எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தமிழனும் சினிமாவும்

தமிழனையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. ஒரு காலத்தில் ஒரே திரைப்படத்தை திரையரங்குகளில் ஓராண்டு ஓடச்செய்து வரலாற்றில் இடம்பிடித்த பெருமைக்குரியவன் தமிழன். ஆனால், அண்மைக்காலமாக தமிழ்த் திரைப்படங்கள் எ

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:39 pm

எஸ். ராஜாராம்

தமிழனையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. ஒரு காலத்தில் ஒரே திரைப்படத்தை திரையரங்குகளில் ஓராண்டு ஓடச்செய்து வரலாற்றில் இடம்பிடித்த பெருமைக்குரியவன் தமிழன்.

ஆனால், அண்மைக்காலமாக தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் அதிகபட்சமாக 30 நாள்களுக்குமேல் ஓடுவதில்லை. என்ன ஆயிற்று? திரைப்படங்களின் தரம் குறைந்துவிட்டதா அல்லது தமிழன் திருந்திவிட்டானா?

திரையரங்குகளில் கட்டணம் அதிகம், புதிய திரைப்படங்கள் வெளிவந்த சில நாள்களிலேயே திருட்டு சி.டி. வெளிவந்துவிடுகிறது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதற்கு பரிகாரமாகத்தானோ என்னவோ திரைப்படங்களை சின்னத்திரையில் ஓடவைக்கிறான் தமிழன்.

தமிழனின் ரசனையை நன்றாகப் புரிந்துவைத்திருக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள் இப்போது திரைப்படங்களை நம்பித்தானே "கல்லா' கட்டுகின்றன.

ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு போன்ற விசேஷ நாள்களில் "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' எத்தனை திரைப்படங்களை சேனல்கள் ஒளிபரப்பின. திரைப்படங்கள் தவிர மற்ற நிகழ்ச்சிகளும் திரைப்படங்களை, திரை நட்சத்திரங்களைச் சார்ந்துதான் இருந்தன. 2010-ம் ஆண்டின் டாப் 20 பாடல்கள், டாப் 20 நகைச்சுவைக் காட்சிகளை (வழக்கமாக டாப் 10 தானே உண்டு) சேனல்கள் ஒளிபரப்பின. நல்லவேளை, டாப் 20 அழுகைக் காட்சிகள், டாப் 20 வசனக் காட்சிகள், டாப் 20 ஆக்ஷன் காட்சிகள், டாப் 20 பஞ்ச் டயலாக் காட்சிகள் என்றெல்லாம் பயமுறுத்தாமல் இதோடு நிறுத்திக் கொண்டனவே.

இதுபோக, நடிகர், நடிகைகளின் பேட்டி, சின்னத்திரை நடிகர்களின் சங்கமம், தமிழ் சினிமா இந்த வாரம், கடந்த வாரம், வரும் வாரம் என சேனல்களும் நடித்துத் தள்ளிவிட்டன.

கடந்த ஆண்டை நினைவுகூர இந்த சினிமாவைவிட்டால் வேறு எதுவுமே இல்லையா?

இந்திய ரூபாய்க்கு அடையாளக் குறியீடு உருவாக்கிய தமிழன் உதயகுமாரிடம் ஒரு பேட்டி எடுத்திருக்கலாம்.

டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடித்து நொறுக்கும் தமிழகத்தின் முரளி விஜய்யுடன் ஒரு நேர்காணல் நடத்தியிருக்கலாம்.

1000-வது ஆண்டு விழா நடைபெற்ற தஞ்சைப் பெரிய கோயில் பற்றி ஒரு நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பி இருக்கலாம். இன்னும், காமன்வெல்த் வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்ரீதர், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சந்தோஷ் என சாதனைத் தமிழர்களை நினைவுகூர்வது நல்ல விஷயம் இல்லையா?

ஒருவேளை, ஸ்ரீதர் வில்வித்தை வீரராகவும், முரளி விஜய் கிரிக்கெட் வீரராகவும் சினிமாவில் நடித்திருந்தால் அவர்களது பேட்டி தொலைக்காட்சிகளில் வந்திருக்கக் கூடும்.

ஒரு கதாநாயகன் ஒரு படத்தில் விவசாயியாக நடித்திருந்தால், "விவசாயி கேரக்டரை எப்படி ஸ்டடி செய்தார், அந்த கேரக்டராகவே படத்தில் எப்படி வாழ்ந்திருந்தார் என்று அலசி ஆராய்ந்து நிகழ்ச்சி தயாரிக்கும் சேனல்கள், உண்மையிலேயே விவசாயத்தில் சாதனை படைத்த ஒருவரைத் தேடிப்பிடித்து அவரது சாதனையை எல்லோரும் அறியும்படி செய்வதேயில்லை.

பண்டிகை நாள்களில் ஒளிபரப்பாகும் சிறப்புப் பட்டிமன்றத்தின் பேச்சாளர்கள்கூட இப்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சினிமா அல்லாத மற்ற சமூகப் பொறுப்புடன் கூடிய நிகழ்ச்சியை சேனல்கள் ஏன் ஒளிபரப்புவதில்லை? சில சேனல்களில் "ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ' என்ற பெயரில் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. தம்பதியர் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சிகளில் "உங்கள் திருமண தேதி என்ன? யார் முதலில் காதலை வெளிப்படுத்தினீர்கள்? திருமணத்துக்கு முன்பே ஒருவரை ஒருவர் பார்த்திருக்கிறீர்களா, உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை (இதிலும் சினிமாவை விடுவதாக இல்லை) யார்?'- இவையெல்லாம் உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், அந்த நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் "அறிவுப்பூர்வமான' வினாக்கள். திரையரங்குகளில் மார்னிங் ஷோ, மேட்னி ஷோ, ஈவினிங் ஷோ-க்களைவிட இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் இந்த ஷோக்களுக்குத்தான் இப்போது மவுசு அதிகம்.

இசைக்கு என்றே தனியாகச் சேனல்கள் வந்துவிட்டதால் அதில் எப்போதும் இசைமழைதான். சொந்தங்களையோ நண்பர்களையோ நேரில் பார்த்தால் இரண்டு நிமிடம் பேச நேரமில்லாத நம் தமிழன், இசைச் சேனல்களின் காம்பியர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உலகத் தமிழர்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்லச் சொல்லி, தனக்குப் பிடித்தமான சினிமாப் பாடலை "டெடிகேட்' செய்கிறான்.

ஆக, திரையரங்குகளுக்குச் சென்று சினிமா பார்க்க யாரும் தயாராக இல்லை என வருத்தப்பட வேண்டாம். அதற்குப் பதிலாக, தொலைக்காட்சிகளில் சினிமாவைத் தவிர வேறு எதையும் பார்க்கவும் யாரும் தயாராக இல்லை. இதிலும் ஓர் ஆச்சரிய முரண், நாடகத்தனமான சினிமாக்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை.

சினிமாத்தனமான நாடகங்கள் தொலைக்காட்சிகளில் ஓடோ ஓடு என்று ஓடுகின்றன. கவனியுங்கள்... தமிழன் என்றுமே சினிமாவைக் கைவிடமாட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.