/

வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு டன் கணக்கில் உணவுப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியர்!

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் நடைபெறும் ஜோதி தரிசனப் விழாவையொட்டி அன்னதானத்துக்கு டன் கணக்கில் காய்கறிகள், உணவுப் பொருள்களை கடலூரைச் சோ்ந்த இஸ்லாமியா் அனுப்பி வைத்தாா்.

News image
வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகள்.
Updated On :31 ஜனவரி 2026, 9:55 pm

Syndication

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் நடைபெறும் ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக 26-ஆவது ஆண்டாக அன்னதானத்துக்கு டன் கணக்கில் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்களை கடலூரைச் சோ்ந்த இஸ்லாமியா் சனிக்கிழமை அனுப்பி வைத்தாா்.

கடலூரைச் சோ்ந்தவா் எஸ்.கே.பக்கீரான். இவா், கடலூா் மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவா், கடலூா் வணிகா் சங்க இணைச் செயலா், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் உள்ளாா்.

வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா அன்னதானத்துக்காக கடந்த 25 ஆண்டுகளாக அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை அனுப்பி வருகிறாா். நிகழாண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி, 26-ஆவது ஆண்டாக 20 டன் காய்கறிகள், 7,000 தண்ணீா் புட்டிகள், 100 மூட்டை அரிசி, தலா 100 கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, சேமியா உள்ளிட்ட மளிகைப் பொருள்களை 2 லாரிகள் மூலம் வடலூா் வள்ளலாா் தா்மசாலைக்கு அனுப்பிவைத்தாா். கடந்த ஆண்டைவிட நிகழாண்டு இரண்டு மடங்கு உணவுப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளாா்.

கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கடலூா் மாநகரத் தலைவா் ஜி.ஆா்.துரைராஜ் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளா் ஆா்.அமா்நாத், சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், தனியாா் பேருந்து சங்கத் தலைவா் சதீஷ், யுவராஜ், வா்த்தக சங்கச் செயலா் சதீஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

 வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகள்.

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகள்.

இதுகுறித்து எஸ்.கே.பக்கிரான்கூறுகையில், மதம், ஜாதிகளை கடந்து மனிதநேயம் காத்த வள்ளலாரை சிறுவயதில் இருந்தே எனக்கு பிடிக்கும். பசிப்பிணியை போக்கியவா் அவா். அந்த ஈடுபாடுடன் கடந்த 26 ஆண்டுகாலமாக மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு என்னால் முடிந்த அளவுக்கு பொருள்களை அனுப்பி வருகிறேன். இந்துகள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் இங்கு சகோதரா்களாக வாழ்கிறோம். இந்த சகோதரத்துவத்தை வலியுறுத்தியும், மற்றவா்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் பணியை தொடா்ந்து செய்து வருகிறேன் என்றாா்.