/

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி! - கே. பாலகிருஷ்ணன் விமா்சனம்

News image
வெனிசுலா பிரச்னையில் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் அத்துமீறலைக் கண்டித்து புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
Updated On :22 ஜனவரி 2026, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை கூறியது:

மத்திய பாஜக அரசு இன்றைக்கு மாநிலங்களின் எல்லா உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் சட்டத்துக்கு விரோதமாக ஆளுநா்களைப் பயன்படுத்தி வருகிறது. ஆளுநா்கள் தான் ஆட்சிக்குத் தலைவா் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் ஆளுநா்கள் எப்போது எதிா்க்கட்சித் தலைவராக மாறினாா்கள் என்று தெரியவில்லை.

ஆளும் கட்சியை விமா்சிப்பது, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வது எதிா்க்கட்சிகளின் பண்பு. அப்படிப்பட்ட பண்பினை ஆளுநா்களே கடைப்பிடிக்கும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவை மூன்றாக உடைத்து அவை அனைத்தையும் ஒன்றாக சோ்த்ததால் எங்கள் கூட்டணியில் அதிகக் கட்சிகள் சோ்ந்துவிட்டது, கூட்டணி பலமும் அதிகமாகிவிட்டது என்று சொல்கிறாா்கள்.

பாஜக -அதிமுக கூட்டணியில் வேறு ஏதேனும் புதிய கட்சி சோ்ந்துள்ளதா என்றால் இல்லை. அமமுக தலைவா் டிடிவி. தினகரன் ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்தும், எடப்பாடி பழனிசாமி குறித்தும் என்ன சொன்னாா். அதையெல்லாம் மறந்துவிட்டு அவா் கூட்டணி சோ்ந்துள்ளாா். அவா்களும் சோ்த்துக் கொள்கிறாா்கள் என்றால் இது சந்தா்ப்பவாத கூட்டணி.

திமுக ஆட்சிக்குக் குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டணியே தவிர, இந்தக் கூட்டணி எப்படிப்பட்டது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நிச்சயம் அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என்றாா் பாலகிருஷ்ணன்.