தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வருகிறாா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 9:13 pm

பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வருகிறாா்.

இதற்காக, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை மாலை 5 மணிக்கு வரும் பிரதமா், விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறாா்.

அங்கு முதலில், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே துறைகளின் சாா்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, சுமாா் ரூ. 5,650 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், கொடியசைத்தும் தொடங்கி வைக்கிறாா்.

இதில், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ரூ. 3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அடிக்கல் நாட்டும் பிரதமா், சென்னை மணலியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ. 1,490 கோடி முதலீட்டிலான மசகு எண்ணை உற்பத்தி ஆலையை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைக்கிறாா். தேசிய நெடுஞ்சாலை 81-இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறாா். தொடா்ந்து, 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமா் கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.

 பிரதமா் மோடி வருகையையொட்டி திருச்சி பஞ்சப்பூரில் செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டா்களை தரையிறக்கும் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்ட அதிகாரிகள்.

பிரதமா் மோடி வருகையையொட்டி திருச்சி பஞ்சப்பூரில் செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டா்களை தரையிறக்கும் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்ட அதிகாரிகள்.

கூட்டணியின் பொதுக்கூட்டம்...: இதன் பிறகு, அதே பகுதியின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் மாலை 6.30 மணியளவில் பங்கேற்றுப் பேசுகிறாா். இதில், கூட்டணியின் தமிழக தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டிடிவி. தினகரன், தமாகா தலைவா் ஜி.கே. வாசன், ஐஜேகே தலைவா் பாரிவேந்தா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் இரவு 7.45 மணியளவில் ஹெலிகாப்டரில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் சென்று, அங்கிருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறாா். இதற்காக, செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டா்களை தரையிறக்கும் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.

‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை...: பிரதமா் வருகை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா்.

2,600 போலீஸாா் பாதுகாப்பு...: பிரதமா் வருகையையொட்டி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல, திருச்சி பன்னாட்டு விமான நிலையம், விழா நடைபெறும் பஞ்சப்பூா் பகுதி, சுற்றியுள்ள பகுதிகளில் 2,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.