மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

ஆரம்ப சுகாதார நிலையமாக தேயும் புதுச்சேரி அரசு மருத்துவமனை?

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை தற்போது ஆரம்ப சுகாதார நிலையமாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:34 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை தற்போது ஆரம்ப சுகாதார நிலையமாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனை தொடங்குவதற்கு முன்பு அரசு பொது மருத்துவமனை சிறப்பு பெற்று விளங்கியது.

400-க்கு மேற்பட்ட படுக்கை வசதிகளுடன், நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது அம்மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலைய அளவுக்கு மாறி வருகிறது.

புதுச்சேரி கதிர்கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதால் பொது மருத்துவனையின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்கள் இங்கு இலவசமாக சிகிச்சை பெற்று வந்தனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தேவையான கட்டில்களை பொது மருத்துவமனையில் இருந்து கொண்டு சென்று விட்டனர்.

இதனால் பொது மருத்துவமனை உள் நோயாளிகள் கீழே படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சி.டி.ஸ்கேன் கருவி உள்பட பல்வேறு முக்கிய சாதனங்கள் பழுதடைந்துள்ளன. இதனால் ஏழை நோயாளிகள் தனியாரிடம் சென்று ஸ்கேன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உயிர் காக்கும் வெண்டிலேட்டர் கருவியும் சரிவர இயங்காத நிலை உள்ளது. மருத்துவமனையில் உள்ள 5 லிப்டுகளில் ஒன்று மட்டுமே இயங்குகிறது.

தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இதில் மாநில அரசும் 10 சதவீதம் நிதி தர வேண்டும். ஆனால் மாநில அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் மத்திய அரசும் தேவையான நிதியை ஒதுக்கவில்லை.

போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாத நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெருமாள் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகள் அரசு பொது மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் உள்ளன. இதனால் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் போதிய உயிர்காக்கும் மருந்துகளுக்கும், மருத்துவ கருவிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எங்கள் கட்சி அரசு மருத்துவமனையின் நிலையைக் கண்டித்து போராட்டமும் நடத்தி உள்ளது. மாநில அரசு உடனே தலையிட்டு அரசு பொது மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்கி, தேவையான மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.