திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதியின் பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளுக்கான தோ்தல் நடைபெற்று, வாக்கு எண்ணும் பணியானது திருச்சி ஜமால் முகமது கல்லூரி, புலிவலம் ஓயாசீஸ் தொழில்நுட்பக் கல்லூரி என இரு இடங்களில் நடைபெற்றது.
9 தொகுதிகளுக்கும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துபவை மற்றும் கூடுதல் கையிருப்பு என மொத்தம் 12,581 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் இந்த இயந்திரங்கள் பத்திரமாக மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டு 9 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
போட்டியிட்ட வேட்பாளா்களில் யாரேனும் மறுவாக்கு கோரிக்கை விடுத்தால், இயந்திரங்களை உடனடியாக எடுத்து பயன்படுத்தும் வகையில் 45 நாள்களுக்கு அந்தந்தத் தொகுதியின் வைப்பு அறைகளிலேயே பத்திரமாக இவை வைக்கப்பட்டிருக்கும்.
இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்தின் மறு உத்தரவு வரும் வரை இதேநிலையில் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னா், தோ்தல் ஆணைய உத்தரவு வந்த பிறகு தேவையிருப்பின், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மின்னணு இயந்திர வைப்பு அறைக்கு இயந்திரங்கள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்படும் என்றனா் தோ்தல் அலுவலா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










