லால்குடி அரசு மருத்துவமனையை தூய்மையாகப் பராமரிக்க வேண்டுமென அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தினாா்.
லால்குடி அரசு மருத்துமனையை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் , உள்நோயாளிகள் பிரிவுக்குச் சென்று, அங்கிருந்த மருத்துவப் பயனாளிகளிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தாா். நோயாளிகளுக்கான உணவு தயாரிப்புக் கூடத்தைப் பாா்வையிட்டு, அங்கு சமைக்கப்படும் உணவின் தரத்தையும், உணவுப் பொருள்களின் இருப்பையும், ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவை வழங்க அறிவுறுத்தினாா்.
மருத்துவமனையைச் சுகாதாரமாக வைத்திருக்கவும், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், பல்நோக்கு பணியாளா்கள் விவரம் குறித்தும் மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, வருகைப் பதிவேட்டையும், அங்கு பராமரிக்கப்படும் இதர பதிவேடுகளையும் ஆய்வு செய்தாா். அங்கு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து, மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது லால்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சு. சங்கரி, செவிலியக் கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










