அரசு ஊழியர், அரசியல்வாதிகள், மக்கள்...
அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு எத்தனையோ விதிமுறைகள் கட்டுப்படுத்துகின்றன. ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்று


அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு எத்தனையோ விதிமுறைகள் கட்டுப்படுத்துகின்றன. ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்று அவை வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பிறழ்ச்சி ஏற்படும்போது சம்பந்தப்பட்ட ஊழியர் அல்லது அதிகாரி மீது இந்த நடவடிக்கைகள் பாய்வது உண்டு. பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இன்னின்ன தேர்வுகளையெல்லாம் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்றும் பிறகுதான் இரண்டாவது ஆண்டு ஊதிய உயர்வு என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இந்த விதிமுறைகளெல்லாம் அரசுப் பணியாளர் அறிந்திருத்தல் கட்டாயம். இவை சட்டமல்ல. விதிமுறைகள். அதாவது, ஒழுங்குமுறை நடவடிக்கைகள்; அலுவலக நடைமுறை விதிகள்; நிர்வாகம் சீராக நடைபெறுவதற்காக வழிவகுக்கப்பட்டவை.
இவை மீறப்பட்டாலே ஒருவர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்கிற விதி பாயும். குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவரின் தன்னிலை விளக்கம் பெறப்பட்டு, இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இவற்றின் அடிப்படையிலும், இருக்கும் ஆவணங்களின் அடிப்படையிலும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்த அரசுப் பணியாளருக்கு ஊதிய உயர்வு தற்காலிக நிறுத்தமோ, தொடர் நிறுத்தமோ, தற்காலிகப் பணி நிறுத்தமோ, கண்டனமோ, அல்லது வெறும் எச்சரிக்கையோ போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
ஆக, அரசுப் பணியாளராய் இருப்பதில் நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒழுங்கு முறைகள் உள்ளன. போனோம் வந்தோம் என்று இருந்துவிட முடியாது. அலுவலகம் வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தால், மாலை அலுவலக நேரம் முடிந்து வீடு திரும்பும்வரை அவரவருக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளில் விதிமுறை தவறாமல், இன்னின்னவகைக்கு இவைதான் விதிமுறைகள் என்பதைச் சரியாகக் குறிப்பிட்டு, தெரியவில்லை என்றால் குறிப்பிட்ட நடத்தை விதிமுறைப் புத்தகங்களை எடுத்துப் படித்துப் பார்த்து, பத்திகளையும, விதி எண்களையும் சொல்லி வரையறுத்து எழுதுவதில் மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது.
இம்மாதிரிக் குறிப்பிட்டு ஆணி அடித்தாற்போல் சொல்லி, பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து பணியாற்றுகிற அரசுப் பணியாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். 58 வயது வரைக்கும் நான் இதில் இருந்தாக வேண்டும் என்று இருக்கும் நடைமுறை விதிமுறைகள் அனைத்தையும் கரைத்துக் குடித்து, விரல் நுனியில் வைத்துக் கொண்டு, அவரின்றி ஒன்றும் அசையாது என்கிற இடத்தில் தங்களை நிறுத்திக் கொள்ளும் அரசுப் பணியாளர்கள் ஏராளம்.
ஓர் அலுவலகத்தில் பியூன் முதல் அலுவலர் வரை விதிகள் என்பது பொது. யார் தவறு செய்தாலும், தண்டனை உறுதி. இதற்கு பயந்துதான், கட்டுப்பட்டுத்தான் வேலை செய்தாக வேண்டும். அன்றாட வேலைகளைச் செய்வதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால், பொறுப்பு என்கிற கட்டுப்பாட்டு வளையத்திற்குள்தான் வலம் வந்தாக வேண்டும். இது மீறப்படும்போதுதான் எக்கச்சக்கமாக விஷயம் மாட்டிக் கொள்கிறது.
ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஒரே வரி. வேறு எதுவொன்றாலும் இதை வரையறுக்க முடியாது. இன்றைய விலைவாசி ஏற்றத்திற்கும், கல்வி வியாபாரத்திற்கும், வாழ்நிலை உச்சங்களுக்கும் ஒரு சாதாரண அரசு ஊழியர் தன் ஒரே சம்பளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்றெல்லாம் கேள்விகள் கேட்கக் கூடாது.
சமயத்திற்குத் தகுந்தாற்போல் என்னை மாற்றிக் கொள்ளத்தான் செய்வேன் என்று சொல்லிக் கொண்டு இந்த வேலைக்கு வரவில்லை. நன்னடத்தை விதிகளுக்குக் கட்டுப்படாமல் தவறுகள் செய்ய முனைந்தால் கஷ்டப்பட வேண்டியதுதான். தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியதுதான்.
இப்படியான தவறுகளைச் செய்து, மாட்டிக் கொண்ட அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் உண்டு. ஓய்வு பெற முடியாமல் கண்டனப் பணி நீக்கம் செய்யப்பட்டு, ஓய்வுப் பலன்கள் எதையுமே பெற முடியாமல் போனவர்கள் இருக்கிறார்கள்.
பத்தாண்டுகள் கூடக் கடந்து, இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டு, பிறகு தனது ஓய்வூதியப் பலன்களைப் பெற்று, பெண்டு பிள்ளைகளுக்குக் கல்யாணம் பார்த்தவர்கள், தண்டனையில் இருக்கையிலேயே உயிர்துறந்தவர்கள், வரும்போது வரட்டும் என்று விதிகளுக்குப் புறம்பாகச் சம்பாதித்த காசை வைத்துக்கொண்டு கொடிகட்டிப் பறந்தவர்கள், வியாதியில் விழுந்து இதய அறுவைசிகிச்சை, பக்க வாதம், சிறுநீரக கோளாறு, நோய் நொடி என்று நசிந்து காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.
எல்லாமும் உண்டுதான். அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை நாம் எவ்வளவு மரியாதையோடு கடந்து செல்கிறோம் என்பதைப் பொறுத்து அது நம்மை வாழ வைக்கிறது. அல்லது வீழ்த்தி விடுகிறது.
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது; பிறந்த நாள் சான்று வழங்க லஞ்சம்பெற்ற எழுத்தர் கைது; மின் இணைப்பு வழங்க கையூட்டுப் பெற்ற பொறியாளர் கைது; வாகன உரிமம் வழங்க லஞ்சம்; ஓட்டுநர் தகுதிக்கு லஞ்சம்.
இப்படி எத்தனையோ லஞ்ச லாவண்யச் செய்திகளை நாளிதழ்களில் நாம் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கையும் களவுமாகப் பிடிபட்டார் என்று வெறும் செய்தியாகத்தான் பலர் அறிந்திருக்கக் கூடும்.
ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் மறைந்து நின்று "பவுடர்' தடவிய ரூபாய் நோட்டுத் தாள்களைக் குறிப்பிட்ட அந்த அரசு ஊழியர் அல்லது அலுவலர் பெறும்போது பாய்ந்து சென்று மறைவிலிருந்து திடீரென வெளிப்பட்டுப் பிடிக்கிறார்களே.. அந்தக் காட்சியைக் கண்ணாரக் கண்டவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் அந்தத் தவறைச் செய்யத் துணியவே மாட்டார்கள்.
"பவுடர்' பட்ட கை விரல்களை டம்ளரில் நனைக்கச் சொல்லி அது சாட்சியாவதும், பிடிபட்டவரை எல்லோர் முன்னிலையில் சட்டையைக் கழற்றி அமர்த்துவதும், சட்டென்று மாறிய மானக்கேடில, வியர்த்து விறு விறுத்து நனைந்து கிடப்பதும், கைகளும் உடம்பும் நடுக்கம் கொள்வதும், வாய் குழறுவதும், கண்றாவிக் காட்சிகள். அய்யோ பாவமே சற்று ஈரம் சுரக்கத்தான் செய்யும். என்ன பெரிய இது? என்று இருக்கும் கடுவன்களும் உண்டுதான்.
வாழ்க்கை பூராவும் படு நேர்மையாக இருந்து, அலுவலருக்குக் கொடுத்த சொந்தப் பணம் திரும்ப வரவில்லையே என்கிற ஆதங்கத்தில் அதை இப்படித்தான் நேர் செய்தாக வேண்டும் என்ற முடிவில் ஒரே ஒரு முறை தவறு செய்து மாட்டிக் கொண்ட பரிதாபமான அரசு ஊழியரைக் கூட பலர் அறிவர். யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். தண்டனை தண்டனைதான்.
இதெல்லாம் இப்படியிருக்கையில், வெறும் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே என்று பொது ஜனத்தால் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ. எம்.பி., அமைச்சராக ஆனவர்கள், "அரசியல் சட்டத்தின் மீது விருப்பு வெறுப்பில்லாமல் செயல்படுவேன், சுயநல மன மாச்சரியங்களுக்கு இடம் கொடேன்' என்று கூறிப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு விட்டு, எப்படியெல்லாம் மாறிப் போகிறார்கள்? எப்படியெல்லாம் இஷ்டப்படி செயல்படுகிறார்கள்?
இந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்தான் எப்படி எப்படியெல்லாம் செய்திகள் அவ்வப்போது நம்மை வந்து தாக்கின. புதிது புதிதாக வரும் செய்திகள், இது இன்னும் எங்கெங்கு நீளுமோ, யார் யார் மீது பாயுமோ, என்றெல்லாம் நாளும் எதிர்பார்க்க வைக்கின்றனவே? மக்களுக்கு என்ன தெரியும், என்கிற கதையாகவல்லவா இருக்கிறது இந்தத் துணிந்த செயல்பாடு.
பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது எடுத்த உறுதிமொழிகள் என்னவாகிறது? இனி எல்லாமே நம்மளதுதான் என்பதுபோலும், இனி எப்பொழுதும், நாம்தான் என்பதுபோலவும் அல்லவா செயல்படுகிறார்கள்?
மக்கள் வியந்து, விக்கித்துப் போய்த்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாததா? அறியப்படாததா? எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இருப்பினும், இந்த பாமர மக்களின் மீதுதான் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு நம்பிக்கை? அவர்களுடைய ஞாபகமறதியைத் தங்களுக்குச் சாதகமாக்கிவிடலாம் என்று அரசியல்வாதிகள் போடும் கணக்கைத் தப்புக்கணக்காக மாற்றிக் காட்டுவதில்தான் இருக்கிறது மக்களின் சாமர்த்தியம்.
அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டன என்பதில் நாம் ஓரளவு ஆறுதல் தேடிக்கொள்ளலாம்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...