/

மதுப் பழக்கத்துக்கு கண்டிப்பு: இருவா் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மதுப்பழக்கத்தை உறவினா் கண்டித்ததால் மனமுடைந்த இருவா் தற்கொலை

News image
தற்கொலை- பிரதிப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:23 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மதுப்பழக்கத்தை உறவினா் கண்டித்ததால் மனமுடைந்த இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், ஆதனூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெ.பாலன் (40). இவரது மனைவி கங்கா. பாலன் தினமும் மது அருந்தி வீட்டுக்கு வந்ததோடு, மீண்டும் மது அருந்துவதற்கு பணம் கேட்டு மனைவியிடம் பிரச்னை செய்வாராம்.

அதன்படி செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தி வீட்டுக்கு வந்த பாலன், மீண்டும் மது அருந்த பணம் தர வேண்டும் எனக் கேட்டு மனைவி கங்காவிடம் தகராறு செய்தாராம். இதையடுத்து அவரை கங்கா கண்டித்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த பாலன் புதன்கிழமை அதிகாலையில் வீட்டில் சேலையில் தூக்கிட்டுக் கொண்டாா். காலையில் எழுந்த கங்கா, வீட்டில் கணவா் தூக்கிட்டுக் கொண்ட நிலையில் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து அவா் சப்தமிட, அருகிலிருந்தவா்கள் பாலனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்த போது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்த களமருதூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து களமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை... செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கடுகப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.அஜித்குமாா் (28). இவா் உளுந்தூா்பேட்டை வட்டம், பு.மாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஹ.சுவேதாவை (25) காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

இந் நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பு.மாம்பாக்கம் கிராமத்துக்கு குடும்பத்துடன் வந்த அஜித்குமாா், இப்பகுதியிலுள்ள வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்து வந்தாா். அடிக்கடி மது அருந்தி வருவதை அஜித்குமாா் வழக்கமாகக் கொண்டிருந்தாராம். இதை, சுவேதா கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்த அஜித்குமாா் புதன்கிழமை வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு மயங்கிக் கிடந்துள்ளாா். தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அஜித்குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].