நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில் குடும்பத்திற்கு 35 கிலோ அரிசி வழங்கப்படும் என இருந்தது. ஆனால், அவசரச் சட்டத்தில் அது நபருக்கு 5 கிலோ என்று மாற்றப்பட்டது. இதனடிப்படையில், 5 பேர் உள்ள குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும். கேரளாவைப் போன்று 3 பேர் கொண்ட குடும்பமாக இருந்தால், 20 கிலோ அரிசி, கோதுமை அவர்களுக்கு மறுக்கப்படும். தமிழக மக்கள்தொகையில் 49 சதவிதம்பேர் நகரங்களில் வசிக்கின்றனர். மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள நகர்ப்புற மக்களில் 37.79 சதவீதம் பேருக்கு மட்டுமே உணவு அளிப்பது, தற்போது பலன்பெற்றுவரும் பெரும்பகுதியான நகர்ப்புற மக்களை பொது விநியோக முறைக்கு வெளியே தள்ளிவிடும். புதிய அவசரச் சட்டத்தின்படி (பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் மசோதா) தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் உணவு தானிய அளவீடு குறையும். தற்போது 2 லட்சத்து 96 ஆயிரம் டன் உணவு தானியம் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்கிறது. அவசரச் சட்டத்தின்படி அதில் 1 லட்சம் டன் வரை தமிழகம் இழக்கும். இதனால், இப்பொழுது வழங்கப்படும் உணவு தானிய அளவை தொடர மாநில அரசு வெளிச்சந்தையில் அரிசி வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், மாநில அரசு கூடுதலாக ரூபாய் 3 ஆயிரம் கோடி நிதிச் சுமையை ஏற்க நேரிடும். தமிழகத்து மக்களையும், இதுபோன்ற மற்ற சில மாநில மக்களையும் பாதிக்கக் கூடிய வகையில், இப்படி ஒரு சட்டம் தேவையா?