டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விமர்சனம்: தோழர் வெங்கடேசன் - சிந்திக்கவும் வைக்கும் சினிமா இது...!

இந்தியாவின் அரசியல், நீதிபரிபாலன பகட்டு பளபளப்புகளுக்குப் பின் பல் இளிக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டு  காட்டுகிறது "தோழர் வெங்கடேசன்.'

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:34 am

ஜி. அசோக்

இந்தியாவின் அரசியல், நீதிபரிபாலன பகட்டு பளபளப்புகளுக்குப் பின் பல் இளிக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டு  காட்டுகிறது "தோழர் வெங்கடேசன்.'

!படத்தில்... பதவியைத் தக்க வைக்கத் தகிடுதத்தம் செய்யும் அரசியல்வாதிகள் இல்லை. ஆனால், காட்சிக்கு காட்சி, வசனத்துக்கு வசனம் சுளீர் அரசியல் பேசுகிறான் இந்த "தோழர் வெங்கடேசன்'!

காஞ்சிபுரத்தில் சோடா தயாரித்து கடைக்குக் கடை போடுகிறவர் ஹரிசங்கர். அங்கேயே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தும் பெண் மோனிகா சின்னகொட்லா. இந்த இரண்டு பேருக்கும் காதல். அவர்களுக்குள் நிரம்பி கிடப்பது எல்லாமே அன்பு, நேசம். 

அப்போது திடீரென்று ஒரு விபத்து. அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழக்க,  விபத்தில் சிக்கி இரண்டு கைகளையும் இழக்கிறார் ஹரிசங்கர். 

அரசுப் பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்பதால், நஷ்ட ஈடு வாங்குவதற்குள் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிறது. வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அரசுப் பேருந்தை ஜப்தி செய்து அதை பாதிக்கப்பட்ட அவர்களிடம்  ஒப்படைக்கிறது. அந்தப் பேருந்தை வைத்துக் கொண்டு அவர்கள் படும் பாடுகள், அந்த எளிமையான காதல் எல்லாமும்தான் கதை.

வழக்கின் இழுத்தடிப்பு, அதன் விளைவு என்ன, ஹரிசங்கரின் போராட்டங்கள் என்ன தாக்கத்தை உண்டாக்குகின்றன போன்ற தொடர் சம்பவங்களை மனதில் ஆதங்கமும் ஆவேசமுமாகப் பதியச் செய்கிறது படம்!

சினிமா எனும் அதிகவனம் ஈர்க்கும் பொதுத்தளத்தில், அந்தப் பொதுத் தளத்தின் மனசாட்சியையே சாட்டையால் விளாசியிருக்கிறது கதையின் கரு.
காவல் நிலையத்தில் ""என் பஸ்ஸ காணலே சார்...'' என படத்தின் நாயகன் அறிமுகமாவது முதல், கொதிகொதிக்கும் கிளைமாக்ஸ் வரை... படத்தின் எந்தவொரு இடத்திலும் சினிமா சாயல் இல்லை. "அபத்தங்களைக் கொண்டாடி' பழகிய சினிமாவில் இது புது பாட்டை. இயக்குநர் மகா சிவனுக்கு நமது கை குலுக்கல்.

சட்டத்தின் மேல் இருக்கிற நம்பிக்கை அற்று போகும் அளவுக்கு, கதையின் சாராம்சம் இருப்பது பார்ப்பவர்களுக்கு அச்சம் கொடுக்கும். இன்னும் எத்தனை காலம்தான் எதற்கும் ஆகாத இந்த சட்டங்களை வைத்துக் கொண்டு அல்லாடப் போகிறது என கேள்வி கேட்கத் தோன்றும்.  நேர்மை ஜெயிக்குமா... என்று தெரியாது. ஆனால், நியாயம் கண்டிப்பாக உலகத்துக்குப் புரியும். நேர்மை நமக்கே புரிய கொஞ்ச நேரம் பிடிக்கும். அந்த நேரத்திற்குள் நடப்பதை ஒரு படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர்.  அப்பாவித்தனம், பரிதாபம் மிதக்க வெகுளியாக வாழ்ந்திருக்கிறார் ஹரிசங்கர். எளியவனைப் பிரதிபலிக்கும்போது ஒரு நடிப்பும்,  கைகளை இழந்த பாவனையில், அதற்கென ஒரு நடிப்பும் என்று மிளிர்கிறார். இயலாமையின் கரைகளில் நின்று கொண்டு ஆவேசம் காட்டும்போதெல்லாம்... அற்புதம்!

மோனிகா... அத்தனை இயல்பான உடல் மொழி. வசன உச்சரிப்பு, காதல் சுமக்கும் கண்கள், துணிச்சல் தருணங்கள் என கலங்கடிக்கிறார். 

கதை ஓட்டத்துக்கு பக்கபலமாக கைத்தட்டல் அள்ளுகிறது வேதா செல்வத்தின் கேமரா. காஞ்சி நகரத்துக்குள் உலா வருவதைக் காண்பிப்பதிலும், ஹரிசங்கரின் வீட்டின் ஒவ்வொரு சதுர அடியைக் காண்பித்ததிலும் கனகச்சிதம். ""எனது உயிரைப் பார்க்கிறேன்....''  பாடலில் காதல் சோகம் கடத்துகிறது சகிஸ்னாவின் இசை. 

 ஒரு தேசம் அதன் எளிய மனிதர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் எளியவர்கள் எத்தனை பேர். ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் எளியவர்களுக்கு கோபம் வருகிற இயல்பை,  நிகழ்கால அநீதிகளை, அபத்தங்களை போகிற இடமெல்லாம் சுட்டி, குட்டிக் காட்டுகிறது படம்.

கேளிக்கை கொண்டாட்டங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த சினிமா சேராது. அதே சமயம் மனதைத் தைக்கும், உணர்வுகளை உருக்கும் காட்சிகள்..  போதவில்லையே!

ஆங்காங்கே தத்துவம் பேசும் அரசியல் - அதிகார மையங்களை சகட்டுமேனிக்கு போகிற போக்கில் சவட்டியெடுக்கும் கதையில், அது தொடர்பான பளீர் வசனங்கள் இல்லாதது பெரும் குறை. படம் முழுக்க இருக்கும் எதிர்மறை தொனியையும் தவிர்த்திருக்கலாம். 

போலீஸ் காவல், நீதிமன்ற அறிவுறுத்தல், அதிகாரத் தாக்குதல் என நித்தம் நித்தம் கடக்கும் போராட்ட களங்களை வெறும் செய்திகளாக கடந்து சிரிக்கும் மக்களிடம்... இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்று சிந்திக்க வைக்கிறான் இந்த "தோழர் வெங்கடேசன்.'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.