
நீட் போராட்டம்! உங்களுக்குத் தேவையில்லாதது எனக் கூறிய ஆதவ் அர்ஜுனா - பாடகர் அறிவு பேச்சு!
நீட் போராட்டம் உங்களுக்குத் தேவையில்லாதது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாக பாடகர் அறிவு பேச்சு...

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - பாடகர் அறிவு.. - கோப்புப் படம் | Neelam social
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் உங்களுக்குத் தேவையில்லாதது என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாக, பாடகர் தெருக்குரல் அறிவு தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் சோனம் வாங்சுக் இணைந்து நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தில்லியில், மாணவர் போராட்டத்தின் மீது காவல் துறையினர் நடத்திய தடியடி தாக்குதல்களில் ஏராளமானோர் படுகாயமடைந்ததற்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை எழும்பூரில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் தலைமையில் தமிழ்த் திரை இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் இன்று (ஜூலை 23) போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரபல பாடகர் தெருக்குரல் அறிவு, நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியபோது தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இது உங்களுக்குத் தேவையில்லாதது என அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“நான் மறைந்த அனிதாவின் அண்ணனாகத்தான் தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினேன். ஆணிகள் கொண்டு மாணவர்களையும் பெண்களையும் அடிப்பது எத்தகைய அனுகுமுறை. சட்டம், அரசு, அரசியலமைப்பு அனைத்துமே மக்களுக்கானதுதான்.
நான் தலைமைச் செயலகத்தின் முன்பு போராடியதன் விளைவாக என்னை உள்ளே அழைத்து பேசினார்கள். ஆனால், என்ன பேசினார்கள் என நான் சொல்லவில்லை எனக் கூறுகிறார்கள். அன்று நான் சந்தித்தது முதல்வர் ஜோசப் விஜய்யை அல்ல. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைத்தான் நான் சந்தித்தேன். அவர் என்னிடம் நீட் தேர்வை ரத்து செய்வது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றால் மட்டுமே முடியும். பெரும்பான்மை இல்லாமல் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.
எனவே, நீங்கள் ஏன் இந்தப் போராட்டத்தில் இறங்குனீர்கள்? இது உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம் என அறிவுரைக் கூறினார். ஆனால், முதல்வரைச் சந்திப்பதால் மட்டுமே இந்தப் பிரச்னை தீர்ந்துவிடாது என எனக்குத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து கடந்த ஜூலை 21 அன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் முன்பு பாடகர் அறிவு போராட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Summary
Singer Arivu has stated that Minister Aadav Arjuna told him that protesting against the NEET exam was unnecessary for him.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





