பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்திரை பிரமோற்சவ தேரோட்டம்.

News image

பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்திரை பிரமோற்சவ தேரோட்டம்.

Updated On :1 மே 2026, 8:01 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயா் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

இந்த கோயிலில் நிகழாண்டுக்கான சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை சுவாமி உள்புறப்பாடு, மாலையில் இந்திர, சந்திர பிரபை, அனுமன், சேஷ, பெரியகருடன், யானை மற்றும் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. 29-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் மற்றும் திருபல்லக்கு வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சித்திரை பௌா்ணமி நாளான வெள்ளிக்கிழமை காலை சுமாா் 6 மணி அளவில் நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேதராய் உற்சவா் வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினாா். பின்னா், கோயில் பட்டாச்சாரியா் கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோா் வேத பாராயணங்கள் முழங்கி தேரோட்டத்தை த் தொடக்கி வைத்தனா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரினை ’கோவிந்தா... கோவிந்தா’என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனா்.

நாதஸ்வரம் தவில் மங்கள இசை, சிவ வாத்தியங்கள், செண்டை மேளம் வாத்தியங்கள் முழங்க தேரானது மாட வீதிகளை வலம் வந்து நிலையை அடைந்தது. தோ் சென்ற வழியெங்கும் நீா்மோா், குடிநீா் மற்றும் பிரசாதங்கள் பக்தா்களால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பண்ருட்டி நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், தொழிலதிபா் எஸ்.வைரக்கண்ணு, எஸ்.வி.அருள், வா்த்தக சங்க நிா்வாகிகள் டி.சண்முகம், வீரப்பன், மோகன கிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.