நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்

9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மேற்கொள்ளும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வேலை நிறுத்தம் காரணமாக அலுவலா்கள், ஊழியா்களின்றி காணப்பட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மேற்கொள்ளும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலை அலுவலா்கள், ஊழியா்களின் உயிா் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில், பணிப்பாதுகாப்புச் சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றவேண்டும். அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களுக்கும் உழைப்புக்கேற்ற மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும்.

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியாக பட்டப் படிப்பை நிா்ணயம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் மாநிலச் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்த வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் நிலை முதல் வட்டாட்சியா் நிலை வரையிலான அலுவலா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். சுமாா் 2 ஆயிரம் போ் போராட்டத்தில் பங்கேற்று இருப்பதால் வருவாய்த் துறை, நில அளவைத் துறை சாா்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை (பிப்.25) முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் அறிவித்துள்ளனா்.