எரியும் தீயில் எண்ணெய்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான போராட்டம் என்பது இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான போராட்டம் என்பது இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல. கால் நூற்றாண்டை எட்டவிருக்கும் இந்தப் போராட்டம் இப்போது 13 பேரின் உயிரை காவு கொண்டுள்ளது. இதற்கு முன்பும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் உயிரிழப்புஅளவுக்கு சென்றதில்லை.
ஆலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது போராட்டம் தீவிரமடைந்தது. காலப்போக்கில் நீர்த்துவிட்டது. ஆலையும் 1996-இல் செயல்படத் தொடங்கியது. அவ்வப்போது சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தியதுண்டு. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலைக்கு எதிராக பெரிய அளவிலான களப் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து வந்தன.
இந்த நிலையில் இப்போது திடீரென போராட்டம் தீவிரமாகி உயிர்ப்பலி வரை சென்றது எப்படி என்ற கேள்வி
எழுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் கடந்த பிப்ரவரி முதல் தொடர்ந்து 100 நாள்களாக போராட்டம் நடத்தினர். நூறாவது நாளில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். அந்த நாளில்தான் வன்முறை வெடித்து 13 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 100 நாள்களாக கிராம மக்களை தூண்டி கொதிநிலைக்கு கொண்டு வந்து இப்போது அவர்களை பொங்கி எழச் செய்தது சில தீவிரவாத இயக்கங்களாக இருக்கலாம் என்ற கருத்து பொதுவெளியில் வலுப்பெற்றுள்ளது.
சில வட மாநிலங்களில் கோலோச்சி வரும் மாவோயிஸ்ட்கள், ஆந்திரத்தில் காலூன்றி வளரத் தொடங்கினர். இப்போது அங்கு அரசின் தீவிர கண்காணிப்பால் அங்கிருந்து சில குழுக்கள் இடம் பெயர்ந்து தமிழ்நாட்டில் காலூன்றி இருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டில் இடதுசாரி தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. வலுவான அரசியல் தலைமை இல்லாமை, புரையோடியுள்ள லஞ்சம், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பெருக்கம், பாதுகாப்பு படையினரின் கண்காணிப்புக் குறைபாடு ஆகியவை இந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு இங்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் இவர்களின் செயல்பாடுகளை யாவரும் அறிவர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே இடதுசாரி தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த சிலர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊடுருவிவிட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள சுமார் 10 கிராமங்களில் முகாமிட்டு மக்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு போராட்டத்துக்கான ஆயத்தங்களை மறைமுகமாக செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் நூறு நாள் போராட்டம். அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க காவல்துறையினரின் உளவுப் பிரிவு தவறிவிட்டதா அல்லது தெரிந்தும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், போராட்டம் நடைபெறும் இடங்களில் ஊர்த் தலைவர்களையோ அல்லது பொதுமக்களில் குறிப்பிட்ட சிலரையோ உளவுப் பிரிவு போலீஸார் தன்வயப்படுத்துவர். பின்னர் அவர்களைக் கொண்டு போராட்டத்தின் பின்னணி தகவல்கள் அனைத்தையும் சேகரித்து சமாதானம் அல்லது தடுப்பு நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்வதுண்டு. இந்த நூறு நாள் போராட்டத்தில் அப்படிப்பட்ட முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் அல்லது காவல்துறை மேற்கொண்டிருந்தால் அசம்பாவிதங்களை தவிர்த்திருக்க முடியும்.
தென் மாவட்டங்களில் இப்போதும் ஒரு பழக்கம். ஒரு ஆண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவரது மனைவி குறிப்பிட்ட நாளில் தாலியை கழற்றவில்லை என்றால் கொலை செய்தவரை பழிவாங்கும் திட்டம் 3 மாதத்திலேயோ அல்லது முதலாவது நினைவு தினத்திலேயோ நிறைவேறும் என போலீஸார் கணிப்பதுண்டு. அதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான "போராட்டத்தின் 100-ஆவது நாளில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை' என அறிவித்தால் அதன் மறைமுக திட்டம் என்ன என்பதையும் உளவுப் பிரிவு போலீஸார் கணிக்கத் தவறியதன் விளைவு 13 பேர் பலி.
பொதுவாக இடதுசாரி தீவிரவாதிகளின் வன்முறை என்பது ஆட்சி நிர்வாகத்தையும், பாதுகாப்புப் படையினரையும் சீர்குலையச் செய்வதாக இருக்கும். தூத்துக்குடி கலவரத்திலும் அது நடந்துள்ளது. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்கள் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு தீயும் வைத்துள்ளனர். மறைந்திருந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் என்கிறபோது மாவட்ட ஆட்சியரையோ, காவல் கண்காணிப்பாளரையோ குறிவைக்க வேண்டிய அவசியம் என்ன? இதுவெல்லாம் சாமானிய மக்கள் செய்யும் காரியம் அல்லவே.
இந்தக் கலவரத்தில் இறந்தவர்களில் ஒருவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் "மக்கள் அதிகாரம்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர். இவரோடு அங்கு போராட்டத்துக்கு சென்றவர்கள் எத்தனை பேர், இவர் சென்றதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்த அமைப்பு அண்மைக் காலமாக காவிரி, "டாஸ்மாக்' உள்ளிட்ட பல்வேறு பொதுப் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் போராட்டங்களுக்கு சில இடங்களில் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். தடையை மீறி அவர்கள் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர்.
எனவே, அரசு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவோரை கண்டறிந்து அவர்களை ஒடுக்கினால் மட்டுமே இத்தகைய கலவரத் தீ தமிழ்நாட்டில் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...