நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நிரூபிக்கப்படும்வரை நிரபராதி

தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று கூறும்போது, "பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து' என்று கூறுகிறார். அதாவது, ஆரோக்கியம், செல்வம், உற்பத்தித் திறன், அமைதியான வாழ்வு, பாதுகாப்பு தரும் வலிமை - இந்த ஐந்து அம்சங்களே நாட்டின் அடிப்படைத் தேவை.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:00 am

நெல்லை சு. முத்து

தெய்வப் புலவர் திருவள்ளுவர் ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று கூறும்போது, "பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து' என்று கூறுகிறார். அதாவது, ஆரோக்கியம், செல்வம், உற்பத்தித் திறன், அமைதியான வாழ்வு, பாதுகாப்பு தரும் வலிமை - இந்த ஐந்து அம்சங்களே நாட்டின் அடிப்படைத் தேவை.

வேளாண்மை, உணவு பதப்படுத்தல், கல்வி, சுகாதாரம், மின்சக்தி, தகவல் -தொழில்நுட்பம், வியூகத் துறைகள் ஆகிய டாக்டர் கலாமின் நவீன பஞ்ச சீலக் கொள்கைகளால் "இந்தியா ஒரு வளர்ந்த இந்தியா' என்கிற தகுதி பெறும். அதிலும், முதல் நான்கை விட முக்கியமானது - தேசியப் பாதுகாப்பு.

"பொருளாதாரச் செழிப்பு, தேசியப் பாதுகாப்பு, உலக அரங்கில் உரிய சிறப்பிடம் ஆகியவற்றை எட்டிய பின்னர்தான் வளர்ந்த நாடாக முடியும். லட்சியம் இல்லாத நாட்டில் பொதுமக்கள் ஆற்றலைத் தொலைத்து நாட்டின் பெருமையை எடுத்துக் கூறும் உணர்வு இல்லாமல் இருப்பார்கள். தொலைநோக்குப் பார்வையுடன் லட்சியத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டும்' என்று நம் குடியரசின் முன்னாள் தலைவர் வலியுறுத்தினார்.

வடக்கே, அன்னியர் ராணுவ உடையில் ஆள் மாதிரி (ரோபோ?) ஒரு உருவம், கை மாதிரி உறுப்பில் ஏந்திய துப்பாக்கி மாதிரி கருவியினால் இந்தியா எல்லை மாதிரி இருந்த ஒரு பகுதி நோக்கிச் சுட்ட மாதிரி தொலைக்காட்சியில் பார்த்தேன் என்கிறார் பாதுகாப்பு மந்திரி மாதிரி ஒருத்தர். அண்டை நாட்டைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். நம் நாட்டின் அங்கமான மாநிலத்தை "மாதிரி மாநிலம்' என்று சொன்னால் சகிக்கிற மாதிரி இருக்குமா என்ன?

அயல்நாட்டினர் நம் மீனவர்களை வந்து சுடலாம். விஷவாயு பரப்பலாம், தரகர் வழி பீரங்கிகள் வாங்கலாம். நம் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கலாம். ஊடகங்கள் கேள்வி கேட்டால் அவர்களை தாய்நாட்டிற்கே பாதுகாப்புடன் வழி அனுப்பி வைக்கும் "காந்தி' பரம்பரையினர் நாம்.

உள்ளபடியே, உலகில் காகசாயிடு, மங்கோலாயிடு, ஆஸ்திரலாயிடு, நீங்ராயிடு, காப்பாயிடு என்று பிரதான இனங்கள் வாழும் கண்டங்கள், நாடுகள் தோறும் மதங்கள், மொழிகள், சாதிகள் - எல்லாவற்றிற்கும் வாதக் கட்சிகள் தோன்றிவிட்டன.

ஊழல், மதவாதம் மட்டுமா பிரச்னை? பாலியல் வன்முறை, முதியோர் வன்கொடுமை, தண்ணீர்த் தாவா, மின் பகிர்மானம், மணல் கொள்ளை, வேதிமத் தொழில்சாலை, அணு உலை, சுற்றுச்சூழல் என அனைத்தும் பிரச்னைகள்தாம்.

இனி, ஆண்கள் கட்சி - பெண்கள் கட்சி, சிறுவர் கட்சி - பெரியவர் கட்சி, படித்தவர் கட்சி - படிக்காதவர் கட்சி, மாற்றுத் திறனாளியர் கட்சி - உடற்குறை அற்றவர் கட்சி என்று எல்லாம் இனிமேல் உட்பிரிவுகளாகப் பல கட்சிகள் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

"இந்திய நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் அனைவரும் எங்கள் மதத்தினர், உங்கள் மதத்தினர் இல்லை' என்று மார் தட்டுகிறார் ஓர் அமைச்சர். இவர் மதவாதத்துக்கு அப்பாற்பட்டவராம்.

ஜாலியன்வாலாபாக் படுகொலையில் இறந்தவர்கள் பற்றி இன்னமும் மத ஆராய்ச்சி செய்வார்கள் போல. சோமநாத் கோயில் தொடங்கி ஆய்வு செய்தும் முனைவர் பட்டம் பெறக்கூடும்.

சந்தடிச்சாக்கில், கூட்டணி வைத்து பெண்களைக் கற்பழிக்கும் இளைஞர்களை மன்னிக்கலாமாம். அவர்களுக்கு "வாழ்நாள் சாதனை விருது' வழங்கிடப் பரிந்துரைக்கிறார் ஒரு பிரதேச முன்னாள் முதல்வர். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது தனயனின் வாதம்.

"எனக்கு சீட் கொடுக்கவில்லை' என்று மூக்கைத் துடைத்துக் கொள்கிறார் ஒரு பழைய "சிங்'கம். அவரே பாவம், கைத்தாங்கலாகத்தான் நடக்கிறார். அப்பாவை ஆதரியுங்கள் என்கிறார் அன்பு மகன். இமயம் முதல் குமரி வரை ஒரே கதை.

தந்தை மகனுக்கோ, மகளுக்கோ ஆற்றும் நன்றி மக்கள் அவையத்து முந்தி இருக்கச் செயல் அல்லவா? அடுத்த தலைமுறை முன்னேற வேண்டுமாம். வடகங்கை முதல் தென்கங்கை வரை இதே கோஷம்.

சிறைக்குச் சென்றாலே அவமானம் என்று இருந்த காலம்போய், அதுவே தேர்தல் தகுதி என்று ஆகிவிட்டது. "நிரூபணம் ஆகும் வரை நிரபராதி' என்பது இன்றைய அரசியலின் புதுமொழி.

இன்னும் சிலர் பக்கத்து பெஞ்சில் தேர்வு எழுதுவோரின் விடைத்தாளைப் பார்த்துக் காப்பி அடிப்பதுபோல, தேர்தல் அறிக்கைகளையும் பிரதி எடுக்கிறார்களாம். இவர்கள் நமக்கு வைத்த புதுப்பெயர் - வாக்கு வங்கிகள்.

ஆனாலும், அறிவியலுக்கே பிடிபடாத ஒரு சந்தேகம். ஒரு குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுகிறவனைப் பிடித்துச் சிறையில் போடுகிறோம். உடனே, குழந்தையின் சங்கிலி மீட்டுத் தரப்படுகிறது.

ஆனால் இந்த கஜானா கொள்ளை விவகாரத்தில் மட்டும் அது ஏன் வெறும் சிறைத்தண்டனையோடு நின்றுபோகிறது? அப்படியானால் திருட்டுப் போன மக்கள் பணம்?

"எங்கள் ஊழல் கணக்கா முக்கியம்? இத்தனை மனைவியர் என்பதை உலகிற்கு மறைக்காமல் பறைசாற்றினோமே, நாங்கள் உத்தமர் இல்லையா?' என்று ஒரு தனி ஆவர்த்தனம்.

"தம்பி, உன் ஜேபிக்குள்ளே என்ன இருக்குன்னு தெரியாமல் மற்றவன் விவகாரத்தையே பேசாதே' என்று அறிவுரை சொன்ன கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனே நம் நினைவுக்கு வருகிறார்.

எது எப்படியாயினும், இந்த சந்தர்ப்பத்தில் ஏனோ சிறுவயதில் திருநெல்வேலி சந்திப் பிள்ளையார் கோயில் முக்கில் நடந்த தேர்தல் பொதுகூட்டம் நெஞ்சில் நிழலாடுகிறது. நாவலரின் அரசியல் மேடைப் பேச்சு. காஞ்சி அறிஞர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையின் பெருமை பற்றியது.

"ஒரு வாக்கியத்தின் தொடக்கத்தில் வராத சொல் - ஏனென்றால்; ஏனென்றால், "ஏனென்றால்' என்பது இணைப்புச் சொல்' என்பதை லாவகமாக மூன்று முறை ஒரே சொல்லை ஆங்கிலத்தில் எடுத்து உரைத்தார் அந்தத் அரசியல் மேதை.

ஒருமுறை அதே அறிஞரிடம் எதிர்க்கட்சியினர், "உங்கள் நாள்கள் எண்ணப்படுகின்றன' என்று ஷேக்ஸ்பியரின் வசனம் பேசினர். "ஆனால், என் காலடிகள் நிதானமாக எடுத்து வைக்கப்படுகின்றன' என்று அதே ஆங்கில நாடக ஆசிரியரின் இன்னொரு மேற்கோளைப் பதிலடியாகச் சொன்ன அந்த அறிஞர் எங்கே?

இன்றைக்குப் பாருங்கள். பால்ய விவாகம், பதிவுத் திருமணம், மேனாட்டுக் கள்ளக்காதல், கலப்புக் கல்யாணம். பலதார வாழ்க்கை, பல புருஷர் உடன்போக்கு, சோரம் போதல் என்று என்னவெல்லாம் அரசியல் விவாதங்கள். இப்படிப்பட்டவர்களை தலைவர்களாகத் தேர்ந்தெடுத்த நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

எந்த வினாவிற்கும் "உண்டு', "இல்லை', "சொல்வதற்கில்லை' என மூன்று விதமானபதில்கள் உள்ளன. மூன்றாம் பதிலான் "சொல்வதற்கில்லை' என்பது உண்மையை மறைத்தல் ஆகுமா? இந்த இடத்தில் எப்போதோ படித்த ஒரு விகடத் துணுக்கு இப்போது நினைவில் வருகிறது.

சைக்கிளில் பெல் இல்லாமல் ஓட்டினால் குற்றம் என்று ஒரு காலத்தில் இருந்தது. அப்போது காவல்துறை அப்படி ஒரு சைக்கிள்காரனை நிறுத்தியது.

"வண்டியில் பெல் இல்லை. எடுடா அபாரதம்' என்றதும், "சார் நானாவது சைக்கிளில் பெல் இல்லாமல் தான் வருகிறேன். என் பின்னாடி ஒருத்தர் சைக்கிளே இல்லாமல் வருகிறார். அவரிடம் அபராதம் வசூலியுங்கள் சார்' என்றானாமே. அதே மாதிரி, மனைவி தேடும் படலம்தான் இங்கு நடக்கிறது.

தேர்தல் தடகளத்தில் இவர்களேனும் ஏதேனும் இலக்கு வைத்து ஓடுகிறார்கள். முன்னாள் ஊழல் எதிர்ப்பு வீரருக்கோ, தானும் ஜெயிக்க வேண்டாம். தனக்குப் பதவியும் வேண்டாம். தாடிக்காரர் ஓடுகிறாரே, அவர் குறுக்கே புகுந்து இடறிவிழச் செய்தாலே போதும் என்று தடுமாறி, தடம்மாறி ஓடுகிறார்.

"பாருங்கள் மகா ஜனங்களே, ஒரே மாதத்தில் நாங்கள் போகும் இடம் எல்லாம் வந்து கருப்புக் கொடி காட்டுகிறார்கள். செருப்பு வீசுகிறார்கள். மை பூசுகிறார்கள். கன்னத்தில் அறைகிறார்கள். அவர்களை மன்னித்துவிடுவோம்' (விசாரணையில் பிடிபட்டால் தாங்களும் அல்லவா மாட்டிக் கொள்வோம் என்று நினைக்கிறாரோ?) பழங்கால பாணி அனுதாப நாடகம் - இது அரசியலில் நிரம்பப் பழசு.

விரும்பியோ, விரும்பாமலோ இவர்கள் அனைவருக்கும் கண் துயிலும் நேரத்திலும் ஒரே ஒரு "எதிரி'தான் தெரிகிறார். கனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான் கண்ட பொழுதே கொடிது என்று புதுப்பாட்டு மட்டும்தான் இயற்றவில்லை.

இறுதியாக ஒரு ஐயப்பாடு. தேர்வில் தோற்றுப் போனவர் புறவாசல் வழி வந்து சான்றிதழ் பெற்றார் என்கிறது "தொல்' காப்பியம். அந்தத் திறமைசாலி தேர்வுச் சான்றிதழ் பெறுகிற புகைப்படத்தை எந்த ஊடகத்திலும் கண்டவர் இல்லை.

வழக்கும் தீர்ப்பும் முடியும் முன், அவரும் பணி ஓய்வு பெறப்போகிறார். இனி அவர் குற்றவாளி என்றால், ஜனநாயக அமைப்பில் அத்துமீறிப் புகுந்து பிறப்பித்த உத்தரவுகள் செல்லுபடி ஆகுமா?

எதுவாயிருப்பினும், ஒரே குடையின்கீழ் வாழ்வோம். அது ஒட்டுக்குடையோ, ஓட்டைக் குடையோ அல்ல; ஓட்டுக் குடை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.