‘மறுமலர்ச்சி’ என்ற தமிழ்ப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த போது அதன் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்து கொண்டிருந்தது. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஒரு நகைச்சுவை நடிகர் வராமல் போகவே, நான் மணியைப் பற்றி இயக்குநரிடம் சொன்னேன். அவனை அழைத்து நடிக்க வைக்கலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் அவனை திருப்பி மட்டும் அனுப்பிவிட வேண்டாம் என்று இயக்குநரிடம் உறுதியளிக்கச் சொன்னேன். ஏனென்றால் ஒரு திறமையான கலைஞனை ஆசை காட்டி மோசம் செய்துவிடக் கூடாது என்று நினைத்ததால் தான். அவர்களும் அவனை ஃபோனில் அழைத்துப் பேசியிருக்கிறார்கள். ஆனால் தமிழ் தெரியாது என்ற காரணத்தால் அந்த வாய்ப்பை மணி ஏற்றுக் கொள்ளவில்லை. மணிக்கு உடனே நான் ஃபோன் செய்து கொஞ்சம் கோபமாகத் திட்டினேன். இது ஒரு நல்ல வாய்ப்பு மணி என்று எடுத்துச் சொன்னதும் அவன் உடனே அதை ஏற்று அடுத்த நாள் காலையில் சென்னையில் இருப்பதாக வாக்குக் கொடுத்தான். அது தான் மணியின் தமிழ்ப் பட ஆரம்பம். அதன் பிறகு தமிழ்ப்படங்களில் அவனுக்கான ஒரு இடமும் நல்ல பேரும் புகழும் கிடைத்தது.