ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

2021-2022-ல் இளையராஜா வாழ்க்கை: புதிய படங்களும் புதிய சர்ச்சையும்

2021 ஜூன் மாதம் முதல் 2022 மே மாதம் வரையிலான இந்த ஒரு வருட காலகட்டத்தில்...

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:23 am

ச. ந. கண்ணன்

இளையராஜா தனது 79-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் ரசிகர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

2021 ஜூன் மாதம் முதல் 2022 மே மாதம் வரையிலான இந்த ஒரு வருட காலகட்டத்தில் இளையராஜாவின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு:

ஜூன் 2: இளையராஜாவுக்கு பாரதிராஜா, கமல் ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

இளையராஜா தனது 78-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் ரசிகர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். 

தனது நீண்ட கால நண்பரான இளையராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் வாழ்த்து கூறியதாவது:

உனக்கும், உன் இசைக்கும், நம் உறவுக்கும், என்றும் வயதில்லை. வாழ்த்துக்கள்டா. 

உயிர்த் தோழன்
பாரதிராஜா.

இவ்வாறு அவர் கூறினார்.

இளையராஜாவுக்கு நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து கூறியதாவது:

இசைக்கு இளைஞர் இளையராஜா. என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறினார்.

இளையராஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து நடிகர் விஷால் கூறியதாவது:

மேஸ்ட்ரோ இளையராஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தை அளிக்க வேண்டும். பலநாள் கனவாக உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளேன். ஊரடங்குக்குப் பிறகு படப்பிடிப்பை முடித்துவிட்டு, துப்பறிவாளன் 2 படத்தை உங்களுக்குக் காண்பிக்கக் காத்திருக்கிறேன். இன்னும் அற்புதமான பாடல்களை நீங்கள் எங்களுக்குத் தரவேண்டும் என்றார். 

ஜூலை 10: பிரஜின் படத்துக்கு இளையராஜா இசை

Story image

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருந்து நடிகரான பிரஜின் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

நினைவெல்லாம் நீயடா என்கிற படத்தை ஆதி ராஜ் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை, ஜூலை 10 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜா கலந்துகொண்டார். 

ஜூலை 25: இளையராஜாவைச் சந்தித்த கீரவாணி

Story image

தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி. தமிழில் மரகதமணி என்ற பெயரில் அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை போன்ற பல படங்களுக்கும் பிரபல இயக்குநர் ராஜமௌலியின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

ஜூலை மாதம் சென்னை வந்த கீரவாணி, இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் அவரைச் சந்தித்து உரையாடினார். இதன் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார்.

ஜூலை 27: இளையராஜாவின் பேட்டியை ட்விட்டரில் பகிர்ந்த ரஹ்மான்

Story image

இளையராஜாவின் பேட்டியைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ராஜாவின் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்தார் இசையமைப்பாளர் ரஹ்மான். 

20 வருடங்களுக்கு முன்பு இசையமைத்த பாடல்களை இன்றும் கேட்கிறார்கள். ஒரு பாடல் என்பது அப்போதுதான் பூத்த மலர் மாதிரி இருக்கவேண்டும். பழைய பாடல்களை நாம் கேட்கக் காரணம், அது புதிதாக இருப்பதால் தான் என இளையராஜா அளித்த பேட்டியை ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். 

ஆகஸ்ட் 2:  உலகம்மை படத்துக்கு இளையராஜா இசை

Story image

96, மாஸ்டர், கர்ணன் படங்களில் நடித்த கெளரி கிஷன் கதாநாயகியாக நடிக்கும் படம் - உலகம்மை.

1970களில் நடைபெற்ற சாதியப் பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் உலகம்மை படத்தை விஜய் பிரகாஷ் இயக்குகிறார். சு. சமுத்திரம் எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே என்கிற நாவலைத் தழுவி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஜிஎம் சுந்தர், மாரிமுத்து, அருள் மணி போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். உலகம்மை படத்தின் தான் நடிப்பதாக இந்த நாளில் கெளரி கிஷன் ட்விட்டரில் அறிவித்தார்.

ஆகஸ்ட் 20: இளையராஜா இசையில் பாடிய கர்நாடக இசைப் பாடகிகள்

Story image

இளையராஜாவின் இசையில் பிரபல கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி பாடியுள்ளார்கள். இளையராஜாவுடன் எடுத்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, அவருடைய இசையமைப்பில் மயோன் படத்தில் பாடியுள்ளதாகத் தகவல் தெரிவித்தார்கள். 

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகும் மாயோன் படத்துக்கு இசை - இளையராஜா. இப்படத்தில்தான் ரஞ்சனி - காயத்ரி ஆகிய இருவரும் ஒரு பக்திப் பாடலைப் பாடியுள்ளார்கள். 

செப்டம்பர் 2: இளையராஜா இசையில் பாடிய கர்நாடக இசைப் பாடகி காயத்ரி

Story image

இளையராஜாவின் இசையில் பிரபல கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி பாடியதை அடுத்து அவர் இசையில் தெலுங்குப் பாடலொன்றைப் பாடியுள்ளார் காயத்ரி.

கிருஷ்ண வம்சி இயக்கத்தில் உருவாகும் ரங்கமார்த்தாண்டா என்கிற தெலுங்குப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் காயத்ரி. இதுகுறித்த தகவலைச் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். 

செப்டம்பர் 4: பேர் வைச்சாலும் வைக்காம போனாலும் பாடலின் புதிய காணொளி: ரசிகர்கள் அமோக வரவேற்பு

YouTube video thumbnail

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவான படம் - டிக்கிலோனா. சமீபத்தில் ஜீ5 ஓடிடியில் வெளியான இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா. சந்தானம், யோகி பாபு, அனகா, ஷிரின் போன்றோர் நடித்துள்ளார்கள்.

1990-ல் கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற, பேர் வைச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல், டிக்கிலோனா படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. 

இப்பாடலின் விடியோ யூடியூப் தளத்தில் செப்டம்பர் 4 அன்று வெளியானது. இதுவரை 86 மில்லியன் பார்வைகள் இந்த விடியோவுக்குக் கிடைத்துள்ளன. 

செப்டம்பர் 6: இளையராஜா இசையமைக்கும் படத்தில் 12 பாடல்கள்!

Story image

இளையராஜா இசையமைக்கும் படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இருந்தால் எப்படியிருக்கும் என்று கனவு காணாத இளையராஜா ரசிகனே இருக்க முடியாது!

ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி ஃபிலிம்ஸ், மியூசிக் ஸ்கூல் என்கிற படத்தைத் தயாரிக்கிறது. ஷர்மான் ஜோஷி,  ஸ்ரேயா சரண், பிரகாஷ் ராஜ் நடிப்பில் பாபா ராவ் பியாலா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். மியூசிக் ஸ்கூல் படம் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. 

Story image

காதலும் இசையும் கொண்ட படத்தின் கதையை இசை மேலும் மெருகூட்டுகிறது. இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்குக் கிடைத்த பெருமை. அற்புதமான பாடல்கள் கொண்ட இப்படத்தை மக்கள் திரையரங்கில் ரசிக்கவேண்டும். அத்தருணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று இயக்குநர் பியாலா கூறினார். சவுண்ட் ஆஃப் மியூசிக் படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளன.  இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 அன்று தொடங்கியது. அனைத்து பாடல்களின் ஒலிபரப்பும் முடிந்துவிட்டதாக அக்டோபர் 2 அன்று தகவல் தெரிவித்தது பட நிறுவனம்.

செப்டம்பர் 6: இளையராஜா இசையமைப்பில் ஆதி நடிக்கும் கிளாப் பட டீசர்

YouTube video thumbnail

பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் கிளாப். ஆகான்ஷா சிங், பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியானது.

செப்டம்பர் 7: இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய பிரபல புல்லாங்குழல் கலைஞர்

Story image

யூடியூபில் அஸ்வினி-யின் புல்லாங்குழல் காணொளிகளைக் காணாத இசை ரசிகர்கள் இருக்க முடியாது. இளையராஜாவின் தீவிர ரசிகையான பெங்களூரைச் சேர்ந்த புல்லாங்குழல் கலைஞர் அஸ்வினி கெளசிக், இளையராஜாவின் பாடல்களைப் புல்லாங்குழலில் வாசித்து அதன் காணொளிகளால் ரசிகர்களிடம் புகழ் பெற்றிருந்தார். இதைக் கேள்விப்பட்ட இளையராஜா, அஸ்வினியைத் தன் இசைக்குழுவில் சேர்த்து ஒரு படத்தில் பணியாற்ற வைத்துள்ளார். இதுபற்றி தனது ஃபேஸ்புக் பதிவில் இளையராஜாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்து அஸ்வினி கெளசிக் கூறியதாவது:

இளையராஜா சாருடன் அவருடைய புதிய ஸ்டூடியோவில் 3 நாள்கள் ஒலிப்பதிவில் பணியாற்றினேன். இந்த அனுபவத்துடன் ஒப்பிட்டால் இதுவரை நான் அனுபவித்தது ஒன்றுமில்லை. இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய அனைவரும் அவர் மீது பெரிய மதிப்பு வைத்துப் பேசுவது ஏன் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். ஒரு நொடி கூட யோசிக்காமல் புதிய இசைக்குறிப்புகளை வழங்கும் மேஜிக்கை நேரடியாகப் பார்த்தேன். கனவு நிறைவேறியது, அந்த இசைக்குறிப்புகளை நானும் வாங்கி வாசித்தேன். 

அவரிடமிருந்து எதுவும் தப்பிக்க முடியாது. ஒவ்வொரு வாத்தியத்தைப் பற்றியும் அதை வாசிப்பவர்களைப் பற்றியும் நுணுக்கமாக அவர் அறிவார். இசைக்குறிப்புகளை எப்படி வாசிக்க வேண்டும் என அனைவருக்கும் கற்றுத் தருவார். நாளின் கடைசியில் முழுப் பாடலையும் கேட்பது மகத்தான அனுபவம். எல்லோரும் வாசித்தது, காட்சிக்குத் தேவையான உணர்வுகள் எல்லாம் சில நிமிடங்களில் முடிவு செய்யப்பட்டவை. இன்னொரு ஆச்சர்யமான விஷயம், நாங்கள் கிட்டத்தட்ட 40 மணிநேரம் ஒன்றாகப் பணிபுரிந்ததில் ஒரு நிமிடம்கூட நாங்கள் பணியாற்றிக்கொண்டிருந்த இசைக்குத் தொடர்பில்லாத எதையும் அவர் பேசவில்லை. இளையராஜா என்னிடம் கன்னடத்திலேயே பேசினார். அதைக் கேட்பது பேரின்பமாக இருந்தது. இளையராஜாவைப் பற்றிய அனைத்துமே தெய்வீகத்தன்மையுடன் இருந்தன என்றார்.

செப்டம்பர் 20: இளையராஜாவுடன் கமல் ஹாசன் சந்திப்பு 

YouTube video thumbnail

இசையமைப்பாளர் இளையராஜாவை நடிகர் கமல் ஹாசன் நேரில் சந்தித்தார். இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் இச்சந்திப்பு நடைபெற்றது. 

செப்டம்பர் 20: யுவன் சங்கர் ராஜா பகிர்ந்த இளையராஜாவின் காணொளி

பேர் வைச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடலின் உருவாக்கம் குறித்தும் கவிஞர் வாலியுடனான உரையாடல்கள் குறித்தும் இளையராஜா பேசிய காணொளியை அவருடைய மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார்.

செப்டம்பர் 25: எஸ்.பி.பி.  நினைவஞ்சலிக் கூட்டத்தில் உருகிய இளையராஜா 

YouTube video thumbnail

எஸ்.பி.பி. இறந்து ஒரு வருடம் ஆனதையொட்டி சென்னையில் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:

பல மேடைகளில் என்னைப் புகழ்ந்து பாலு பேசியிருக்கிறார். அவர் புகழ்ந்து எனக்கொன்றும் ஆகப்போவதில்லை. நான் அவரைப் புகழ்ந்து அவருக்கொன்றும் ஆகப்போவதில்லை. ஏனால் எனக்கு அவர் மனத்துக்குள் என்ன இடம் கொடுத்திருக்கிறார் என்பது முக்கியம்.

எஸ்.பி.பி. உடல்நிலை மோசமானவுடன், பாலு உனக்காகக் காத்திருக்கிறேன். சீக்கிரம் வா என ஒரு விடியோ வெளியிட்டேன். எஸ்.பி.பி.க்கு நினைவு வந்தபிறகு அந்த விடியோவை எஸ்.பி. சரண் போட்டுக் காட்டியிருக்கிறான். உடனே எஸ்.பி.பி. கண் கலங்கி, போனை வாங்கி எனக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். யாரையாவது பார்க்க வேண்டுமா என எஸ்.பி.பி.யிடம் கேட்டிருக்கிறார்கள். ராஜாவை வரச் சொல்லு என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தை போதாதா, அவருடைய மனத்தில் எனக்கு என்ன இடம் கொடுத்திருந்தார் என்பதை அறிய. அந்த மாதிரியான நட்பு எங்களுடையது. என்னுடைய ஒவ்வொரு மேடையிலும் அவரும் இருக்கிறார் என்பதுதான் சத்தியம் என்றார். எஸ்.பி.பி.க்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக தன்னுடைய யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றையும் வெளியிட்டார். 

அக்டோபர் 8: இளையராஜா இசையமைத்த மாயோன் பட டீசர்

YouTube video thumbnail

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே.எஸ். ரவிக்குமார் போன்றோர் நடிப்பில் என். கிஷோர் இயக்கியுள்ள படம் - மாயோன். இசை - இளையராஜா. தயாரிப்பு - அருண் மொழி மாணிக்கம். இப்படத்தின் டீசர் வெளியானது.

அக்டோபர் 27: இளையராஜாவுக்கு பால்கே விருது: கவிஞர் வைரமுத்து கோரிக்கை

திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது. சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி. பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர்,  கே. விஸ்வநாத் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது மேலும் பெருமை சேர்த்துள்ளது. 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கூறியதாவது:

பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
பால்கே விருதுக்குத் 
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் 
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் 
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்

என்று கூறினார்.

நவம்பர் 19: அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜா விளம்பரம்

YouTube video thumbnail

உலகப் புகழ் பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜாவின் விளம்பரம் இடம்பெற்றது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கம் அமைந்துள்ளது. உலகின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இப்பகுதி உள்ளது. ஒரு வருடத்துக்கு 50 மில்லியன் பேர் இப்பகுதிக்கு வருகிறார்கள். ஒருநாளைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இப்பகுதியைக் கடக்கிறார்கள். அதில் பலரும் சுற்றுலாப் பயணிகள். வணிக வளாகங்கள், மால்கள் நிறைந்த டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரம் செய்வதால் பெரிய கவனம் கிடைக்கும். 

டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜா இடம்பெற்ற ஸ்பாடிஃபை விளம்பரம் இடம்பெற்றுள்ளது. இதனைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார் இளையராஜா. 

நவம்பர் 19: ட்விட்டரில் இணைந்த இளையராஜா

Story image

2015-லேயே ட்விட்டரில் இணைந்த இளையராஜா, நவம்பர் 19 அன்று முதல் ட்வீட்டை வெளியிட்டார். நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் விளம்பரம் குறித்து முதல் ட்வீட் வெளியிடப்பட்டது. சில காணொளிகளை இதுவரை வெளியிட்டுள்ள இளையராஜா, தன்னுடைய டியூன் ஒன்றுக்கு பாடல் வரிகளை எழுதும்படி ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தார். ஏராளமான ரசிகர்கள் அதற்குப் பதில் அளித்தார்கள். தமிழில் மட்டுமல்லாமல் இதர மொழியிலும் பாடல் வரிகளைத் தரவேண்டும் என ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டார். சிறந்த பாடல் வரிகள் எவை என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்று நவம்பர் 27-ல் கூறினார். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாட ட்விட்டர் தளத்தில் இளையராஜா தொடர்ந்து இயங்குவார் எனத் தெரிகிறது.

நவம்பர் 21: எம். மணிகண்டனின் கடைசி விவசாயி படத்தில் இளையராஜா இல்லை!

விஜய் சேதுபதி நடிப்பில் காக்கா முட்டை படப்புகழ் இயக்குநர் எம். மணிகண்டன் இயக்கிய படம் - கடைசி விவசாயி. இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா முதலில் ஒப்பந்தமானார். ஆனால் மணி கண்டன் - இளையராஜா ஆகிய இருவரிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கூட்டணி உடைந்தது. நவம்பர் 21 அன்று கடைசி விவசாயி படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது. அதில் படத்தின் இசையமைப்பாளர்களாக சந்தோஷ் நாராயணன் - ரிச்சார்ட் ஹார்வி ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இளையராஜா இசையமைத்த கடைசி விவசாயி படத்தின் முதல் டிரெய்லர் இதுதான். 

YouTube video thumbnail

நவம்பர் 24: கமலுக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விரைவில் நலம் பெற வேண்டும் என இசையமைப்பாளா் இளையராஜா வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் கமல் ஹாசன் கரோனாவால் பாதிக்கப்பட்டபோது இளையராஜா ட்விட்டரில் தெரிவித்ததாவது:

நலமாக வரவேண்டும் சகோதரரே. கலை உலகை ஆ..... ஹா..... என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம் எனத் தெரிவித்தார். 

நவம்பர் 26: வஸந்த் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த படம் ஓடிடியில் வெளியீடு

Story image

பார்வதி, லக்‌ஷ்மி ப்ரியா, காளீஸ்வரி, கருணாகரன் நடிப்பில் வஸந்த் எஸ். சாய் இயக்கிய படம் - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். பல சர்வதேசப் பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றது. சோனி லைவ் ஓடிடியில் இப்படம் நவம்பர் 26 அன்று வெளியானது.  

பிரபல எழுத்தாளர்களான அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளைக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. இசை - இளையராஜா. ஒளிப்பதிவு - ஏகாம்பரம், ரவி சங்கரன். படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்.

டிசம்பர் 6: இளையராஜா, யுவன் இசையமைத்த மாமனிதன் பட டீசர் வெளியானது

YouTube video thumbnail

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது.

இரு பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டீசர் வெளியானது. 

டிசம்பர் 10: மனதை உருக்கும் இளையராஜா இசையமைத்த 'மாயோனே' பாடல்

YouTube video thumbnail

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே.எஸ். ரவிக்குமார் போன்றோர் நடிப்பில் என். கிஷோர் இயக்கியுள்ள படம் - மாயோன். இசை - இளையராஜா. தயாரிப்பு - அருண் மொழி மாணிக்கம். இளையராஜா எழுதி இசையமைத்த மாயானோ என்கிற பாடல் டிசம்பர் 10 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. பிரபல கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி இப்பாடலைப் பாடியுள்ளார்கள். 

டிசம்பர் 10: தெலுங்கில் வெளியான இளையராஜா இசையமைத்த கமனம்

YouTube video thumbnail

ஷ்ரேயா சரண், நித்யா மேனன் நடிப்பில் சுஜானா ராவ் இயக்கிய கமனம் படம் டிசம்பர் 10 அன்று தெலுங்கில் வெளியானது. இந்தப் படம்தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. 

டிசம்பர் 21: இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஆசை - தனுஷ்

அத்ராங்கி ரே ஹிந்திப் படத்தில் நடித்த தனுஷ், காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது தனுஷிடம், யாருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளீர்கள் எனக் கேட்டார் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர். இதற்குப் பதிலளித்த தனுஷ், ரஜினி மற்றும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க விருப்பமாக உள்ளதாகத் தெரிவித்தார். மற்றொரு பேட்டியில், இளையராஜா தான் என்னுடைய கடவுள், தாய், தாலாட்டு என்றார். தனுஷ் இதுவரை நடித்த தமிழ்ப் படங்களில், அது ஒரு கனா காலம் படத்துக்கு மட்டுமே இளையராஜா இசையமைத்துள்ளார்.

டிசம்பர் 31: இளமை இதோ பாடலைப் பாடிய இளையராஜா

புத்தாண்டுப் பாடல் என்றால் இளமை இதோ இதோ பாடல் தான். இந்தப் பாடலைப் பாடி அதன் விடியோவை ட்விட்டரில் வெளியிட்டார் இளையராஜா. 

ஜனவரி 7: இளையராஜாவுடன் இணைந்த சுசி கணேசன்

Story image

பிரபல இயக்குநர் சுசி கணேசன் முதல்முறையாக இளையராஜாவுடன் இணைகிறார். வஞ்சம் தீர்த்தாயடா என்கிற சுசி கணேசன் இயக்கும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாக ட்விட்டரில் சுசி கணேசன் தெரிவித்தார். 

ஜனவரி 24: இளையராஜாவின் முதல் மாணவர்

இளையராஜாவின் முதல் மாணவர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் லிடியன் நாதஸ்வரம்.

கடந்த 2019-ம் ஆண்டு சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பியானோ திறமையை வெளிப்படுத்தி உலகளவில் கவனம் ஈர்த்தார் சென்னையைச் சேர்ந்த 13 வயது லிடியன் நாதஸ்வரம். அந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் லிடியன் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 6 கோடியே 96 லட்சம் பரிசுத்தொகையை வென்றார். லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ் இசையமைப்பாளராக உள்ளார். மேலும், லிடியனும் இசையமைப்பாளராகியுள்ளார். பிரபல மலையாள நடிகர் மோகன் லால் இயக்கும் Barroz என்கிற 3டி படத்துக்கு இசையமைக்கிறார் லிடியன். அத்கன் சத்கன் (Atkan Chatkan) என்கிற ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார். 

ட்விட்டரில் லிடியன் கூறியதாவது: 

என்னுடைய இசை ஆசிரியர், மேஸ்ட்ரோ இளையராஜா அங்கிள் இன்று என்னிடம் கூறினார், நான் தான் அவருடைய முதல் மற்றும் ஒரே மாணவனாம். இதை மகிழ்ச்சியுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஒவ்வொரு நாளும் அன்பும் அக்கறையுடனும் எனக்குக் கற்றுத் தருகிறார் என்றார். 

பிப்ரவரி 6: லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா

வசீகர குரலால் தெற்காசிய மக்களைப் பல தலைமுறைகளாக மகிழ்வித்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா் (92), மும்பையில் மறைந்தாா். அரசு மரியாதையுடன் மும்பையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமா் மோடி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனைத் தலைவா் ராஜ் தாக்கரே, நடிகா்கள் ஷாருக்கான், அமீா் கான், கிரிக்கெட் வீரா் டெண்டுல்கா் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினா். அவரது மறைவுக்கு மத்திய அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்துள்ளது. கடந்த 80 ஆண்டுகளில் தமிழ், ஹிந்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 36 இந்திய மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களை அவா் பாடியுள்ளாா்.  பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே மற்றும் பல தேசிய விருதுகளையும், பல திரைப்பட விருதுகளையும் லதா மங்கேஷ்கா் பெற்றுள்ளாா்.

Story image

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விடியோ வெளியிட்டு இளையராஜா கூறியதாவது: 

இந்தியத் திரைப்பட இசையுலக வரலாற்றில் கடந்த 60, 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய தெய்வீகக் குரலால் உலக மக்களையெல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கரின் மறைவு என்னுடைய மனத்தில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வேதனையை எப்படிப் போக்குவேன் எனத் தெரியவில்லை. அவருடைய இழப்பு இசை உலகத்துக்கு மட்டுமல்ல, இந்த உலகுக்கே மாபெரும் இழப்பாகும் என்றார். 

பிப்ரவரி 9: சென்னையில் ராஜா இசைக் கச்சேரி

Story image

ராக் வித் ராஜா என்கிற இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பற்றி அறிவிப்பு வெளியானது. மார்ச் மாதம் இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

பிப்ரவரி 14: இளையராஜாவின் 1422-வது படம் அறிவிப்பு

Story image

காதலர் தினத்தன்று இளையராஜாவின் 1422-வது படம் குறித்து அறிவிக்கப்பட்டது. 

ஏ பியூட்டிஃபுல் பிரேக்அப் என்கிற ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. அஜித்வாசன் இயக்கிய இப்படத்தில் கிரிஷ், மாடில்டா போன்றோர் நடித்துள்ளார்கள்.

பிப்ரவரி 16: 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்த சகோதரர்கள்

Story image

இன்று நடந்த சந்திப்பு... இறை அருளுக்கு நன்றி… உறவுகள் தொடர்கதை என்று ட்வீட் வெளியிட்டு இளையராஜாவுடன் இணைந்து எடுத்த படத்தைப் பகிர்ந்தார் அவருடைய சகோதரர் கங்கை அமரன். 13 வருடங்களுக்குப் பிறகு இருவரும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்கள். 

பிப்ரவரி 20: விரைவில் ஹவ் டு நேம் இட் 2

ஹவ் டு நேம் இட் இசை ஆல்பத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாக இளையராஜா தெரிவித்தார். 

திரைப்படங்களில் எல்லாம் 2-ம் பாகம் வரும்போது இசையிலும் ஏன் வரக்கூடாது என ஒரு யோசனை வந்தது. அதனால் ஹவ் டு நேம் இட் 2 சீக்கிரமே வரப்போகிறது எனத் தகவல் தெரிவித்தார் இளையராஜா. 

YouTube video thumbnail

பிப்ரவரி 23: துபையில் இசை நிகழ்ச்சி

மார்ச் 5 அன்று துபையில் எக்ஸ்போ 2022-ல் தன்னுடைய இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார் இளையராஜா. 

மார்ச் 6: இளையராஜாவுக்குக் கோரிக்கை வைத்த ரஹ்மான்

Story image

ஏ.ஆர். ரஹ்மானின் ஒரு ட்வீட் ராஜா, ரஹ்மான் என இரு தரப்பு ரசிகர்களையும் ஆச்சர்யப்பட வைத்தது.

எங்களுடைய ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வருங்காலத்தில் எங்களுடைய ஸ்டூடியோவுக்காகப் பாடல் ஒன்றை இசையமைப்பார் என நம்புகிறேன் என்று கூறி ராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்தார் ரஹ்மான். துபை இசை நிகழ்ச்சிக்காக அங்குச் சென்ற இளையராஜா, துபையில் உள்ள ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கும் சென்றார். அங்கு இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் ராஜாவுக்கு ரஹ்மான் கோரிக்கை வைத்ததும் ரசிகர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை அளித்தது.

அடுத்த நாளே, ரஹ்மானின் கோரிக்கையை ஏற்பதாகவும் விரைவில் இசைப்பணியைத் தொடங்குவதாகவும் ராஜா ட்வீட் வெளியிட்டார். 

மார்ச் 18: சென்னையில் நடைபெற்ற இளையராஜா இசை நிகழ்ச்சி

இளையராஜாவின் ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சி சென்னையில் தீவுத்திடலில் நடைபெற்றது. இரு வருடங்களுக்குப் பிறகு சென்னையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றார்கள். இரவு ஏழு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி இரவு 12 மணிக்குப் பிறகும் நடைபெற்றது. 

ஏப்ரல் 2: இளையராஜாவின் இசைக்குச் சர்வதேச விருது

ஆம்ஸ்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த அசல் இசைக்கான விருது இளையராஜா இசையமைத்த ஆங்கிலப் படத்துக்கு அறிவிக்கப்பட்டது. 

ஏ பியூட்டிஃபுல் பிரேக்அப் என்கிற ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. அஜித்வாசன் இயக்கிய இப்படத்தில் கிரிஷ், மாடில்டா போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் பின்னணி இசைக்கு ஆம்ஸ்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 4: இளையராஜா மேல்முறையீட்டு வழக்கு:  இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

கடந்த 1980-களில் வெளியான இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களின் இசையைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து இசையமைப்பாளா் இளையராஜா தொடுத்த மேல் முறையீட்டு மனுவுக்கு இந்தியன் ரெக்காா்டு உள்ளிட்ட 3 இசை நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இளையராஜா இசையமைத்து, கடந்த 1978 முதல் 1980 வரையிலான ஆண்டுகளில் வெளியான 20 தமிழ், 5 தெலுங்கு, 3 கன்னடம், 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசைப் பணிகளை அந்தப் படங்களின் தயாரிப்பாளா்களிடமிருந்து காப்புரிமை பெற்றுள்ளதால், அந்தப் படங்களின் இசையையோ, பாட்டுகளையோ பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரி சென்னை அண்ணா சாலையிலுள்ள இந்தியன் ரெக்காா்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த 30 படங்களின் இசை, பாடல்களைப் பயன்படுத்த இளையராஜா மற்றும் மலேசியாவைச் சோ்ந்த அகி மியூசிக், ஹரியாணாவை சோ்ந்த யுனைசிஸ் இன்போ சொலியூஷன்ஸ் ஆகிய இரு மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து 2020 பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து இளையராஜா தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், படத் தயாரிப்பாளா்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியன் ரெக்காா்டு உற்பத்தி நிறுவனத்துக்கு ஆதரவாக எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது.

படத் தயாரிப்பாளா்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை, பாடல்களின் காப்புரிமை இசையமைப்பாளா்களுக்கே உள்ளது. அந்த வகையில் ஒரு படத்தின் இசை தொடா்பான பணிகளுக்கு முதல் உரிமையாளா் இசையமைப்பாளா் மட்டுமே. மேலும், இந்தியாவில் டிஜிட்டல் மீடியா உரிமம் என்பது 1996-ஆம் ஆண்டு முதல் தான் அமலில் உள்ளது. அந்த உரிமத்தை 1980-இல் வெளியான படங்களுக்கு கோர முடியாது என அதில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வில் நடைபெற்றது. அப்போது, இளையராஜா தரப்பில் வழக்குரைஞா்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோா் ஆஜராகி, இந்த வழக்கு வா்த்தகம் தொடா்பானது என்பதால், அதுதொடா்பான அமா்வே விசாரிக்க வேண்டும். ஆனால், தனி நீதிபதியின் உத்தரவு அந்த அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனா்.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடா்பாக இந்தியன் ரெக்காா்டு உற்பத்தி நிறுவனம், 2 இசை நிறுவனங்கள் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.

ஏப்ரல் 9: இளையராஜா இசையமைத்த காதல் செய் டிரெய்லர் வெளியானது 

கே. கணேசன் இயக்கத்தில் சுபாஷ், நேஹா, கணேசன், மனோ பாலா நடித்த காதல் செய் படத்துக்கு இசை - இளையராஜா. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. 

YouTube video thumbnail

ஏப்ரல் 11: இளையராஜா - ஐஸ்வர்யா ரஜினி கூட்டணியில் படம்?

Story image

இளையராஜாவுடன் ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார் ஐஸ்வர்யா ரஜினி. என்னுடைய திங்கள் கிழமை மதியம் இந்தளவுக்கு இசை ரீதியாகவும் மேஜிக்காகவும் இருக்க வாய்ப்பில்லை. அன்பான இளையராஜா அங்கிளுடன் நேரம் செலவழிப்பது எப்போதும் மகிழ்ச்சிகரமானது என்று ட்வீட் செய்தார் ஐஸ்வர்யா. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினி அடுத்து இயக்கும் படத்துக்கு ராஜா இசையமைப்பதாகத் தகவல் வெளியானது. 

ஐஸ்வர்யாவின் ட்வீட்டுக்குப் பதிலளித்த இளையராஜா, ஒருவருடைய வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறலாம். என்னுடைய அன்பு மட்டும் மாறாதது என்றார். 

ஏப்ரல் 15: மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா, எழுந்த சர்ச்சை!

இளையராஜா பேசினால் மட்டுமல்ல எழுதினாலும் சிலசமயம்  சர்ச்சை ஏற்படும். 

அம்பேத்கர் அண்ட் மோடி என்கிற நூலுக்கு இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அம்பேத்கர், மோடி ஆகிய இருவருமே வறுமையையும் ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள். இருவருமே இந்தியாவுக்காகப் பெரிய கனவு கண்டவர்கள். இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதிகள் என்று எழுதியிருந்தார். மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதுவதா என்று இளையராஜா மீது விமர்சனங்கள் எழுந்தன. முன்னுரை எழுதிய இளையராஜாவுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். 

இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவாக அவருடைய சகோதரர் கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறியதாவது:

இதுபற்றி இளையராஜாவிடம் பேசினேன். அதற்கு அவர், நான் என்னுடைய கருத்தைக் கூறினேன்.இதற்கு விமர்சனங்கள் வந்தால் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய கருத்தைத் திரும்பப் பெற முடியாது. பதவிக்காக நான் மோடியைப் புகழவில்லை. நான் எந்தப் பதவியிலும் இல்லை. நான் பாஜகவிலும் இல்லை. தனிப்பட்ட முறையில் மோடி, அம்பேத்கரைப் பிடிக்கும். அதனால் முன்னுரையில் அவ்வாறு எழுதினேன் என்றார் என கங்கை அமரன் கூறினார். இதனால் மேலும் சர்ச்சை உருவானது. எனினும் சர்ச்சைகளுக்கு இளையராஜா எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

ஏப்ரல் 21: நான் உனை நீங்க மாட்டேன் என்று பாடிய ராஜா

முன்னுரை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் இளையராஜா ஒரு ட்வீட் வெளியிட்டார். நான் உனை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன் என்கிற பாடல் வரிகளைப் பாடினார். 

ஏப்ரல் 22: இளையராஜாவின் காதல் செய் பாடல்கள் வெளியீடு

கே. கணேசன் இயக்கத்தில் சுபாஷ், நேஹா, கணேசன், மனோ பாலா நடித்த காதல் செய் படத்துக்கு இசை - இளையராஜா. இப்படத்தின் ஐந்து பாடல்கள் இன்று வெளியாகின. 

YouTube video thumbnail

ஏப்ரல் 29: இளையராஜாவின் இசையைப் பாராட்டிய ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ பட இயக்குநர்

1997-ல் வெளிவந்த ஈரானியப் படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவனை இயக்கியவர், மஜித் மஜிதி. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. உலக சினிமா ஆர்வலர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்ட இந்தப் படம், தற்போது தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.

இளையராஜா இசையில் சாமி இயக்கத்தில் சில்ட்ரன் ஆஃப் ஹெவனின் தமிழ் ரீமேக், அக்கா குருவி என்கிற பெயரில் உருவாகியுள்ளது. மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ளன. மாஹின் என்கிற சிறுவனும் டாவியா என்கிற சிறுமியும் இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களையும் இளையராஜா எழுதியுள்ளார். 

Story image

அக்கா குருவி படத்தைப் பார்த்த இயக்குநர் மஜித் மஜிதி, ஒரு பாராட்டுக் கடிதம் ஒன்றை படக்குழுவினருக்கு அனுப்பியுள்ளார். கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: என்னுடைய சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவாகியுள்ள அக்கா குருவி படத்தைப் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி. மூலப்படத்தில் உள்ள உணர்வுகளை, கதையை இப்படத்தில் கையாண்ட விதம் அற்புதமாக இருந்தது. மிக உண்மையான மறு உருவாக்கமாக படம் அமைந்துள்ளது. கிளைக்கதையாக வரும் காதல் கதை, உங்கள் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளதாக நம்புகிறேன். இப்படத்தின் இசையை மிகவும் ரசித்தேன். கதையின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புத இசை. முடிந்தால் உங்கள் அனைவரையும் சந்திக்கவும், இப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன்.  இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்று மஜித் மஜிதி தெரிவித்துள்ளதாகப் படக்குழு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. 

ஏப்ரல் 29: கேஜிஎஃப் 2 படம் பார்த்த இளையராஜா, கமல் ஹாசன் 

Story image

சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தை இளையராஜாவும் கமல் ஹாசனும் சென்னையில் கண்டுகளித்துள்ளார்கள். 

மே 4: இளையராஜா இசையமைத்த அக்கா குருவி பட டிரெய்லர் 

இளையராஜா இசையில் சாமி இயக்கியுள்ள அக்கா குருவி படத்தின் டிரெய்லர் வெளியானது.

YouTube video thumbnail

மே 6: அக்கா குருவி பாடல்கள்

அக்கா குருவி படம் வெளியான நாளன்று (மே 6) படத்தின் அனைத்துப் பாடல்களும் இளையராஜாவின் யூடியூப் தளத்தில் மொத்தமாக வெளியிடப்பட்டன. அதற்கு முன்பு மூன்று பாடல்களும் தனித்தனியாக வெளியிடப்பட்டன. 

YouTube video thumbnail

மே 24: சாமி ஏதாவது வேலை இருக்குதா?: இளையராஜாவிடம் கேட்ட ரஜினி

Story image

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்குக் காலை வருகை தந்தார் இளையராஜா. அதன்பிறகு இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையைப் பார்வையிட வந்தார் ரஜினி. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை போயஸ் கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, சாமி ஏதாவது வேலை இருக்குதா என்று ரஜினிகாந்த் விசாரிக்க, என் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 2-ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன் என இளையராஜா கூறியுள்ளார். அப்படியா... நானும் அங்கே வருகிறேன் என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்துச் சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ஒத்திகைப் பணிகளையும் சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த். இரண்டு மூன்று பாடல்களுக்குக் கைத்தட்டி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார் என்று கூறப்பட்டுள்ளது. 

மே 25: அமெரிக்க இணையத்தொடருக்கு தீம் இசை வழங்கிய இளையராஜா

Story image

நெட்பிளிக்ஸில் வெளியாகும் அமெரிக்க இணையத்தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தீம் இசை வழங்கியுள்ளார். இதன் விடியோ வெளியாகியுள்ளது. 

ஸ்டிரேஞ்சர் திங்ஸ் 4-ம் பாகத்தின் இணையத்தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இயக்கம் - டஃபர் பிரதர்ஸ். தமிழ், தெலுங்கிலும் இத்தொடரை ரசிகர்கள் காண முடியும். 

வழக்கமாகத் தனது படங்களைத் தவிர மற்ற படங்களின் இசையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத இளையராஜா, ஸ்டிரேஞ்சர் திங்ஸ் 4 தொடருக்கு தீம் இசையை வழங்கியுள்ளார். அதன் வழக்கமான பின்னணி இசையுடன் தன்னுடைய இசையையும் கலந்து தந்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.