பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்ய ரூ.10 ஆயிரம் வசூல்?
ஆம்பூர், பிப். 8: ஆம்பூர் அருகே கிராமங்களில் பசுமை வீடுகள் கட்டுவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ரூ.10 ஆயிரம் வசூலிப்பதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு கிராமங்களி


ஆம்பூர், பிப். 8: ஆம்பூர் அருகே கிராமங்களில் பசுமை வீடுகள் கட்டுவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ரூ.10 ஆயிரம் வசூலிப்பதாக பரவலாக புகார் எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு கிராமங்களில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒரு பசுமை வீடு கட்டுவதற்கு ரூ.1.80 லட்சம் அரசால் வழங்கப்படுகிறது. வீட்டுக்கான கட்டடம் கட்டுவதற்கு ரூ.1.50 லட்சம், அதில் சூரிய சக்தி சாதனங்கள் பொருத்துவதற்கு ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.1.80 லட்சம் வழங்கப்படுகிறது.
பசுமை வீடுகள் திட்டப் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக, ஊராட்சிகளில் கடந்த ஜனவரி 26-ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் பூர்த்தி செய்து அளிக்கும் விண்ணப்பங்களை ஆய்வுசெய்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம் அளிக்கும்போது, அவர்கள் ரூ.10 ஆயிரம் வழங்கினால் மட்டுமே வீடு ஒதுக்கீடு செய்யப்படும், இல்லாவிட்டால் வீடு ஒதுக்கீடு கிடையாது என்று கறாராக கூறுகிறார்களாம்.
ஒரு சில ஊராட்சிகளில் ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என ஊராட்சி மன்றத் தலைவர்கள் பணம் வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இத் திட்டத்தில் பயனாளிகளே வீட்டை கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத் தலைவர்களே கட்டட ஒப்பந்ததாரரை ஏற்பாடு செய்து, வீடுகள் கட்டித் தர ஏற்பாடு செய்துள்ளனராம். அதனால் அந்த ஒப்பந்ததாரருக்கு முன்பணம் தர வேண்டும், ரூ.30 ஆயிரம் கொடுங்கள் என பயனாளிகளிடம் வசூலிப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.
இத்தகைய நிலை பரவலாக அனைத்து பகுதிகளில் நிலவினாலும் ஆம்பூர் அருகே மாதனூர், பேர்ணாம்பட்டு ஒன்றியப் பகுதிகளில் பல ஊராட்சிகளில் பயனாளிகளிடம் கட்டாயப்படுத்தி பணம் வாங்கும் நிலை உள்ளது. இப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இத் திட்டத்தை புகாருக்கு இடமின்றி, வெளிப்படையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் பொதுமக்களின் புகார் குறித்து, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாதேவியிடம் கேட்டபோது, இதுகுறித்து எங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...