சீனி கம், பா, ஷமிதாப் ஆகிய இந்திப் படங்களை இயக்கி புகழ்ப்பெற்ற தமிழர் ஆர்.பால்கி இயக்கியுள்ள மற்றும் ஒரு படம் கி & கா. நாயகியின் (கரீனா கபூர்) கியா, நாயகன் கபீர் (அர்ஜுன் கபூர்) இவர்களை மையமாக வைத்து சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஆழமான விஷ(ய)த்தை எடுத்துள்ளார் பால்கி. பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தேய்வழக்குச் சொல்லாடலாக இருந்தாலும் அதை சற்று அழுத்தமாகச் செய்திருக்கும் இயக்குனரைப் பாராட்டலாம்.
ஒரு பயணத்தில் சந்தித்து, அதன் தொடர்ச்சியாக அடிக்கடிப் பேசி நெருக்கமாகிறார்கள் அவர்கள். இருவரின் பெயர்களும் ஆங்கில எழுத்து ‘கே’ வில் தொடங்குவதிலிருந்து அவர்களின் பிறந்த தினமும் ஏப்ரல் 15 என்பது வரை சில ஒற்றுமைகள். ஆனால் ஒரு சிறிய வேற்றுமை, கியாவை விட அர்ஜுன் மூன்று வயது சிறியவன் என்பது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் கபீர் கியாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்கிறான். கியாவின் கனவு லட்சியம் எல்லாமே அவள் பணிபுரியும் கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர் அதிகாரியாவது தான். முதலில் அவள் மறுக்கிறாள். காரணம் அவளுக்கு நேர் எதிர் துருவத்தில் கபீரின் ஆசை உள்ளது. அவன் தன் அம்மாவைப் போல வீட்டை நிர்வகிக்க விரும்புகிறேன் என்று சொல்லவே அவனைப் பற்றிய குழப்பம் அவளுக்கு அதிகரிக்கிறது. கபீர் தன் நோக்கத்தில் மிகத்தெளிவாக இருக்கிறான். பணம், வெற்றி போன்றவற்றைத் துரத்தி ஓடாமல் வாழ்க்கையை நின்று நிதானித்து அனுபவிப்பதே அவன் விருப்பம். தன் வீடு தன் குடும்பம் என்ற மென் உணர்வு மிக்கவனான கபீருக்கு வேலை சூழ் வாழ்க்கை என்பது வீட்டை மேம்படுத்துவதில் மட்டுமே தான். இந்தச் சமூகத்தில் இல்லத்தரசி என்பதற்கு மாற்றாக ஆண் பாலைக் குறிக்க ஒரு சொல் கூட இல்லை. இல்லத்தரசன் எனும் சொல் அபத்தமாகத் தோன்றினாலும் அதுவே கபீர் தன் வாழ்க்கையில் தனக்கென தேர்ந்தெடுத்துக் கொண்ட நிலைப்பாடு. தனித்துவமிக்க ஒரு House Husband ஆக வாழவே ஆசைப்படுகிறான். அதை கியாவுக்கு விளக்கிச் சொல்லவே, அவள் அவனைப் பார்த்து வியக்கிறாள். கியாவின் தாய் சம்மதிக்க, கபீரின் தந்தை நிராகரிக்க ஒருவழியாக கீயும் கவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதற்கு முன் அவரவரின் பங்களிப்பை தெளிவாக வரையறைத்துக் கொள்கிறார்கள். சமையல் என்பது குடும்பப் பணிகள் என்பதையும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது என்பதை வாழ்ந்து காட்டுகிறார்கள்
கபீர் தினமும் காலையில் எழுந்து அவனுக்கான வேலைகளைச் செய்து முடிக்கிறான். மனைவிக்கு பெட் காபி போட்டுத் தருகிறான். தான் சொன்னது போலவே வீட்டை திறமையாக நிர்வகிக்கிறான். கியா வேலையில் படிப்படியாக முன்னேறி அவள் ஆசைப்பட்ட பதவியை அடைகிறாள். வெற்றி அவளுக்கு ஒரு சிறிய கர்வத்தை பரிசளிக்கிறது. அதை அதிகம் வெளியில் காட்டாமல் தன்க்குள் வைத்துக் கொள்கிறாள் கியா. ஆனால் கபீரிடம் மட்டும் ஒருசில சமயம் தன்னிலை மறந்து அதை வெளிப்படுத்தவே, கபீர் பொறுமையாகவும் பக்குவமாகவும் அவளைச் சமாளிக்கிறான்.
கியாவின் மேலாளர் பரிந்துரைத்த சமையல் எண்ணெய் விளம்பரத்தில் கபீர் நடிக்க, ஓரிரவில் பிரபலமாகி, மற்ற மீடியாக்கள் அவனைத் துரத்தும் நிலைக்கு உயர்கிறான். கபீர் தன் முகநூல் பக்கங்களில் தினமும் சமையல் குறிப்புகளைப் பரிந்துரைக்கிறான். பல புதிய நட்புகள் மட்டுமல்லாமல் கல்லூரி நட்புக்களும் மீண்டும் கிடைக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பெண்கள் அனைவரும் விரும்பும் ஆணாக உயர்கிறான் கபீர். ஒரு கட்டத்தில் அவனுடைய இந்த அபார வளர்ச்சி கியாவை பாதிக்கிறது. இது போல இருவருக்கும் இடையே எழும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் கியாவின் கோபத்தால் அவர்களின் பிரிவுக்கு வழிவகுக்குகின்றது. கியா கபீர் ஜோடி இணைந்தார்களா அல்லது பிரிகிறார்களா என்பதுதான் கதை.
காலகாலமாக சமூகம் கட்டமைத்த ஆண் என்றால் இப்படி இருக்க வேண்டும், பெண் என்றால் இப்படித்தான் நடக்கவேண்டும் போன்ற கோட்பாடுகளை கேள்விக்கு உட்படுத்துகிறது இந்தப்படம். அதை திணிப்பாகவோ கருத்தாக்கமாகவோ காட்டாமல் இயல்பான நல்ல கதையோட்டத்துடனும் கலகலப்பான காமெடியுடனும் இரண்டுமணி நேரத்துக்குள் இருவரது வாழ்க்கையை படம்படித்துக் காட்டுகிறது. ஆண் பெண் உறவில் உள்ள உண்மைத் தன்மையை, நெருக்கத்தை, விலகலை மற்றும் சில அற்புதமான தருணங்களை வெகு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் பால்கி. கரீனா கபூரின் நடிப்பும் இயல்பும் இப்படத்துக்கு கூடுதல் சிறப்பு. அதே போல் அமிதாப் பச்சனும் ஜெயா பச்சனும் திரையில் 12 வருடங்களுக்குப் பின் ஜோடியாகத் திரையில் தோன்றுகிறார்கள். கபீரைப் பார்க்க வேண்டும் என்று திருமதி பச்சன் பிரியப்பட அதற்கு அமிதாப்பின் நுட்பமான முக மாற்றம் அருமை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு வில்லனா என்று எள்ளல் செய்கிறார். கபீர் அவ்விடத்தை விட்டு அகலும் வரை அவர் கட்டிக்காக்கும் போலி அமைதி சிரிக்க வைத்தாலும் சிந்திக்கத் தூண்டும் காட்சியாகும். ஒரு அமிதாப் உருவாக ஒரு ஜெயா பச்சன் தேவை எனில் ஒரு ஜெயா பச்சனுக்காக ஏன் அமிதாப் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது என்று கேட்கும் மனைவியிடம் ஏன் இல்லை, நிச்சயம் செய்திருப்பேன் என்கிறார் அமிதாப். அது உண்மையா அல்லது பொய்யா என்ற கேள்வியை விட்டுவிட்டு நாம் யோசிக்க வேண்டியது என்னவெனில் ஒரு வெற்றிகரமான ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பது போல், ஏன் ஒரு வெற்றிகரமான பெண்ணின் பின்னனியில் ஆண்கள் இருப்பதில்லை? சமூகம் ஆணை வெற்றியாளனாகவும் பெண்ணை அவனை போஷிப்பவளாகவுமே பழக்கப்படுத்தியுள்ளது தான் காரணம்.
ஆண்கள் பெண்களின் தலைகளிலும் தோள்களிலும் சுமத்தியுள்ள குடும்ப பாரம் பலசமயம் அவர்களது சக்திக்கு மீறியதாகவே உள்ளது. தன்னை உருக்கி தன் குடும்பத்தை வளர்த்தவர்கள் தான் அத்தகைய தியாகப் பெண்கள். ஹவுஸ் வொஃப் என்ற பதத்தை ஹோம் மேக்கர் என்று முலாம் பூசிவார்களே தவிர பெண்களின் நேரத்தை முழுக்கவும் குடும்பம் என்ற அமைப்பு விழுங்கிக் கொள்வது தான் அன்றிலிருந்து தொடங்கி இன்று வரையிலான நிஜம். வேலைக்குப் போகும்பெண்ணின் நிலை இரட்டை குதிரைச் சவாரி போன்றது தான். கியா சொல்வது போல அவள் சூப்பர் சூப்பர் சூப்பர் வுமன்தான். அளப்பரிய சக்தியும் முனைப்பும் இருந்தால் தான் அதைத் திறம்பட செய்ய இயலும். தன் குடும்ப வளத்திற்காக இரண்டு பொறுப்புக்களையும் சுமக்கும் பெண்கள் இன்று அனேகம். வீட்டுப் பொறுப்பு என்பது பெண்களின் நித்திய கடமை எனவும் இதை செய்யாவிட்டால் மாபெரும் குற்றம் என்றும் சிறுவயது முதல் அவள் அறிவுறுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறாள். உண்மையில் வேலையில் ஏது ஆண் வேலை பெண் வேலை? எல்லா வேலைகளையும் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும் போது, இதை நீ செய் அதை நான் மட்டுமே செய்வேன் என்ற அதிகாரத்தை ஆண்கள் கையில் எடுத்துக் கொள்ளும் போதுதான் சிக்கல் உருவாகிறது. சம்பாதிப்பவர்களுக்கே உரிய கர்வம் என்னவெனில் எல்லாம் தன்னால் தான் நடக்கிறது, நான் தான் காரணம்…நான் இல்லாவிட்டால் இது போன்ற தன்னைப் பற்றிய உயர்வான சிந்தனைகள் அவர்கள் மனத்தில் இயற்கையாகவே எழுந்துவிடுகிறது. சம்பாதிப்பவரைச் சார்ந்து வாழ்பவர்கள் பெறும் நிலையில் இருப்பதால் ஒரு கீழ்மை உணர்வுடனே வாழ்வார்கள். ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பற்ற உணர்வு அவர்களிடம் படிந்திருக்கும். இந்த இரண்டு நிலையும் மாறி சமத்துவம் வந்தால் தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
இந்தப் படத்தில் கபீர் வீடு வாங்க பணம் தேவைப்படும் நிலையில் ஜிம் பயிற்சியில் பக்கத்துவீட்டுப் பெண்களை ஈடுபடுத்தி அதில் சிறிது பணம் சம்பாதிக்கிறான். டிவி, இணையம் என்று புகழின் உச்சிக்கு போன சமயங்களிலும் தன் இயல்பு மாறாமல் இருக்கிறான். அவனால் சம்பாதிக்க முடியாது என்பதல்ல, இந்த ஓட்டத்தில் பங்குபெற பிடிக்காததுதான் பிரச்னை. அதே பணத் தேவை இல்லாத போது இலவசமாகவே அப்பெண்களுக்கு அவன் பயிற்சி தருகிறான். அவனுடைய தனிப்பட்ட இத்தகைய குணாதிசயத்தை இயக்குனர் நயமாக கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.
கியா ஓட்டத்திலும் பதற்றத்திலும் எப்போதும் இருப்பதால் அவளுடைய உடல் நலம் பாதிப்படைகிறது. அவள் நல்லபடியாகத் தேற பத்தியமான ஆரோக்கியமான உணவைச் சமைக்க ஆரம்பிக்கிறான் கபீர். இப்படி தன் மனைவிக்காக ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை செலுத்தும் அவனுக்குக் கிடைத்த பரிசு கியாவிடமிருந்து நக்கலான விமரிசனங்களும் எரிச்சலான பேச்சுக்களும்தான். அவன் புகழ் அடைவதையும், ஒன்றும் செய்யாமல் வீட்டில் இருப்பதை பலர் பார்த்து கெட்டுப்போவார்கள் என்றும் குத்தலாகச் சொல்கிறாள். தன்னைப் பயன்படுத்தி அவன் புகழ் அடைந்ததாகவும் ஒரு கட்டத்தில் அவள் கோபத்துடன் சொல்லவே கடும் அதிர்ச்சி அடைகிறான் கபீர்.
வெற்றியும் இலக்கையும் நிர்ணயித்து அதன் பின் கண்களைக் கட்டிய குதிரையாக செல்பவர்கள் சுற்றி இருப்பவர்களின் சின்ன சின்ன ஆசைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் தர மாட்டார்கள். அவர்கள் கவனம் முழுவதும் ஒற்றை குவிமையத்தில் இருக்கும். பணம், புகழ், வெற்றி அதுமட்டுமே தான் அவர்களுக்கு பிரதானம். அவ்வகையில் கீ தான் தனது வெற்றி தனது பயணம் என்று தனியளாக வாகை சூடிக்கொண்டிருக்கையில், கபீர் அவளுக்கும் சேர்த்து எல்லாமுமாக இருக்கிறான். அவள் வாழத் மறுக்கும் தருணங்களை அவளுக்குப் பரிசளிக்கிறான். இப்படி அன்பை மட்டுமே பொழிந்து அன்பை மட்டுமே கோரும் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையே நிகழும் மனப் போராட்டமே கீ & கா. படம் வெளிவந்த நாளிலிருந்து இரு வேறு விமரிசனங்களை எதிர்கொண்டாலும் வசூலிலும் அள்ளிக் குவிக்கிறது. சமரசமின்றி பிடித்தவற்றை செய்வதற்காகத் தான் இந்த வாழ்க்கை. அதில் அன்பும் புரிதலும் இருக்கும் எனில் ஈகோ எட்டிப் பார்க்காது என்பதை இந்தப் படம் மிக அழகாக விளக்குகிறது.
படத்துக்கு பின்னணி இசையை இளையராஜா அமைத்துள்ளார். பாடல்களை இளையராஜா, மிதுன், மீட் பிரதர்ஸ் ஆகிய மூவர் இசையமைத்துள்ளார்கள். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பால்கியின் வெற்றிக் கூட்டணி இது. ஆங்காங்கே சில மிகையான காட்சிகள் இருந்தாலும் கீ & கா திரைப்படம் தரும் தாக்கத்திலிருந்து வெளிவர சில நாட்களாகும். ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்க்கும்போது அப்படித்தான் இருக்கும். கீ அண்ட் கா போன்று பல படங்கள் வந்தாலும் இந்திய சமூகக் கட்டமைப்பு மாறும் என்று சொல்லமுடியாது. ஆனால் முன்பு சொன்னது போல் மணிகட்ட தொடங்கிவிட்டது நல்ல விஷயம் தானே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

