஆண்டாள், திருவரங்கப் பெருமானின் திருவடி சேர்ந்தது எப்படி? உயிரும், சதையுமான மானிட குலத்துப் பெண், கல்லாகச் சமைந்திருந்த அனந்தசயனப் பெருமாளோடு இரண்டறக் கலந்துவிட்டாள் என்பதை அறிவியல்பூர்வமாக ஏற்க மறுக்கும் நிதர்சனவாதிகள், இப்படிப்பட்ட சந்தேகத்தைக் கிளப்புவது இயல்பானதே. அதை தமது கட்டுரைக்கான ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டு ஒரு ஆய்வாளர் விமர்சித்திருப்பதும் அவர்களைப் பொருத்தவரை நியாயமாக இருக்கலாம். ஆனால், அது எங்கே தவறாகிறது எனில், அந்த விஷயத்தை ஆன்மீக தர்க்க விவாதங்கள் நடக்குமிடத்து எவரேனும் முன்வைத்திருப்பின், அப்போது அது பகுத்தறிவுக்குரிய விஷயமாகக் கருத வாய்ப்புண்டு. ஆனால், வைரமுத்து அதைச் செய்தது, ஆண்டாளின் புகழைப் பேசவென்று சென்றிருந்த ஒரு சபையில், அவளுக்குகந்த மார்கழி மாதத்துப் பெருவிழவு நேரத்தில், அவளுக்காகவென்றே பாங்குற அமைக்கப்பட்ட ஒரு சபை நடுவில் என்பதால் இந்தக் கருத்து தற்போது மிகப்பெரும் பலியைச் சுமக்க நேரிட்டுவிட்டது.