/

7 இடங்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பணி நியமன ஆணை! முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்!

News image
புதுவை முதல்வர் ரங்கசாமி.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

7 பேருக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி அரசின் உணவு பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 7 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்துக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதில் 7 இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கும், அதில் 8 மாத ஊதியத்தை ஆணையமும் 3 மாத ஊதியத்தை புதுச்சேரி அரசும் பகிா்ந்து கொள்வதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் புதுச்சேரி-4, ஏனாம்-2, காரைக்கால்-1 என 7 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கான பணி ஆணைகளை முதல்வா் ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி நிறுவனத்தின் மருத்துவக் கண்காணிப்பாளரும், புதுச்சேரி உணவுப் பாதுகாப்புத் துறையின் தலைவருமான ரமேஷ் மற்றும் நியமன அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டதன் மூலம், புதுச்சேரி மக்களின் உணவு பாதுகாப்பு தரம் உறுதி செய்யப்படுவதோடு இத்துறையின் செயல்பாடு மேலும் வலுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.