/

பிடிஓ அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: இருவா் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

அரசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்களுக்கு வீடுகள் ஒதுக்காததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்த இருவரை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக வெங்கடேசன் பணியாற்றி வருகிறாா். இந்த அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்த மேல் பூவாணிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ், ரூபன் ஆகியோா் தங்களுக்கு மேல் பூவாணிக்குப்பம் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யவில்லை எனக் கூறி தகராறில் ஈடுபட்டனா்.

மேலும், அவா்கள் புட்டியில் கொண்டுவந்திருந்த பெட்ரோலை உடலிலும், அலுவலகத்தினுள்ளும் ஊற்றி அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் பாக்கியராஜ், ரூபன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.