வாடியா, நாடியாவை இந்தியப் படங்களில் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில் உடனடியாக பிரதான ஹீரோயின் ஆக்கி விடவில்லை. முதலில் சூதாட்ட விடுதியில் அடிமைத் தொழில் செய்யும் இளம்பெண் வேடத்திலும், ஒரு பாடலுக்கு நடுவில் ஸ்ப்ரிங் கூந்தலுடனும், பளிச்சிடும் நீல விழிகளுடனும் நடமாடும் கவர்ச்சிக் கன்னியாகவும் நடமாட விட்டார். இதனால், இந்திய ரசிகர்களிடையே மேரி இவான்ஸ், நாடியாவாக நீலக் கண்களுடன் பச்சக்கெனப் பதிந்து போனார். அதன் பிரதிபலிப்பு தேஷ் தீபக் பட வெற்றியில் வெளிப்படையாகத் தெரிந்தது. அதைத் தொடர்ந்து ‘நாடியா’ நூரி யமன் திரைப்படத்தில் இளவரசி பரிஷாத்தாக வந்தார். அவர் இடம்பெற்ற அத்தனை திரைப்படங்களிலுமே மேரியின் சர்கஸ் மற்றும் ஸ்டண்ட் திறமைகளைக் காண்பிக்கும் வண்ணம் சிறப்புக் காட்சிகள் இடம் பெற்றன. இதனால் நாடியா, இந்தித் திரைப்படங்களில் தனக்கான அருமையானதொரு இடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டார். இந்த முன்னேற்றம் மட்டும் போதாது என்று கருதியதாலோ என்னவோ, விதி நாடியாவை, வாடியா குடும்பத்தின் மருமகளாகவும் ஆக்கி அழகு பார்த்தது. 1961 ஆம் ஆண்டில் நாடியா, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரான J.B.H.வாடியாவின் சகோதரரும் மற்றொரு புகழ்பெற்ற இயக்குனருமான ஹோமி வாடியாவைத் திருமணம் செய்து கொண்டு இந்திய மருமகளானார்.