/

நாகர்கோவிலில் கைதிகளால் கட்டப்பட்ட கற்கோவில்

தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ) வரலாற்றில் நாகர்கோவிலில் உள்ள கற்கோவில் என்ற ஹோம்சர்ச் தனித்துவம் வாய்ந்தது. 

News image
நாகர்கோவில் சிஎஸ்ஐ ஹோம் சர்ச்
Updated On :29 ஆகஸ்ட் 2024, 9:20 am

பி.எஸ்.மீனாட்சிசுந்தரம்

தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ) வரலாற்றில் நாகர்கோவிலில் உள்ள கற்கோவில் என்ற ஹோம் சர்ச் தனித்துவம் வாய்ந்தது. 

200  ஆண்டுகளைக் கடந்து இந்த ஆலயம் இறை வெளிச்சம் பரப்பி வருகிறது. இந்த ஹோம் சர்ச் சிஎஸ்ஐ குமரி பேராயத்தின் தலைமைhd பேரலாயமாகவும் விளங்கி வருகிறது.

இந்த ஆலயம் தென்னிந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான புரட்டஸ்டண்ட் ஆலயம் என்ற பெருமையையும் கொண்டது. தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதல் புரட்டஸ்டண்ட் கிறிஸ்துவரான மயிலாடி வேதமாணிக்கம் முயற்சியால் இந்த தேவாலாயம் கட்டப்பட்டது.

வேதமாணிக்கமும் ஊழியர் வில்லியம் தொபியாஸ் ரிங்கிள் தௌபே என்பவரும் இணைந்து 1806 ஆம் ஆண்டு மயிலாடியில் கிறிஸ்துவ சபை ஒன்றை நிறுவினர்.  இந்த மிஷன் 1818 ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு மாற்றப்பட்டபோது, இதன் பொறுப்புகளை சார்லஸ் மீட் என்பவரிடம் ஒப்படைத்தனர். இவரை அப்போதைய திருவிதாங்கூர் மகாராணி மாவட்ட நீதிபதியாக நியமித்தார்.

Story image

அப்போது நாகர்கோவிலில் பல்வேறு இடங்கள் ராணியால் தானமாக கொடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1819 ஆம் ஆண்டு ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதற்கான பொருள் மற்றும் பண உதவியைத் திருவிதாங்கூர் மகாராணியும், கொச்சி மற்றும் தஞ்சாவூர் மன்னர்களும் வழங்கினர். முழுக்க முழுக்கக்  
கருங்கற்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டதால் இந்த ஆலயத்துக்குக் கற்கோவில் என்ற பெயர் வந்தது.

ஆலய கட்டுமானப் பணியில், சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளே ஈடுபடுத்தப்பட்டனர். ஆலயப் பணிக்காக அவர்கள் அரும்பணியாற்றினார்கள். 

ஆலய கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வரிக்கற்கள், பெரிய அளவில் இருந்ததால் அவற்றைத் தூக்கி வைக்கவும், தடிகளை இழுத்து வரவும், நாகர்கோவில் நாகராஜா கோயில் யானைகள் பயன்படுத்தப்பட்டன.

ஆலயப் பணிகள் நிறைவடைந்து 1844 ஆம் ஆண்டு ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிரேக்க கட்டடக் கலை பின்பற்றப்பட்டுள்ள இந்த ஆலயம்  140 அடி நீளமும், 70 அடி அகலமும் ஒரே நேரத்தில் 2,500 பேர் அமர்ந்து ஆராதனைகளில் பங்கேற்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.

1930 ஆம் ஆண்டு இந்த தேவலாயத்தில்தான் உலகின் மிகப் பிரபலமான மொழியியல் அறிஞர்களில் ஒருவரான ராபர்ட் கால்டுவெல்லின் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.