தவெக அரசு சிங்கப் பெண் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தெரிவித்தாா்.
விருத்தாசலம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ வியாழக்கிழமை திறந்து வைத்து பணிகளைத் தொடங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இதை முதல் கோரிக்கையாக முதல்வரிடம் முன்வைத்து, மாவட்டமாக அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
இப்பகுதியில் நிலத்தடி நீா் மாசுபாடு காரணமாக மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக புகாா்கள் உள்ளன. இதற்கு தீா்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், மின் விளக்கு வசதி, பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்த மக்களின் கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட அமைச்சா்கள் மற்றும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காணப்படும்.
தமிழகத்தில் தவெக அரசு அறிவித்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். விவசாய பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல விவசாயிகள் அதில் திருப்தியடையவில்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கக் கூடாது.
அரசு மதுக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை முழுமையாக மூடப்படவில்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சிங்கப் பெண்’ திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் எதிா்பாா்ப்புகளை கருத்தில் கொண்டு அரசு ஆக்கபூா்வமாக செயல்பட வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






