சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கோவாவில் கொண்டாட்டம்! 46 வது சர்வதேச திரைப்பட விழா

தி டார்க் ஹார்ஸ்‘டார்க் ஹார்ஸ்’ என்ற பட்டம் பெற்ற ஜெனிஸிஸ் பொடினிக்கு செஸ் விளையாட்டு  தான் மூச்சு, பேச்சு. உயிர் எல்லாமே. சின்ன வயதில் தன்னுடைய அண்ணன் சொல்லிக் கொடுத்த செஸ் விளையாட்டு அவன் மனத்தில் ஆழமா

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:39 am

உமா ஷக்தி.

வண்ண வண்ண விளக்குகள். இரவு எது பகல் எது என்று தெரியாத வகையில் நள்ளிரவு வரை அரங்குகளைச் சுற்றி மக்கள் கூட்டம். நவம்பர் 20 முதல் 30 வரை கோவா மாநில தலைநகர்  பனாஜியில் ஐனாக்ஸ் திரை அரங்கமும், கலா அகாதெமி அரங்கமும் இப்படித்தான் திரைவிழா  கொண்டாட்டத்தில் மகிழ்ந்திருக்கிறது. 187 உலகத் திரைப்படங்கள், 47 இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2500 பிரபலங்கள், உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள திரைப்பட இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சகர்கள், ரசிகர்கள் என சர்வதேச திரைப்பட விழா வெகு சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமா என்ற கேள்வி திரைப்பட விழாக்களுக்குச் செல்லும்போது எனக்கு ஏற்படும். காரணம் அங்கு திரையிடப்படும் சர்வதேசப் படங்களில் நாம் பார்ப்பது வணிகத் தன்மையுள்ள படங்கள் அல்ல. உலகின் வரைபடத்தில் மட்டுமே நாம் பார்த்திருக்கக் கூடிய இடங்கள், வெவ்வேறு மக்களின் முகங்கள், அவர்களின் வாழ்க்கைமுறை, மொழி என அவர்களைச் சார்ந்து இயங்கும் அத்தனை விஷயங்களையும் ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்தில் குறுக்குவெட்டாக ஒரு திரைப்படத்தில் காண முடிகிறது.

உலகின் எந்த மூலையாக இருந்தால் என்ன, மனித உணர்வுகள ஒன்றுதான். நம் அனைவரின் வலிகள், கனவுகள் ஆசைகள், பிரச்னைகள், போராட்டங்கள் என எல்லாமே பொதுவான உணர்விலிருந்து எழுவதுதான். ண்ணீரும் பிரியமும் சந்தோஷமும் பொதுவானவை. இத்தகைய உலகத் திரைப்படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் மன எழுச்சி, தவிர உணர்வு நிலைமாற்றும் திரை அனுபவத்தைக் பெற விரும்பியே இத்திரைப்படங்களை அதிகமாக பார்க்கிறேன்.  அகலத் திரையில் ஆயிரம் பேருடன் அமர்ந்து படங்கள்  பாரத்தது தைஅனுபவத்தை மேலும் செழும ஆக்கியது. ஐந்து நாட்களில் இருபத்தி இரண்டு படங்கள் பார்த்தேன். திரைக்குள் வாழ்ந்தேன், திரையரங்குகளிலேயே வசித்தேன் என்றும் சொல்லலாம். காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 12.30 வரை திரை அரங்குக்குள் வசித்தேன் என்றும் சொல்லலாம். இடையில் உண்பதும் உறங்குவதும் சிறிது. இப்படி பித்தாக படம் பார்ப்பவர்களின் மொத்தக் கூட்டம் தான் கோவாவில் காணக் கிடைத்தது. சிலர் பத்து நாட்கள் முழுவதும் தங்கி படம் பார்க்கிறார்கள். சிலர் சுருக்கமாக கொடுக்கப்பட்ட கதைகளை முன்னரே படித்து, பிடித்த படங்களை மட்டும் பார்த்து, மற்ற நேரங்களில் அரங்குகளில் நடைபெறும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில், கலந்துரையாடல்களில் பங்கு கொண்டனர். நம் தமிழ் சினிமா இயக்குநர் வெற்றிமாறன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வுக்கு வந்திருந்தார். ஷேகர் கபூர், அனுராக் காஷ்யப், அஞ்சலி மேனன் போன்ற திரைப்பட இயக்குநர்கள் திரை ரசிகர்களாக ஆர்வமுடன் பங்கு கொண்டு கோவா திரை விழாவை ரசித்தனர்.

என் மனத்தை விட்டு அகலாத சில திரைப்படங்களை ஒரு சிறிய தொடராக எழுதுகிறேன்....

தி டார்க் ஹார்ஸ்

‘டார்க் ஹார்ஸ்’ என்ற பட்டம் பெற்ற ஜெனிஸிஸ் பொடினிக்கு செஸ் விளையாட்டு  தான் மூச்சு, பேச்சு. உயிர் எல்லாமே. சின்ன வயதில் தன்னுடைய அண்ணன் சொல்லிக் கொடுத்த செஸ் விளையாட்டு அவன் மனத்தில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்றாகிவிடுகிறது. பெற்றோர்கள் இல்லாமல் வாழும் நிலையில் இருக்கும் அவனுக்கு இளம் வயதிலிருந்தே மன அழுத்தப் பிரச்னைகள் உண்டு. நீண்ட நாட்கள் மனநல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து மீண்டும் அண்ணனிடம் தஞ்சம் அடைகிறான் ஜெனிஸஸ். இறுக்கமான முகத்துடன், வேண்டா வெறுப்புடன் தன் தம்பியை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் அவனுடைய அண்ணன் அரிகி.

மிகச் சிறிய அழுக்கான வாழ்விடம். தனியாக அவனுக்கு ஒரு அறை தர முடியாத நிலையில் தன் மகன் மனாவின் அறையை எடுத்துக் கொள்ளச் சொல்கிறான். ஆனால் மனாவுக்கு அதில் மன வருத்தம் என்பதை அறிந்து காரிலும் சோபாவிலும் தூங்கிக் கொள்கிறான் ஜெனிஸஸ். அவன் ஒரு பழைய செஸ் சாம்பியன் எனும் விஷயம் மனாவுக்குத் தெரிய வருகிறது. இருவருக்கும் ஒரு மெல்லிய நட்பு உருவாகிறது. பதின் வயதில் வாழ்க்கையில் தோற்றுவிடக் கூடாது என்று அவன் அண்ணன் அரிகி தேர்ந்தெடுத்த வழி வன்முறை. அவன் ஒரு ரவுடியாகி விடுகிறான். ஜெனிஸஸ் தேர்ந்தெடுத்த வழி தன்னுடைய மூளையை நம்பி விளையாட்டில் ஈடுபட்டு அதில் ஓரளவு வெற்றியும் அடைகிறான். ஆனால் அவனுடைய மனப்பிரச்னைகள், தனிமை பயங்கள் இவை அவனை அழித்தொழிக்க தொடர்ந்து எதிலும் ஈடுபட முடியாமல் தவிக்கும் மனச் சிக்கலுக்கு மீண்டும் மீண்டும் உள்ளாகிறான். அந்த காலகட்டத்தில் தான் மனநல மருத்துவமனையிலே தங்கிவிடுகிறான்.

அரிகியிடம் வந்தபின் வாழ்க்கையை புதியதாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ முடிவு செய்கிறான் ஜெனிஸஸ். ஆனால் அரிகிக்கு தன் மகன் மனாவையும் ஜெனிஸஸ் செஸ் விளையாட்டிற்குப் பழக்கப்படுத்தி அவனையும் ஒரு மன நோயாளியாக்கிவிடுவானோ என எரிச்சலுற்று சிறிது பணத்தைக் கொடுத்து அவனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிடுகிறான். அரிகி மனாவை தன் தொழிலுக்குள் நுழைக்க முடிவு செய்கிறான். அப்பா ஏதோ நோயின் விளைவாக நாட்களை எண்ணிக் கொண்டிருப்பது மனாவுக்குத் தெரியும். அதனால் தந்தையை எதிர்க்க முடியாமலும் அவர் தனக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ள வழியை ஏற்க முடியாமலும் தவிக்கிறான்.

இத்தகைய குற்றச் சூழல் அரிகியின் வீட்டில் மட்டுமல்லாது அந்தச் சிறிய கிராமத்தில் ஒரு வியாதியைப் போலவே பரவிக் கிடக்கிறது. சிறுவர்கள் பெரும்பாலும் குற்றம் செய்யத் தூண்டப்படுபவர்களாக இருக்கிறார்கள். அல்லது அவர்கள் தந்தை குற்றவாளியாக சிறையில் இருக்க அனாதரவாக இருக்கிறார்கள். வாழ்வதின் அர்த்தம் என்பது தெரியாது மனம் அலையுறுபவர்களாக இருக்கும் அவர்களின் கவனத்தை திசை திருப்பி நல்வழிப்படுத்த ‘ஈஸ்டர்ன் நைட்ஸ்’ என்ற செஸ் அகாதெமியை அமைக்கிறான் ஜெனிஸிசின் நண்பன் நோபல். தன்னுடைய சிறிய கிராமத்தில் முளைத்திருக்கும் இந்த மிகச் சிறிய செஸ் அகாதெமிக்கு வரும் எந்த வசதி வாய்ப்புமற்ற அந்தக் குழந்தைகளுக்கு தன்னுடைய திறமைகளை யுக்திகளை சொல்லிக் கொடுத்து சிறப்பாக அவர்களுக்கு செஸ் விளையாட்டை கற்றுக் கொடுக்கிறான் ஜெனிஸஸ். சோர்வுற்று அவர்கள் வீழும் போதெல்லாம், நம்பிக்கை சொல்லி செஸ் விளையாட்டின் உன்னதத்தை எடுத்துச் சொல்கிறான். வீரமும் நெகிழ்ச்சியுமாக அவன் சொல்லும் கதைகள் குழந்தைகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்து ஒரு கட்டத்தில் அவர்கள் செஸ் விளையாட்டை தங்கள் வாழ்க்கையின் முக்கியமான ஒன்றாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மணிக்கணக்காக பயிற்சி எடுக்க ஆரம்பிக்கிறார்கள். இதுதான் அந்த விளையாட்டில் உள்ள சூட்சுமம் என்பது செஸ் ஆர்வலர்களுக்குத் தெரியும். இதற்கென்றில்லை, எதில் மனத்தை ஒப்புக் கொடுத்துவிட்டோமோ அதில் ஈடுபடுவதும் அதைத் திரும்பத் திரும்பச் செய்வதும் நம்மை வளமாக்கும் அல்லவா? பட்டைத் தீட்டத் தீட்ட தான் வைரம் அப்படி ஜொலிக்கிறது. ஒரு கல்லுக்கே இத்தனை அடி தேவைப்பட்டால் மனிதனுக்கு? வாழ்வின் வரம் எது சாபம் எது என்பதை எல்லாம் நாமாக விளங்கிக் கொள்ளவே முடியாது. அனுபவங்களின் வாயிலாகக் கிடைக்கும் தரிசனங்களே ஞானத்தின் பாதையின் படிகளாகும். ஜெனிஸஸ் அந்தப் பிள்ளைகளுக்கு குருவாகவும் ஞானத் தந்தையாகவும் தன்னையறியாமலே திகழ்கிறான்.

தன் அண்ணன் தனக்குக் கொடுத்த சிறிய தொகையைக் கூட அந்தக் குழந்தைகளுக்கு அழகான செஸ் போர்டுகளை வாங்கிப் பரிசளித்து மகிழ்கிறான்.அவர்களை போட்டிகளில் பங்கெடுக்கச் செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக நினைத்துக் கொள்கிறான் ஜெனிஸிஸ். அவ்வகையில் ஆத்ம திருப்தியும் சுய தேடலுக்குமான வாழ்தலுக்குமான விடையைக் காண்கிறான் அவன்.

விளையாட்டு என்பது எந்த அளவிற்கு வாழ்க்கைக்குத் தேவை? அதுவும் மூளைக்கு வேலை கொடுக்கும் சதுரங்க விளையாட்டில் எத்தனை பேருக்கு ஈடுபாடு இருக்கும்? செஸ் விளையாடத் தெரிந்தவர்கள் இந்தப் படம் பார்த்தால் மிகவும் கொண்டாடுவார்கள். தெரியாவிட்டாலும் அதுவொன்றும் குறையில்லை, வாழ்க்கைக்கான பாடம் இந்தப் படம் நெடுகிலும் காணக் கிடைக்கிறது. அதிலும் அண்ணன் தம்பிக்கு இடையே நடக்கும் மெல்லிய அதே சமயம் உக்கிரமான போராட்டம், தேர்ந்தெடுத்த வழிகளின் காயங்கள், தன் மூளைக்குள் பிரச்னைகள் இருந்தாலும் மனத்தால் அப்பழுக்கறவனாக அடுத்தவர் நலனில் அக்கறையுள்ளவனாக இருக்கும் ஜெனிஸிஸை மக்கள் எப்போதும் கொண்டாடுவார்கள். இந்தத் திரைப்படம் சொல்லாமல் விட்டுச் செல்லும் இடங்கள் யாவும் கவிதையாக நிறைகிறது.

ஒரு காட்சியில், வேனில் குழந்தைகளை ஆக்லேண்டில் நடைபெறவுள்ள செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் செல்கிறான் ஜெனிஸஸ். ஜன்னல் வழியாக, விழிகள் விரிய அச் சிறுவர் சிறுமியர் பார்க்கும் உலகம் தான் எத்தனை அழகானது; எவ்வளவு இயற்கையானது. மிகச் சிறிய கூட்டுக்குள் வாழ்க்கை ஒடுங்கி விடக் கூடாது. வானம் வரை பறக்க நினைக்க மட்டுமல்லாது முயற்சியாவது செய்ய வேண்டும். அப்போது நிச்சயம் பறத்தல் சாத்தியப்படும் என்பதை அந்தக்காட்சி ஒரே கணத்தில் புரிய வைக்கிறது. பதின் வயதில் நாம் யாராக வேண்டும், தன் கனவு எது என்றுதேர்ந்தெடுக்கத் தெரிந்துவிட்டால் அவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் ஜொலிப்பார்கள். மனாவின் வாழ்க்கைப் பாதையை விதி மாற்றும் முன், ஜெனிஸஸ் மாற்றி எழுதுகிறான். ஆக்லேண்ட் போட்டியில் இவர்கள் ஜெயிக்கிறார்களா தோற்றுப் போகிறார்களா, ஜெனிஸசின் கனவு நினைவாகிறதா என்பதை நேர்மையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

சந்தோஷத்தில் மிகப் பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது தான் என்பது உண்மை, தான் தோல்வியடைந்த ஒருவனாக இருந்தபோதிலும், அதை மறந்து அடுத்தவரின் வெற்றியில் சந்தோஷப்படும் ஒருவனாகவே ஜெனிஸில் வாழ்கிறான். மனத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் தனக்குப் பிடித்த ஒரு கலையை வாழ்வின் இறுதி வரை எடுத்துச் செல்ல முடியாவிட்டாலும் தன்னைப் போல ஒரு நூறு பேரை உருவாக்க அவனால் முடிகிறது. காரணம் அவன் மூளையால் இயங்குபவனல்ல, மனத்தால் அதன் ஈரத்தால் ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக வாழ்பவன். இத்தகைய மனிதர்களின் சதவிகிதம் இந்த மண்ணில் மிகக் குறைவானதே. அவர்களால் தான் இந்த பூமி இன்னும் வாழத் தகுந்த இடமாக உள்ளது. நிச்சயம் செஸ் விளையாடத் தெரிந்தவர்கள் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் இது. செஸ் தெரியாவிட்டாலும் ஒரு குறையும் இல்லை. இந்தப் படம் அனைவரையும் ஈர்த்துவிடும்.

வாழ்வின் மேடு பள்ளங்கள் மற்றும் எவ்வித வெற்றி தோல்வியும் மனத்தை பாதிக்காது என்பதை இந்தப் படத்தில் வெகு நேர்த்தியாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் நேப்பியர் ராபர்ட்சன். க்ளிஃப் குர்திஸ் ஜெனிஸஸாக நடித்து அந்த உண்மை மனிதருக்கு மீண்டும் இறவா புகழ் கொடுத்துள்ளார். இந்தப் படம் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ’தி டார்க் ஹார்ஸ்’ சர்வதேச திரை அரங்குகளில் திரையிடப்பட்டு அதிக கவனம் பெற்று உலகெங்கிலும் திரை ஆர்வலர்களால் ரசித்துப் பாராட்டப்பட்டு வருகிறது. நியூசிலாந்தின் சிறந்த திரைப்படமாக இது கடந்த ஆண்டு பரிசை வென்றது. தவிர சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த துணைநடிகர் என்று பல விருதுகளை அள்ளிக் குவித்தது. இந்த ஆண்டு, 2015 ம் ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த படம் இதுதான். தவிர சான்ப்ராசிஸ்கோ, சியாட்டல், வாஷிங்டன் டிசி, பாம்ஸ் ஸ்ப்ரிங்க்ஸ் போன்ற பிரசித்தி பெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்று பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படம் ’தி டார்க் ஹார்ஸ்.’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.